புதுடில்லி, செப்.20 அரியானா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 7 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் அரியானா மக்களுக்கு 7 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. இது தொடர்பாக டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று (19.9.2024) கூறியதாவது: அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்குவோம். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்குவோம். உருளைகளுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு ரூ.6,000 ஓய்வூதியம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 2 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவோம். இவ்வாறு கார்கே கூறினார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், அரியானா மேனாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, அரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பான் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
டில்லியின் புதிய முதலமைச்சர்
ஆதிஷி மார் லேனா சிங் நாளை பதவி ஏற்பு
புதுடில்லி, செப்.19 டில்லியின் புதிய முதலமைச்சராக ஆதிஷி மர்லேனா சிங் நாளை (21.9.2024) பதவியேற்கிறார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி திகார் சிறையில் இருந்த அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 13-ஆம் தேதி விடுதலையானார். அவர் முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது. கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.
இந்த சூழலில் கடந்த 17-ஆம் தேதி முதலமைச்சர் பதவியிலிருந்து கேஜ்ரிவால் விலகினார். அன்றைய தினம் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆதிஷி மர்லேனா சிங், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டில்லி துணைநிலை ஆளுநரை சந்தித்த அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை துணைநிலை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து டில்லியின் புதிய முதலமைச்சராக ஆதிஷி மர்லேனா சிங் நாளை (21.9.2024) பதவியேற்கிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆம் ஆத்மி நேற்று (19.9.2024) வெளியிட்டது. ஆதிஷி உடன் 5 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். கோபால் ராய், சவுரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹூசைன் ஆகிய 4 பழைய அமைச்சர்களும் முகேஷ் என்ற புதியவரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்வார்கள் என்று ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.