கல்லூரியில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் 10க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி உள்ளது ஒடிசா மாநில பாஜக அரசு.
ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் உள்ள அரசு நடத்தும் பராலா மகாராஜா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 7 மாணவர்கள், மாட்டி றைச்சி சமைத்ததாகக் கூறி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிகழ்வால் பதற்றம் நிலவியதால் கல்லூரி அருகே தனிப்படை காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
“ஹால் ஆஃப் ரெசிடென்ஸ் விதிகள் மற்றும் நடத்தை விதிகளை” மீறியதற்காக, மாணவர்கள் வெளியேற்றப்பட்டதாக, மாணவர் நலத்துறை டீன் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். வெளியேற்றப்பட்ட மாணவர்களில் ஒருவருக்கு 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆதாரங்களின்படி, வெளியேற்றப்பட்ட மாணவர்கள் முதல் நாள் இரவு விடுதி வளாகத்தில் மாட்டிறைச்சி சமைத்ததாகக் கூறப் படுகிறது. இந்த நிகழ்வு தொடர்பாக மற்றொரு குழு கல்லூரி டீனிடம் புகார் அளித்தது.
பலதரப்பட்ட சமூகமாக, அனைத்து மாணவர்களின் மதிப்புகள் மற்றும் நம்பிக்கை களை மதிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த நிகழ்வு (மாட்டிறைச்சி சமைப்பதாகக் கூறப்படும்) அமைதியின்மை மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது, இது பதற்றமான சூழலுக்கு வழிவகுத்தது. இந்த நிகழ்வில் தொடர்புடையவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கல்லூரிக்குச் சென்று முதல்வரைச் சந்தித்து, மாணவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.
புகாரின் அடிப்படையில், கல்லூரி அதிகாரிகள் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தினர். கல்லூரி வளாகத்திற்குள் தடைசெய்யப்பட்ட சில நடவடிக்கைகளை மாணவர்கள் செய்தார்கள். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் வெளியேற்றப்பட்டனர், அதன்பின்னர் விடுதியில் தங்கியிருந்தவர்கள் வளாகத்தை விட்டு வெளியேறியதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன. 2017 ஆம் ஆண்டு இதே போன்று ஒன்றிய அரசின்கீழ் வரும் அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் மாட்டிறைச்சி விருந்து வைத்தனர் என்று கூறி பலரை வெளியேற்றினர். அந்த கூட்டத்திற்குத் தலைவராக கருதப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மிகவும் திறமையான விண்வெளி ஆய்வு மாணவரை பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கினார் – ஒன்றிய அரசின் அப்போதைய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி.
போராட்ட குணமிக்க ரோகித் வேமுலா தனது கல்வி வாழ்க்கை ஒன்றிய அரசாலேயே முனை முறிக்கப்படுவதைக் கண்டு தாளாமல் தன்னுயிர் மாய்த்துக் கொண்டார்.
மாட்டுக்கறி சமைப்பதோ, சாப்பிடுவதோ பஞ்சமா பாதகமா? இவர்களின் ஹிந்துத்துவாப்படி பார்த்தாலும் மாட்டுக்கறி. அதுவும் பசு மாட்டுக்கறி சாப்பிடுவது சர்வசாதாரணம்தானே! இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டே!
உலகில் பெரும்பான்மையான மக்கள் சாப்பிடுவது மாட்டுக் கறிதானே! உணவுப் பிரச்சினையில் மதத்தைத் திணிப்பதைப் பார்த்தால், இவர்களுக்கெல்லாம் மதம் பிடித்து ஆட்டுகிறது என்பதை அறிய முடிகிறது. மதம் யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து! மனிதனுக்குப் பிடித்தாலும் பேராபத்து!!