* இரண்டாவது முறை வந்த போது நம் மக்கள் படித்து பல உயர் பதவிகளில் சிறந்த விளைவைக் கண்டு மகிழ்ந்தார்!
* தந்தை பெரியார் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தினார்!
வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பீர் –
ஒற்றுமையில் வேற்றுமையைக் காட்டாதீர்!
சிங்கப்பூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
சிங்கப்பூர், செப்.18 சிங்கப்பூர் தமிழர்களே, வேற்றுமை யில் ஒற்றுமை காண்பீர்! ஒற்றுமையில் வேற்றுமை காணாதீர் என்று
என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சிங்கப்பூரில் பெரியார் பிறந்த நாள் விழா!
நேற்று (17.9.2024) மாலை சிங்கப்பூரில் விக்டோ ரியா சாலையில் உள்ள தேசிய நூலகம், பாசிபிலிட்டி அறை 5 ஆம் தளத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
உலகின் தலைசிறந்த மானுட காவலர்!
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடைபெறக்கூடிய இந்த சிறப்பான, உலகின் தலைசிறந்த மானுட காவலர், மனிதநேயத்தின் சிறப்பான உருவாக்கமான அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 146 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, அவர்களுடைய பணியையும் இணைத்து, ஒரு புதுமையான இலக்கியத் தென்றல், வரலாற்றுக் குறிப்புகள் இங்கே நம்மையெல்லாம் வியக்க வைக்கக் கூடிய அளவிற்கு ஆக்கப்படக் கூடிய இந்த அருமையான சிறப்பான முயற்சி – சிங்கப்பூர் நாட்டில் இன்றைக்கு சிறப்பான தனித்தன்மையோடு நடைபெறக்கூடிய ஒரு விழாவாக – கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது. பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவரும், இவ்விழாவின் தலைவருமான திரு.பூபாலன் அவர்களே,
இந்நிகழ்ச்சியில் சிறப்பாக தொகுப்புரையை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்ச்செல்வி ராஜ ராஜன் அவர்களே,
எனவே, பெரியார் பிறந்த விழாவை நடத்துகிறோம் என்று சொன்னபொழுது, இந்த நூலுக்கும், பெரியா ருக்கும் மிகத் தெளிவான பொருத்தங்கள் ஏராளம் இருக்கின்றன.
சமூக விஞ்ஞானத்தினுடைய தத்துவமே,
எதுவும் முடிந்த முடிவல்ல!
அய்யா அவர்கள் சில ஆய்வுகளைச் சொன்னார். பெரியார் சமூக விஞ்ஞானி. சமூக விஞ்ஞானத்தினுடைய தத்துவமே, எதுவும் முடிந்த முடிவல்ல; இதுதான் விஞ்ஞானத்தினுடைய மிகப்பெரிய அடிப்படை!
இந்நூலை சிறப்பாக உருவாக்குவதற்குத் தொகுப்பாசிரியராக, ஆசிரியராக இருப்பதைவிட, மிகக் கடினமான பணி தொகுப்பாசிரியராக இருப்பது.
கூட்டுக் குழு மனப்பான்மைதான்
மிகவும் முக்கியம்!
ஏனென்றால், எதைத் தொகுப்பது? எதை விடுவது? எது சரக்கு உள்ளது? என்று நினைக்க, திகைக்கவேண்டிய அளவிற்கு உள்ள பணியாகும். அந்த அருமையான பணியை, இங்கே இருக்கின்றவர்கள் குறிப்பாக ஒரு நல்ல குழுவோடு செய்திருக்கிறார்கள். அந்தப் பெருமை எல்லோருக்கும் உரியது. ஒரு கூட்டுக் குழு மனப்பான்மைதான் மிகவும் முக்கியம்.
அது அந்தக் கூட்டுக் குழுவிற்குரிய பெருமையே, சாதனையே என்பதை மகிழ்ச்சியோடு சொன்ன அருமைப் பேராசிரியர் அருண் மகிழ்நன் அவர்களே,
சிங்கப்பூரின் பெண் பேராசிரியை
முனைவர் சித்ரா சங்கரன்
அதுபோலவே, பாரம்பரியமான தமிழ் இன உணர்வோடு, சிறந்த ஆய்வுப் பேராசிரியராக, சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் இருந்து, ‘‘பெண்களால் முடியும், எங்களால் முடியும்” என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு நாம் பெருமைப்படத்தகுந்த சிங்கப்பூரின் பெண் பேராசிரியை, நம் அறிவுக் குடும்பத்தை, கல்விக் குடும்பத்தை, மருத்துவக் குடும்பத்தைச் சார்ந்திருக்கின்ற பெருமைக்குரிய அருமை முனைவர் சித்ரா சங்கரன் அவர்கள் இங்கே அருமையாக உரையாற்றினார்கள்.
எல்லாவற்றையும்விட, வரிசையாக சொல்லிக் கொண்டு வந்தால், நம்முடைய அருமைப் பல்கலைக் கழக மாணவி, அருணா கந்தசாமி அவர்களுடைய உரை இருக்கிறதே, அது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், புதிய தலைமுறைகள் உருவாகின்றன என்பதற்கும் உரியதாகும். இந்தப் புதையலைப்பற்றி ஒவ்வொரு வகையாகக் கிண்டிக் கிளறி லேசாகக் காட்டினார்.
சிறப்புரையாற்றிய கழகத் தலைவருக்கு பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் க.பூபாலன் சிறப்பு செய்தார். சிங்கப்பூர் பல்கலைக் கழகப் பேராசிரியை சித்ரா சங்கரன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சிறப்பு செய்தார். ‘ஊர் திரும்பியவர்கள் வேர் ஊன்றியவர்கள்” புத்தகத்தின் தொகுப்பாசிரியரும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் பொதுக் கொள்கை நிறுவனத்தின் சிறப்பு ஆராய்ச்சி ஆலோசகருமான
திரு.அருண்மகிழ்நன் அவர்களுக்கு, பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் கலைச்செல்வன் சிறப்பு செய்தார். நூல் திறனாய்வு செய்த சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக மாணவி அருணா கந்தசாமிக்கு, பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் கவிதா மாறன் சிறப்பு செய்தார் (சிங்கப்பூர், 17.9.2024).
அவ்வளவு சுலபமாக இந்நூலை ஆய்வு செய்ய முடியாது!
இந்தப் புத்தகத்தை அவர் ஆய்வு செய்யப் போகிறார் என்று சொன்னவுடன், எனக்கே ஒரு வியப்பு – ஏனென்றால், அவ்வளவு சுலபமாக இந்நூலை ஆய்வு செய்ய முடியாது.
ஏனென்றால், இந்த நூலை மூன்று முறை படித்தி ருக்கின்றேன். ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாள் விழா மலரை வெளியிடுவோம். அதில் என்னுடைய கட்டுரையில், இந்தப் புத்தகத்தினுடைய கருத்துரையை மய்யப்படுத்தித்தான் எழுதியிருக்கிறேன்.
ஆகவே, அப்படிப்பட்ட சிறப்பான இந்த அருமையான நூலையும், பெரியாருடைய பிறந்த நாள் விழாவையும்
இணைத்திருக்கின்ற இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள சான்றோர் பெருமக்களே!
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன்!
இந்த நூல் உருவாவதற்குக் காரணமானவர்கள் என்று பலரைச் சொன்னார்கள் அல்லவா – அதிலே மிகப்பெரிய பங்களிப்பு நம்முடைய மேனாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய பாராட்டுதலுக்குரிய திரு.தினகரன் அவர்களுடைய அற்புதமான ஒத்துழைப்பாகும்.
அதேபோல், இங்குள்ள அத்துணைப் பேரும் அறி கமானவர்கள்தான் – ஒவ்வொருவரையும் தனித்தனியே நான் சொன்னால், நேரமாகிவிடும் – எனக்கு அரை மணிநேரம் கொடுத்திருக்கிறார்கள். ஒருவேளை அதற்குள் என்னுரையை முடிக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.
அன்பான வணக்கத்தினை, கனிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஏனென்றால், ஒரு கடலை அளவெடுங்கள்; மலையை தரைமட்டமாக்குங்கள் என்று சொல்வதுபோல இருக்கக்கூடிய சூழ்நிலை. எனவேதான், இங்கே இருக்கக்கூடியவர்கள் மதிப்பிற்குரியவர்கள், அன்பிற்கு ரியவர்கள், பாசத்திற்குரியவர்கள் அனைவருக்கும் பொதுவாக என்னுடைய அன்பான வணக்கத்தினை, கனிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை இந்த ஏற்பாட்டிற்கு நான் ஒப்புக்கொண்டதே, எனக்கு மிகப்பெரிய அளவிற்குரிய ஒரு வாய்ப்பாகும்.
ஏனென்றால், வள்ளுவருடைய குறளை இங்கே சிறப்பாக எடுத்துச் சொன்னார் தொகுப்பாளர்.
ஒவ்வொரு குறளும், ஒவ்வொரு செல்வம். அப்படி வருகின்ற நேரத்தில்,
‘‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு” (குறள் 783)
இதைவிட ஓர் அறிவு விருந்து
வேறு இருக்க முடியாது!
இங்கே ‘‘நவில்தொறும் நூல் நயமும் இருக்கின்றது;’’ ‘‘பயில்தொறும் பண்டையாளர் தொடர்பும்” இங்கே முழுமையாக இருக்கிறது.
எனவே, இதைவிட ஓர் அறிவு விருந்து – இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு வேறு இருக்க முடியாது.
ஆதாரங்களோடு பேசி பழக்கப்பட்டவர்கள், ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டோம்!
அந்த வகையில், சிறப்பான இந்த நூலைப் பொறுத்தவரையில், ஒரு பகுதியை நான் குறிப்பாக எடுத்துச் சொல்லவேண்டும். புத்தகங்களில் இருக்கும் குறிப்புகளை கூட்டங்களில் எடுத்துச் சொல்லி பழக்கப்பட்டவன். நான் எப்பொழுதும் கூட்டங்களுக்குச் சென்றாலும், ஒரு புத்தக மூட்டை பை இருக்கும். ஆதாரங்களோடு பேசி பழக்கப்பட்டவர்கள், ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டோம்.
ஏனென்றால், அவர்கள் இங்கே சொன்னதுபோன்று சில நேரங்களில் உற்சாகத்தோடு எதை வேண்டுமானாலும் பேசுவார்கள்.
இங்கே இருக்கிறது என்றால், இங்கே இருக்கிறது என்று காட்டுவதற்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருப்போம். அந்த வகையில்தான், இது கனமான ஒரு மூட்டை என்று நினைக்கவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், சில பேர் மூட்டையை மட்டுமே பேச்சில் காட்டுகிறார்கள்.
தந்தை பெரியாரின் 146 ஆவது
பிறந்த நாள் விழா – வெறும் கொண்டாட்டம் மட்டும் அல்ல!
ஆனால், இங்கே முழுக்க முழுக்க நாம் அறிவார்ந்த செய்திகளை எடுத்துச் சொல்லுகின்ற நேரத்தில், தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் விழா என்பது வெறும் கொண்டாட்டம் மட்டும் அல்ல; அதனால் ஏற்படுகின்ற பலன் என்ன? என்பதுதான் மிகவும் முக்கியம். அதை இங்கே அழகாக எடுத்துச் சொன்னார்கள்.
‘‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்’’
இந்தத் தலைப்பே முதலில் பாராட்டப்பட வேண்டிய தலைப்பாகும். நான் நண்பர்கள் மத்தியில் சொன்னேன். இந்தத் தலைப்பே, ‘‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்” இது ஈர்க்கக் கூடிய தலைப்பாகும். தலைப்புக்காகவே முதலில் அவர்களைப் பாராட்டவேண்டும்.
ஊர் திரும்பியவர்களுக்கும், வேர் ஊன்றிய வர்களுக்கும் என்ன நிலைப்பாடு? இந்த இரண்டையும் ஓர் ஆய்வு செய்யலாம்.
ஊர் திரும்பியவர்கள், திரும்பாதவர்களாக, வேர் ஊன்றியவர்களாக இருந்தார்கள்; அந்த வேர் ஊன்றியவர்களுக்கும், ஊர் திரும்பியவர்களுக்கும் உள்ள பின்னணி என்ன? அப்படிப்பட்ட வரலாறு எவ்வளவு ஆழமான வரலாறு என்பதை இந்த நூலிலே பல இடங்களில் பார்க்கலாம்.
தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாள் விழாவையும் – நூல் ஆய்வு இரண்டையும் இணைத்திருக்கிறார்கள். இது பாதி – அது பாதி என்று சொல்லக்கூடிய அளவில், இரண்டும் கலந்து ஒன்றுபடுத்தி இருக்கக்கூடிய ஒரு செய்தி – அதுதான் உங்களுக்கு வியப்பாக இருக்கும்.
‘‘திராவிடர் – தமிழர் – இந்தியர் மாறிவரும் அடையாளங்கள்!’’
அந்த வகையில் நண்பர்களே, 379 ஆம் பக்கத்தில், ‘‘திராவிடர் – தமிழர் – இந்தியர் மாறிவரும் அடையாளங்கள்” என்ற தலைப்பு. இயல் 17 இல், எப்படியெல்லாம் நம்முடைய வேர்கள் இங்கே இருந்தன. இன்றைக்கு விழுதுகள், பழுதில்லாத விழுதுகள். ஊர் திரும்பியவர்களைவிட, வேர் பிடித்தவர்கள் அடையாளத்தோடு இருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்? யார் காரணம்? அடிப்படையிலே யார் யாரெல்லாம் பங்காற்றி இருக்கிறார்கள்? இந்த விழாவினுடைய
அடிப்படைத் தத்துவமே அதுதான் – இங்கே விழா இங்கே நடப்பதற்குக் காரணமும் அதுவே!
பெரியாருக்கும், அதற்கும் என்ன சம்பந்தம்? என்று நினைப்பார்கள். ஆனால், ஊர் திரும்பியவர்களாக இல்லாமல், இன்றைக்கு இங்கே வேர் ஊன்றியதற்காகப் பட்டபாடு இருக்கிறதே, .அந்த சங்கத்திற்கு ஆயிரம் நன்றிகளைச் சொல்லவேண்டும். அரசாங்கத்திற்கு எங்களுடைய தலைதாழ்ந்த நன்றி! தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பாக.
தந்தை பெரியாரின் கருத்து!
ஏனென்றால், இப்படிப்பட்ட ஒரு முயற்சியே, தமிழ்நாடு, தாய்த் திருநாடாக இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசாங்கம்கூட பின்பற்றவேண்டிய ஒரு நிலையே தவிர, அதில் தவறில்லை. யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், புதிய கோணத்திலே, புதிய பார்வையை செலுத்தவேண்டும். அதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்து.
அந்த வகையில் வந்தபொழுது, பல தலைப்புகள், பல அத்தியாயங்களாக இந்த நூலில் வந்திருக்கின்றன. அவர்கள் ஒவ்வொன்றையும் சொன்னார்கள். அவர்கள் சொல்லாத ஒன்றை, இந்தப் புதையலிலிருந்து ஒரு பகுதியை குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக வாய்ப்பு எவ்வளவு கிடைக்கிறதோ, அதை மட்டும் சொல்லு கிறேன்.
மிக முக்கியமான புள்ளிவிவரங்களையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்!
‘‘சிங்கப்பூரின் பல்லின பல் பண்பாட்டுச் சூழலில் தமிழர் என்ற அடையாளத்தின் இடமும், பொருளும் என்ன என்று குறித்த விவாதங்கள் கடந்த காலத்தில் அடிக்கடி நடந்துள்ளன. தமிழ் அடையாளத்தின் வலுவான குறியீடுகளில் ஒன்றான தமிழ்ப் மொழிப் பழக்கம் – அண்மைய ஆண்டுகளில் தமிழர் இல்லங்களில் குறைந்து வருகிறது. ஆனால், 1965 இல் சுதந்திரம் பெற்ற பிறகு கிடைத்திருப்பதைப் போன்ற அதிகாரத்துவ அந்தஸ்தும், அரசாங்க அமைப்புகளின் ஆதரவும், தமிழ் மொழிக்கும், அடையாளத்திற்கும் சிங்கப்பூர் வரலாற்றில் ஒருபோதும் கிடைத்ததில்லை” என்று வரலாற்றை வேகமாகச் சொல்லிவிட்டு, மிக முக்கியமான புள்ளிவிவரங்களையெல்லாம் சொல்லி, இதற்கு அடிப்படையானவர்கள் என்ன என்பதை நம்முடைய மூலவர்களை எடுத்து, எவ்வளவு சங்கடத்தோடு பலவற்றை அவர்கள் கடந்து வந்தார்கள் என்ற நிலைகளைப் பார்க்கிறோம். அதை சுருக்கமாக இந்த நூலில் விளக்கியிருக்கிறார்கள்.
அன்றைக்கு வந்தவர்களும் – இன்றைக்கு வந்தவர்களும் அடிப்படையில் வேறுபாடு உண்டு!
இங்கே வந்தவர்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயமாக தமிழ்நாட்டிலே, இந்தியாவிலே அங்கங்கே இருக்கக்கூடிய ஜாதி முறையினாலே, அழுத்தி வைக்கப்பட்ட நம்முடைய மக்கள் – அன்றைக்கு வந்தவர்களும் – இன்றைக்கு வந்தவர்களும் புலம்பெயர்ந்தவர்களில் பகுக்கும்போது அடிப்படையில் வேறுபாடு உண்டு.
அன்றைக்கு அவர்கள் எல்லாம் தோட்டத் தொழிலாளர்களாகவும், வேலை செய்யக்கூடிய வர்களாகவும் வந்தார்கள். ஆனால், இன்றைக்கு வருகிற வர்கள் பணியாளர்களாக, மற்றவர்கள் அறிவுச் சூழலிலே வளரக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அது நமக்கு மிகப்பெரிய சமூக மாற்றம் – சாதாரண மாற்றம் அல்ல.
திக்குத் தெரியாதவர்கள் தவித்தார்கள்!
அப்படிப்பட்ட சமூக மாற்றத்தை இங்கே சொல்லுகின்ற நேரத்தில், எவையெல்லாம் அன்றைக்குக் காலைப் பிடித்து இழுத்தன? எவைகளால் அவர்கள் ஊர் திரும்பினார்கள்? எவைகளால் அவர்கள் இங்கேயே தடுமாற்றத்தோடு இருந்தார்கள். திக்குத் தெரியாதவர்கள் தவித்தார்கள் என்று அற்புதமாக விளக்குகின்றார்
திரு.திருநாவுக்கரசு அவர்கள் ஒரு கட்டுரையில்.
அந்த வகையிலே, தந்தை பெரியார் அவர்கள் 1929 ஆம் ஆண்டு வருகிறார் -அன்னை நாகம்மையார் அவர்களோடு.
அதேபோல, அவர்கள் முதல் முறையாக தோட்டத் தொழிலாளர்களோடு தன்னை இணைத்துக் கொண்டார். மலாயாவும், சிங்கப்பூரும் இணைந்திருந்த காலகட்டம் அது. நம்மைப் போன்ற பலர் பிறந்திருக்க முடியாது. அந்தக் காலகட்டத்தில் அவர்கள் வந்தபொழுது, எங்கே போனார்கள்? என்றால், வளமையான இடத்தைப் பார்த்து அங்கே போகவில்லை.
சொன்னார்கள் அல்லவா, நான் ஒரு சாதாரண மனிதன் என்று அடக்கத்தோடு சொன்னார்கள். இந்த சாதாரணமானவர்களுக்காகப் பேசியே அவர்களை உயர்த்தியவர் தந்தை பெரியார் அவர்கள்.
துணிவை, தன்மானத்தை, சுயமரியாதையை ஊட்டியவர் தந்தை பெரியார்!
அறிவு ஜீவிகள், அறிவாளர்கள் என்று தங்களை மேல்மட்டத்திலே ஆக்கிக் கொண்டவர்களைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அதேநேரத்தில், அடித்தளத்தில், நாதியற்றவர்களுக்கெல்லாம் நாப்பறை கொட்டி, ‘‘அவர்களை நாதியிலார் என்று சொல்லாதீர்கள்; அவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம்; நாமிருக்கிறோம்” என்ற தன்னம்பிக்கையை, துணிவை, தன்மானத்தை, சுயமரியாதையை ஊட்டியவர் தந்தை பெரியார் அவர்கள்.
அப்படிப்பட்ட சூழலை இந்த நூலின் ஒரு பகுதியில் அழகாக விளக்கிச் சொல்கிறார்.
‘‘சமூகத்தில் தொழிலாளர் வர்க்கத்திலிருந்து தூர விலகிக் கொண்டார்கள் அறிவாளிகள். அந்த நேரத்தில், இந்த மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கும், தோட்டத் தொழிலாள இந்தியருக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இவ்வாறாகச் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தில், உயர் வர்க்கத்துக்கும், ஏழைத் தொழிலாளர் வர்க்கத்துக்கும் இடையே பொருளாதார அடிப்படையிலான பெரும் பிளவு இருந்தது.”
இது பழைய கதை. ஏனென்றால், இன்றைய வரலாற்றில் புதிய தலைமுறை இளம்தலைமுறையினர், ‘‘நாம் எங்கிருந்து வந்தோம்? எப்படி வந்தோம்? கடந்த பாதையில் எப்படி வளர்ந்தோம்?” என்பதையெல்லாம் அவர்கள் தெரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவேண்டும்.
இந்நூலில், அந்தப் பகுதியை கட்டுரையாளர் சிறப்பாக எடுத்துச் சொல்லுகிறார். இந்தக் கட்டுரையாளர், எய்டன் பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக, ஆய்வாளராக இருக்கக் கூடியவர்.
எந்தவிதமான மறைப்பும் இல்லாமல், திரிபுவாதம் இல்லாமல், நடந்ததை அப்படியே எடுத்துச் சொல்கிறார்!
அப்படிப்பட்ட அருமையானவர்களைத் தேர்ந்தெ டுத்திருக்கிறார்கள். அவர் தமிழ்நாட்டுக்காரர்கூட இல்லை. எந்தவிதமான மறைப்பும் இல்லாமல், திரிபு வாதம் இல்லாமல், நடந்ததை அப்படியே எடுத்துச் சொல்கிறார்.
‘‘சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தில், உயர் வர்க்கத்துக்கும், ஏழைத் தொழிலாளர் வர்க்கத்துக்கும் இடையே பொருளாதார அடிப்படையிலான பெரும் பிளவு இருந்தது. வர்க்கப் பிளவோடு சேர்த்து ஜாதி அடிப்படையிலும், சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம் பிளவு பட்டிருந்தது. மலாயாவிலும், சிங்கப்பூரிலும் இந்திய சமூகம் குறித்த தன் முக்கியமான ஆய்வில், இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தில், ‘‘ஜாதிப் பிரிவினை, குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சாதியினர் நடத்தப்பட்ட விதம், பெரிய பிரச்சினையாக இருந்தது”
வருமுன்னர் காக்கின்ற
அறிவை நமக்கு மட்டுமல்ல…
இதைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. இன்றைக்கு இருக்கின்ற நிலையில், ஜாதியைப்பற்றி ஏன் பேசவேண்டுமா? என்று கேட்கக்கூடியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால், நம்முடைய நிலை என்ன என்பதைப் புரிந்துகொண்டால்தான், இன்றைக்கு எப்படி மாற்றங்கள் வருகிறது என்பதைப் புரிந்துகொண்டு, வருமுன்னர் காக்கின்ற அறிவை நமக்கு மட்டுமல்ல, இனி வரக்கூடிய தலைமுறையினருக்குக் கூட எடுத்துக்காட்டக் கூடிய வாய்ப்பு வரும் இதில், என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.
மேலும் அதில்,
‘‘சாதிப் பிரிவினை, குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சாதியினர் நடத்தப்பட்ட விதம், பெரிய பிரச்சினையாக இருந்தது” என்கிறார் ஆய்வாளர் அரசரத்தினம். ‘‘இந்தியாவிலிருந்து சடங்கு சம்பிரதாயங்களோடு பல சாதியக் கட்டுப்பாடுகளும், மலாயா, சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டன” என்று கூறுகின்றார்.
எதைக் கடலிலே தூக்கி எறிந்துவிட்டு வரவேண்டுமோ, அதை பத்திரமாகக் கொண்டு வந்தார்கள்!
எனவே, எதைக் கடலிலே தூக்கி எறிந்துவிட்டு வரவேண்டுமோ, அதைப் பத்திரமாகக் கொண்டு வந்தார்கள். அதைக் கொண்டு வந்து இங்கே நிலை நிறுத்தினார்கள். இன்றைக்கு ஏன் வளரவில்லை? வளரவேண்டிய அளவிற்கு, முன்னேற வேண்டிய அளவிற்கு ஏன் வளரவில்லை? எல்லோருக்கும் ஆறறிவுதான். எந்த நாட்டுக்காரராக இருந்தாலும், மனிதராக இருந்தால். மனிதன் என்று சொன்னால், மானிடப் பற்று. பெரியார் அவர்களுடைய பார்வையே மானுடப் பற்றுதான். அவருக்கு மனிதம்தான் முக்கிய மானதாகும்.
அவருக்குக் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பகுதி என்று விமர்சனம் செய்யலாம், அதற்குப் பிறகு விளக்கம் சொல்லுகிறேன்.
அந்த வகையில்,
‘‘பல சாதியக் கட்டுப்பாடுகளும், மலாயா, சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டன. அந்தி மக் கிரியைகள், எரியூட்டுச் சடங்கின்போது பறையடித்தல், இந்து ஆலயங்களில் நுழைய அனுமதி யின்மை போன்றவற்றிலிருந்து பாகுபாடுகளை எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.
கல்வி அறிவு பெற்றோரின் விகிதமும் அப்போது குறைவாக இருந்தது. பல தொழிலாளர்கள் எழுதப் படிக்க இயலாதவர்களாக இருந்தனர். கல்வி பெற்று அதன்மூலம் சமூகத்தில் முன்னேற அவர்களுக்கு வழியில்லாமல் இருந்தது.”
பள்ளிக்கூடங்களை வையுங்கள்; கள்ளுக்கடைகள் தேவையில்லை என்றார் பெரியார்!
அந்த இடத்தில்தான் நண்பர்களே, வியப்பாக இருக்கிறது – தந்தை பெரியார் அவர்கள், ஒவ்வொரு தோட்டத் தொழிலாளரிடமும் சென்று, ‘‘இங்கே நீங்கள் பள்ளிக்கூடங்களை வையுங்கள்; கள்ளுக்கடைகள் தேவையில்லை” என்று தெளிவாகச் சொல்லி, தோட்டத் தொழிலாளியின் மகன் தோட்டத் தொழிலாளியாக வரக்கூடாது; அவன் பெரிய படித்தவனாக, பணியாற்றக் கூடியவனாக வந்தால்தான், சமுதாய மாற்றம் ஏற்படும் என்று சொன்னார்கள்.
1929 ஆம் ஆண்டில், எவ்வளவு மடமையில் இருந்தார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்லவேண்டுமானால் நண்பர்களே, அந்தக் காலகட்டத்தில் மலாயா, சிங்கப்பூர் என்று தனித்தனி நாடுகள் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியும்.
‘‘பெரியார் வாழ்க்கை வரலாற்றில்’’
சாமி.சிதம்பரனார்!
அங்கே நடைபெற்ற ஒரு நிகழ்வினை, சாமி.சிதம்பரனார் அவர்கள், ‘‘பெரியார் வாழ்க்கை வரலாற்றில்” அழகாக எழுதுகிறார்.
ஒரு தோட்டத்திற்குச் சென்று, குடித்துவிட்டு, மயங்கிக் கிடக்கின்றவர்களையெல்லாம் தட்டி எழுப்பி, உட்கார வைத்து, அந்த மக்கள் உணரக்கூடிய அளவிற்குப் பேசி, இங்கே அவசியம் நீங்கள் ஆரம்பப் பள்ளிகளை வையுங்கள் என்று சொன்னார்.
அதற்கு முன்புவரை ஒரு கோவிலை வைத்துக்கொண்டு கும்பிட்டார்கள். அடுத்தபடியாக அவர்களுக்கு மது.
ஒரு பக்கத்தில் பக்தி போதை – இன்னொரு பக்கம் இந்த மது போதை.
இரண்டு போதையை மட்டும் அந்தத் தொழிலாளர்கள் நினைத்தார்களே தவிர, கல்விப் பாதையைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.
பக்தியா? புத்தியா? என்றால்,
புத்தியை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்!
அந்தக் காலகட்டத்தில்தான், அவர்களுக்குப் பக்தி ஒரு பக்கம் இருக்கட்டும்; அதைவிட முக்கியம் புத்தி வரவேண்டும். பக்தியா? புத்தியா? என்றால், புத்தியை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்; பிறகு தானே நீங்கள் எதைவேண்டுமானாலும் முடிவு செய்யலாம் என்று சொல்லக்கூடிய கட்டத்திற்குத் தந்தை பெரியார் வந்தார்.
அப்படி வருகின்ற நேரத்தில், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் தந்தை பெரியார் அவர்கள் பேசி முடித்துவிட்டுப் போகிறார்.
அந்தக் காலகட்டத்தில் எப்படி இருந்தது என்பதை ஒரு சிறு உதாரணத்தின்மூலம் இன்றைய தலைமுறைக்குச் சொல்லவேண்டும்.
தந்தை பெரியாருக்குத்
தோட்டத் தொழிலாளியின் வீட்டில் விருந்து!
தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஒன்றரை மணிநேரம் பேசி முடித்துவிட்ட தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு தோட்டத் தொழிலாளியின் வீட்டில், விருந்து கொடுக்கிறார்கள்; தந்தை பெரி யாரும், நாகம்மையார் அவர்களும் அங்கே சென்று காத்திருக்கிறார்கள்.
அவசர அவசரமாக ஒரு மூதாட்டி, 25 வயதுள்ள ஒரு பெண்ணை வேகமாக அழைத்துக்கொண்டு வந்து வியர்க்க விறுவிறுக்க, ‘‘அய்யா, தமிழ்நாட்டிலிருந்து வந்தவர் இங்கேதான் இருக்கிறாரா?” என்று கேட்டுவிட்டு, ‘‘என்னங்க உங்க உபன்யாசத்தைக் கேட்கவேண்டும் என்று நாங்கள் 20 கல்லுக்கு அப்பால் உள்ள தோட்டத்திலிருந்து வந்திருக்கின்றோம்” என்று கேட்ட அந்த மூதாட்டி, ‘‘இவர்தானா?” என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார்.
அப்பொழுது தாடி கூட வைக்கவில்லை பெரியார் அவர்கள். மலாயாவிலிருந்து திரும்பிய பிறகுதான் அவர் தாடி வைக்கத் தொடங்கினார்.
அப்படிப்பட்ட அவரைப் பார்த்து அந்த மூதாட்டி, ‘‘அய்யா, இது என்னுடைய மகள்” என்று சொல்லி, காலில் விழும்மா என்று அந்தப் பெண்ணிடம் சொன்னார்.
காலில் விழக்கூடாது என்று தந்தை பெரியார் சொன்னார்.
உங்களுக்கு என்ன வேண்டும் அம்மா என்று தந்தை பெரியார் கேட்டார்.
‘‘உங்கள் உபதேசத்தைக் கேட்டு, நாங்கள் வரம் வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று வந்தோம்!”
‘‘உங்கள் உபதேசத்தைக் கேட்டு, நாங்கள் வரம் வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று வந்தோம். முன்பே உங்கள் உபன்யாசம் முடிந்து போய்விட்டது என்று சொன்னார்கள். உங்களைப் பார்த்து, வரம் வாங்கிக் கொண்டு போகவேண்டும் என்று வந்தோம்.
உங்கள் உபன்யாசம் முன்பே முடிந்துவிட்டது என்பது எங்களுடைய கெட்ட வாய்ப்பு. என்னுடைய பெண்ணுக்குத் திருமணமாகி 10 ஆண்டாகிறது. இதுவரைக்கும் குழந்தையே பிறக்கவில்லை. பெரியவர் வருகிறார் என்று சொன்னார்கள். அவரைப் பார்த்து வரம் வாங்கினால், குழந்தை பிறக்கும் என்று சொன்னார்கள். அதற்கு நீங்கள் என் பெண்ணை ஆசீர்வதிக்கவேண்டும்” என்று சொன்னார்.
மூடநம்பிக்கையை ஒழிக்கவேண்டும் என்று அங்கே பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறார் பெரியார்.
பெரியார் அவர்கள், ‘‘இல்லையம்மா, அதுபோன்ற நம்பிக்கை உள்ளவன் நான் அல்ல; அதெல்லாம் தவறு என்று நினைக்கின்றவன். அதுபோன்று என்னால் செய்ய முடியாது. அதையெல்லாம் செய்யக்கூடாது என்று” சொன்னார்.
‘‘என்னிடம் சொல்லி அனுப்பியவர்கள் சொன்னார்கள், அவர் மிகவும் அடக்கமானவர். அவர் எளிதில் ஒப்புக்கொள்ளமாட்டார். நீ வற்புறுத்தி சொல்லவேண்டும் என்று.
உங்களிடம் ஆசீர்வாதம் வாங்காமல், வரம் வாங்கா மல் இங்கே இருந்து நாங்கள் போவதாக இல்லை” என்று அந்த மூதாட்டி சொன்னார்.
எங்களுக்கே குழந்தை இல்லை!
உடனே பெரியார் அவர்கள், நாகம்மையாரை அழைத்தார், ‘‘இவர்கள்தான் என்னுடைய துணைவியார்; எங்களுக்கே குழந்தை இல்லை. ஒரு குழந்தை பிறந்து, குழந்தை பருவத்திலேயே அது இறந்துவிட்டது; அதற்குப் பிறகு எனக்குக் குழந்தையே இல்லை. அதனால் நான் வருத்தப்படவில்லை. நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் எங்கள் குழந்தைகள்தான். எங்களுக்கு ஜாதி, மதம் என்பது கிடையாது” என்று சொன்ன பிறகும்கூட,
அந்த மூதாட்டியார், ‘‘என்ன சொன்னாலும் நாங்கள் போகமாட்டோம்; நீங்கள் ஆசீர்வாதம் செய்தால்தான் போவோம்” என்று சொன்னார்.
வேறு வழியில்லாமல் பெரியார் அவர்கள், ‘‘சரிம்மா, நீங்கள் நினைத்தபடி நடக்கும் போங்கள்” என்று சொன்ன பிறகுதான் அந்த மூதாட்டி சென்றார்.
அந்த அளவிற்கு மக்கள் மூடநம்பிக்கையில் இருந்த ஒரு சமுதாயத்தில், அடுத்ததாக 1954 ஆம் ஆண்டு பர்மாவிற்குச் சென்றுவிட்டு, இங்கே வருகிறார் தந்தை பெரியார் அவர்கள்.
பெரியாரின் தாக்கம், பெரியாரின் அறிவுரை
அப்பொழுது அவருக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள்; வரவேற்பு கொடுத்தவர்கள் எல்லாம் இளைஞர்கள் – பட்டப் படிப்பு முடித்தவர்கள்; பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள். பெரியாரின் தாக்கம், பெரியாரின் அறிவுரை அது பயன்பட்ட ஓர் அறிவுரையாக மாற்றப்பட்டது கல்வி வாய்ப்புகளாக.
அதை அற்புதமாக இந்த நூலில், கட்டுரையாளர் மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கிறார்.
அதனால்தான், இந்த நூலுக்கும், இந்த ஆய்வுக்கும், பெரியார் பிறந்த நாள் விழாவிற்கும் பொருத்தம் இருக்கிறது; ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டதல்ல.
அன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் ‘நாயக்கர்’ என்றுதான் எழுதினார்கள்!
ஆராய்ச்சியாளர்கள் எப்பொழுதும் அன்றைக்கு அழைத்த பழைய பெயரைத்தான் ஆய்வுகளில் போடுவார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் கேம்பர்லா பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்த ஒருவர், பெரியாரை அவர்களைச் சந்தித்து, அதற்குப் பிறகு எழுதிய ஆய்வில், ‘‘நாயக்கர்” என்றுதான் எழுதியிருக்கிறார்.
நம்முடைய நாட்டில் அண்ணா அவர்கள் அதைப் பார்த்துவிட்டு, ‘‘என்ன, நாயக்கர் என்று போட்டி ருக்கிறீர்களே, ஜாதிப் பட்டத்தை 1927 ஆம் ஆண்டிலேயே அவர் அதை விட்டுவிட்டார்களே” என்று கேட்டார்.
அண்ணாவின் பதில்!
‘‘நாங்கள் பதிவு செய்ததே அந்த அடையாளத்திற்குப் பதிவு செய்துவிட்டோம்; காரணம், பிஎச்.டி., தீசிஸ்ல எங்கள் கைடு ஒப்புக்கொள்ளமாட்டார்” என்று சொன்னார் ஆய்வாளர்.
‘‘உங்கள் கைடு ஒப்புக்கொள்ளமாட்டார்; ஆனால், பெரியார் ஒப்புக்கொள்ளமாட்டாரே” என்றார்.
ஆய்வாளர் கட்டுரையில் தொடருகிறார்,
‘‘‘பெரியார்’ என்று மக்களிடையே மிகப் பிரபலமான ஈ.வெ.இராமசாமி நாயக்கரின் தலைமையில் 1925 இல் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம்தான் அறிவு ஜீவிகளின் மொழியை விடுத்துச் சாதாரண மக்களுக்குப் பொருத்தமான சொல்லாடல்களைக் கண்டடைந்து அதன்மூலம் திராவிட உணர்வை மக்களின் இயக்கமாக ஆக்கியது. சுயமரியாதை இயக்கம் சமுதாயச் சீர்திருத்தத்தைக் குறி வைத்ததால், ‘தீண்டப்படாதவர்கள்’ உள்பட அனைத்துத் தாழ்த்தப்பட்ட சாதிகளின் முன்னேற்றத்திலும் காத்திரத்தோடு கவனம் செலுத்தியது.”
சிங்கப்பூர் நாடு அதை சிறப்பாகச் செய்திருக்கிறது!
தமிழ்நாட்டில்கூட இப்படிப்பட்ட வரலாறு பதிவு செய்யப்படவில்லை. சிங்கப்பூர் நாடு அதை சிறப்பாகச் செய்திருக்கிறது. அதற்கு நன்றி செலுத்துவதற்காகத்தான் இந்த சிறப்பான நிகழ்விற்கு நான் ஒப்புக்கொண்டேன். கட்டுரையாளர்களைப் பாராட்டவேண்டும்; அரசாங்கத்தைப் பாராட்டவேண்டும்; அந்த மரபுகளை நாங்கள் பின்பற்றவேண்டும்.
ஏனென்றால், மரபு என்று சொன்னாலே, அதற்கு வேறு பொருள் கொள்வார்கள். மரபை மாற்றாதே என்று சொல்வார்கள்.
ஆனால், மரபை உடைமையாக ஆக்கிய நாடு இந்த நாடு. மரபை கடமையாக ஆக்கியிருக்கிறது. உங்க ளுக்குப் பாராட்டு. அதைச் சொல்வதற்காகத்தான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம்.
‘‘அறிவுக்கு அறிவு தேவையில்லை; செயலுக்கே அறிவு தேவை!’’
பெரியார்தான் எளிய மக்களுக்குப் புரியும்படி, ‘‘அறிவு எதற்கு மனிதனுக்கு வேண்டும்?” என்று கேட்டார்.
அறிவுக்காக அறிவு தேவையில்லை. ‘‘நான் மிகப்பெரிய அறிவாளி” என்று காட்டிக் கொள்வார்கள். பல அறிவுஜீவிகள் அப்படி இருப்பார்கள்.
ஆனால், என்னைப் பொறுத்தவரையில், பெரியார் சொல்கிறார், ‘‘அறிவுக்கு அறிவு தேவையில்லை; செயலுக்கே அறிவு தேவை” என்று.
இங்கே இளைஞர்கள், புதியவர்கள் இருக்கிறீர்கள்; வயது முதிர்ந்தவர்களுக்கு பெரியாரின் உரையைக் கேட்கின்ற வாய்ப்பு இருந்திருக்கும். படித்தவர்களுக்கு எவ்வளவு ஈர்ப்பு இருக்கிறதோ, அதே அளவிற்குப் பாமர மக்களுக்கு ஈர்ப்பு இருக்கும்.
‘‘தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் பெரியார்!”
அதனால்தான் அறிஞர் அண்ணா சொன்னார், ‘‘தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் பெரியார்; அவருடைய வகுப்பு மாலை நேரக் கல்லூரி; மூன்று மணிநேரம் நடக்கும்” என்று.
எளிய மக்களுக்கான உதாரணங்கள், உவமைகள் அவர்கள் நேரிடையாக உணரக்கூடிய அளவிற்குச் சொல்வார்.
பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுது, உவமையைச் சொல்லும்பொழுது, மக்கள் குலுங்கிக் குலுங்கி சிரிப்பார்கள். சிரிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைப்பார்.
தந்தை பெரியாரின் நகைச்சுவை உரை!
ஒருமுறை உரையாற்றிக் கொண்டே, மக்களைப் பார்த்து, ‘‘கல்யாணம் ஆகாதவனைப் பார்த்து, பொண்ணு பார்க்கச் சொன்னால், அவன் தனக்குப் பார்ப்பானா? உனக்குப் பார்ப்பானா?” என்று கேட்டார்.
இப்படி மக்களிடையே பெரியார் அவர்கள் உதாரணத்தோடு சொல்லக்கூடிய ஒவ்வொரு செய்திகளையும், கூட்டம் முடிந்த பிறகு, மக்கள் செல்லும்பொழுது அதைப் பேசிக்கொண்டே செல்வார்கள்.
பெரியார் அவர்கள் வெற்றி பெற்றதே, திராவிட உணர்வை, மக்கள் இயக்கமாக ஆக்கியதினால்தான்.
பெரியார் தேவை, இன்னமும் தேவை, எப்பொழுதும் தேவை. இப்பொழுதுதான் அதிகமாகத் தேவைப்படுகிறார்.
மகிழ்நன் என்று சொல்லுகின்ற நேரத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
ஒரு காலத்தில் கிறித்தவர்கள், ‘‘சந்தோசம்” என்று பெயர் வைத்தார்கள்.
பேராசிரியர் சந்தோசம், டாக்டர் சந்தோசம், வக்கீல் சந்தோசம் என்றெல்லாம் பெயர்கள் உண்டு நம்முடைய நாட்டில்.
ஆனால், ‘‘மகிழ்நன்” என்று சொல்லும்பொழுதே அற்புதமாக இருக்கக்கூடிய அளவிற்குப் பல வாய்ப்புகள் இருக்கின்றன.
மேலும் இந்நூலில் கட்டுரையில் தொடர்கிறார்,
‘‘பிராமணர்களையும், ஆரியர்களையும் சாமர்த்தியமாக உயர்நிலையினராக ஆக்குவதும், அவர்களுக்குத் தெய்வாம்சத்தை அளிப்பதும் இயல்பிலேயே இந்து மதத்தின் தன்மையாக இருக்கிறது என்ற அவரது பார்வையின் அடிப்படையில்தான் பெரியார் இந்து மதத்தைத் தாக்கினார்.”
பெரியார் யாருக்கும் விரோதி அல்ல!
பெரியார் யாருக்கும் விரோதி அல்ல. ஆனால், அவர் எடுத்துக்கொண்ட இலக்கைப் பார்க்கும்பொழுது, அந்த இலக்குக் குறுக்கே எது எது இருக்கிறதோ, என்னென்ன தடைகள் இருக்கின்றதோ, அந்தத் தடையை எதிர்க்கிறார்.
டாக்டருக்கு, வியாதியின்மீது கோபமா? அவரு டைய பணி, அந்த நோயைத் தீர்க்கவேண்டும். நோயைத் தீர்க்கின்ற நேரத்தில், நோய்நாடி, நோய் முதல் நாடவேண்டும். அந்த நோய்க் கிருமிகளை அழிக்கவேண்டும்; அந்த நோய்க் கிருமிகள் எங்கே இருந்து உற்பத்தியாகின்றது என்பதை அறிந்து, அந்த மூலத்தை அழிக்கவேண்டும்.
அதுபோன்றதுதான், சுயமரியாதை இயக்கம் என்று தெளிவாகச் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
கட்டுரையில் மேலும் தொடர்கிறார் ஆய்வாளர்,
‘‘மதத்தைப் பரப்புவதற்கு எதிராகச் செயற்பட்ட சுயமரியாதை இயக்கம், பார்ப்பனர்களைக் கொண்டு செய்யப்படும் இந்து மதச் சடங்குகளையும், வழிபாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் சமஸ்கிருத மொழியையும் குறிப்பாக எதிர்த்தது. ஜாதிக் கட்டமைப்பே திராவிடர்கள்மீது ஆதிக்கம் செலுத்த ஆரியர் கண்டறிந்த முறைதான் என்று முன்வைத்த பெரியார் தீண்டப்படாதோர், தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைத்துத் திராவிடர்களையும் அத்தகைய மேலாதிக்கக் கட்டமைப்புகளைத் தகர்ப்பதற்காக ஒருங்கிணைய வேண்டினார்.
இருப்பினும், சுயமரியாதை இயக்கம் சமுதாயத்தில் பெரிய அளவில் சென்றடைந்ததும், தமிழர் அரசியல் உணர்வுகளை எழுப்பியதும் 1937 இல் அவ்வியக்கம் மொழிப் போராட்டங்களில் துடிப்பாகப் பங்கெடுத்த பிறகுதான்.”
அதற்கு அடையாளம்தான் இவருடைய தாத்தா, நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள்.
பெரியாருடைய தொண்டு என்பது சாதாரணமானதல்ல!
எனவே, எங்கு சுற்றிப் பார்த்தாலும், பெரியாருடைய தொண்டு என்பது சாதாரணமானதல்ல. அதனை, இந்த நூல் சிறப்பாகக் காட்டியிருக்கிறது.
இந்த நூலில் ஓர் அற்புதமான படத்தையும் பதிவிட்டிருக்கிறார்கள்.
தமிழவேள் கோ.சாரங்கபாணியின்
‘‘தமிழர் சீர்திருத்த சங்கம்‘’
தமிழ்நாட்டிலேகூட இப்படி இயல்பாக, ஒரு மரபுரிமை அமைப்புகள் சொல்லும்பொழுது, தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள், ‘‘தமிழர் சீர்திருத்த சங்கம்” என்ற பெயரால் அமைப்பை உருவாக்கி, தந்தை பெரியார் அவர்களை, மலேயா, சிங்கப்பூர் உள்பட அனைத்து இடங்களுக்கும் அழைத்துக் கொண்டு போனார்.
அங்கெல்லாம் சமத்துவத்திற்காக, சுயமரியாதைக்காக, பெண்ணடிமை நீக்கத்திற்காக உரியவற்றை எடுத்துச் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
மேலும் தொடர்கிறார் கட்டுரையாளர்,
‘‘சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் அவற்றின் பின்னாலிருந்து பெரியாரும், திராவிட மக்களியக்க எழுச்சிக்கு முக்கிய காரணிகள் என்பது கூர்ந்து கவனிக்கவேண்டிய ஒன்று. இங்கிருந்தே காலப் போக்கில் தனித்துவமிக்க தமிழ்த் திராவிட அடை யாளம் உருவாயிற்று. சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான பார்வைகள் இரண்டு ஆழமான விளைவுகளை உண்டாக்கின. முதலாவது, தன்னுடைய தீவிரமான கருத்துகளாலும், போர்க் குணமிக்க நிலைப்பாட்டாலும் ‘சாமானியத் தமிழன்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தது. இக்கருத்தாக்கம் தாழ்த்தப்பட்ட ஜாதிகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தி னரைக் கவனப்படுத்துவதாக அமைந்தது. இரண்டாவது, திராவிடர் – திராவிடரல்லாதோர் என்ற இருமையை மொழிப் பிரச்சினைகளின் வழியாகக் கட்டமைத்து, அதன்மூலம் பெரும் மக்களியக்கத்திற்கு நாற்றங்காலாக விளங்கியது.
சுயமரியாதை, சீர்திருத்தம், தமிழ்த் திராவிடர் என்ற ஜாதியற்ற அடையாளம், தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு ஒன்று திரள்வது ஆகியவை அந்த இயக்கத்தின் அடித்தளமாக அமைந்திருந்ததால், சிங்கப்பூரிலும், மலாயாவிலும் சீர்திருத்தம் வேண்டியிருந்த தமிழர்களை அவ்வியக்கம் வெகுவாகக் கவர்ந்தது. ஜாதிய, வர்க்கப் பிளவுகளால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம் முன்னேற்றத்தையும் பொதுவான பண்பாட்டு அடையாளத்தையும் அடைய விரும்பியது. ஆகவே, சுயமரியாதை இயக்கத்தின் கருத்தாக்கங்களுக்கு அது இலகுவாக ஆக்கப்பட்டது.”
விழுதுகள் இன்றைக்குத் தெரிந்து கொள்ளவேண்டும்!
இந்த வரலாறு எப்படி வந்தது? வேர்கள் எங்கே இருந்தன? என்பதை விழுதுகள் இன்றைக்குத் தெரிந்து கொள்ளவேண்டும்.
வேர்களை நாடித் தெரிந்துகொண்டால்தான், விழுதுகள் இன்றைக்குப் பலமாக இருக்கும். விழுதுகள் பலமாக இருந்தால் மட்டும் போதாது; பழுதில்லாத விழுதுகளாக அவை என்றைக்கும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்கு இந்த அறிவு நூல்கள், உங்கள் வாழ்க்கைக்கு, நம்முடைய வாழ்க்கைக்கு, இந்த நாட்டு குடிமக்களுடைய வாழ்க்கைக்கு மிக முக்கியமானவையாகும்.
ஜாதிய வர்க்கப் பிளவுகளால் மோசமாக சிங்கப்பூர் தமிழ்ச் சமுதாயம் பாதிக்கப்பட்டிருந்தது அன்றைக்கு. நாளைக்கும் அது வராது என்று சொல்ல முடியாது.
பறவைக்காய்ச்சல் எங்கோ ஒரு நாட்டில் ஆரம்பித்தது தான்; பன்றிக் காய்ச்சல் எங்கோ ஒரு நாட்டில் ஆரம்பித்ததுதான். கோவிட் தொற்று எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது. அது பல ரூபங்களில் இருக்கிறது.
ஜாதிக் கொடுமை. பிறவி பேதங்கள்
மீண்டும் வரும்!
அதுபோன்றதுதான் ஜாதி, ஜாதிக் கொடுமை. பிறவி பேதங்கள் மீண்டும் வரும். அந்த ஆபத்திலிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.; அதற்குரிய சக்திகள் பல ரூபங்களில் வரும் – எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்கு இந்த நூல் ஓர் அறிவு வெளிச்சம் என்று நாங்கள் கருதுகிறோம்.
ஆகவேதான், மரபுடைமைப்படி அதை செய்திருக்கிறார் என்றாலும், அது சாதாரணமானதல்ல. இது ஒரு ஆய்வு நூல் – இதைப் படிக்கவேண்டிய அவசியமில்லை, ஏதோ ஒரு வரலாற்று நூல் அதைப் படிக்கவேண்டிய அவசியமில்லை என்று கருதக்கூடாது.
மேலும் ஆய்வாளர் இந்நூலில்,
‘‘சிங்கப்பூரின் தொடக்கக் காலத் தமிழர் சங்கங்கள், ‘‘ஜாதிக் கூட்டமைப்புகளாகவோ அவரவர் பூர்வீகப் பகுதிகளின் அடிப்படையில் நெருக்கமான உறவு கொண்டிருந்த குழுக்களின் சங்கங்களாகவோ இருந்தன.” இங்குக் குடியேறியிருந்த சீனர்களிடமும் இங்கேயே நெடிது வசித்துக் கொண்டிருந்த மலாய்க்காரரிடமும் கூட இத்தகைய போக்கு இருக்கவே செய்தது” என்கிறார்.
நேற்று முன்தினம்கூட (15.9.2024) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பெரியார் – அண்ணா விழாவை கொண்டாடுகின்ற நேரத்தில், அங்கேகூட, ஒரு பிரிவினர் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுடைய எல்லைகள் என்ன? இன்னொரு நாட்டிற்குப் போகும்போது, எங்களுடைய எல்லை எது என்று எங்களுக்குத் தெரியும். என்னைப் பொறுத்தவரையில், நான் பெரியார் தொண்டன். அந்த நாட்டு அரசியலைப்பற்றி என்னிடம் கேள்வி கேட்டார்கள். ‘‘எங்கள் நாட்டு நாணயம் எப்படி இங்கே செல்லாதோ, அதேபோலத்தான் இந்த நாட்டு அரசிலையும் பேசவேண்டிய அவசியம் கிடையாது” என்று தெளிவாகப் பதில் சொன்னேன்.
ஜாதிச் சங்கங்களை உருவாக்காதீர்கள்; சாதிக்கும் சங்கத்தை உருவாக்குங்கள் – சங்கமமாகுங்கள்!
மலேயாவிலேயே பார்த்தீர்களேயானால், ஜாதிச் சங்கங்கள். ஜாதிச் சங்கங்களை உருவாக்காதீர்கள்; சாதிக்கும் சங்கத்தை உருவாக்குங்கள். சங்கமமாகுங்கள். அதுதான் மிகவும் முக்கியம். அதுதான் தமிழர்களுக்கு வேண்டுகோள். பெரியாருடைய விழாவைக் கொண்டாடுகிறோம் என்பதால், பெரியாருக்குப் பெருமையல்ல.
மருந்து சாப்பிடுகிறோமே, அது எதற்கு? மருந்து கடைக்காரருக்காகவா? அல்லது மருந்து தயாரித்த வருக்காகவா? இல்லையே, நம்முடைய நோய் தீருவதற்காகத்தான்.
பெரியாருடைய கொள்கைகளை சிங்கப்பூரில்
விதைத்தவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி
இங்கேதான் பெரியார் அவர்களுடைய கொள்கை களை ஏற்று, மிகப்பெரிய அளவிற்கு விதைத்து, இந்த நாட்டிற்குத் தேவை என்று உணர்ந்தவர்கள் தழிழவேள் கோ.சாரங்கபாணி போன்றவர்கள்.
வீடு வீடாகச் சென்று, குடியுரிமை பெறுங்கள், குடியுரிமை பெறுங்கள் என்று சொன்னார்கள்.
அதன் காரணமாக, அந்தக் குடியுரிமைதான், வேரூன்ற வைத்தது. வேர் ஊன்றிய காரணத்தினால்தான், ‘‘எங்கள் சிங்கப்பூர் தமிழர்கள் எவ்வளவு சிறப்பாக இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்; எவ்வளவு கட்டுப்பாடு உள்ள ஒரு நாடாக இருக்கிறது. எவ்வளவு ஒழுக்கமுள்ள மக்களாக இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்” என்று பெருமையோடு சுட்டிக்காட்டுகின்றோம்.
இப்பொழுது கவலையில்லாமல் இந்த மக்கள் இருக்கிறார்களே என்று நினைப்பதற்கு, எது மூலாதாரம்? எது வேர்? என்பதுதான் மிகவும் முக்கியம்.
எனவே, அவர்களை வேர் ஊன்றச் செய்த உழைப்பாளி யார்? அந்த உழவார பணிகள் எந்த இயக்கத்தால்?
அதற்காகத்தான் பெரியார் பிறந்த நாள் விழாவை நாம் இங்கே கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
பயனடைந்தவர்கள் காட்டக் கூடிய
நன்றி உணர்வு!
இது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல நண்பர்களே, பயனடைந்தவர்கள் காட்டக் கூடிய நன்றி உணர்வு!
தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள், ‘‘நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்டவேண்டிய பண்பே தவிர, உதவியவர்கள் எதிர்பார்த்தால், அது சிறுமைக் குணம்” என்று சொல்வார்.
உதவியர்கள் நன்றியை எதிர்பார்க்கக் கூடாது. ஆனால், பயனடைந்தவர்கள் நன்றி காட்டவேண்டும். அதைத்தானே வள்ளுவர் அவர்கள் அழகாகச் சொன்னார்.
‘‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள் 109)
நம் நாட்டில் பயனடைந்தவர்கள் எத்தனை பேர் நன்றி சொல்வார்கள்?
பல நேரங்களில், பெரியாரிடம் பரிந்துரைக்காக வருவார்கள்; பரிந்துரையைப் பெறுவார்கள்; ஆனால், திரும்ப அவர்கள் வந்ததில்லை. கிடைக்காதவர்கள், கிடைக்கவில்லை என்பதற்காக மறுமுயற்சி செய்வதற்காகத்தான் வருவார்கள்.
பெரியார் வேடிக்கையாகச் சொல்வார்!
பெரியார் அவர்கள் வேடிக்கையாக சொல்வார் எங்களைப் போன்ற உதவியாளர்களைப் பார்த்து, ‘‘அவர் மறுபடியும் வரவில்லை அல்லவா? அப்படியென்றால், அவருக்குக் கிடைத்துவிட்டது என்று அர்த்தம்” என்று எதார்த்தத்தோடு சொல்வார்.
ஆகவேதான், நன்றி உணர்ச்சியோடு நாம் இருப்பது நமக்குப் பாதுகாப்பு. அதனால்தான் நண்பர்களே, தமிழவேள் கோ.சாராங்கபாணி போன்றவர்களுடைய அந்த நிலைகளை, நாம் இன்றைக்குச் சொல்லுகிற பொழுது, புலம்பெயர்ந்தவர்களுக்கு, அந்த நாட்டு அரசு, ஒரு பெரிய அமைப்பை உருவாக்கிய அன்றைய முதலமைச்சருக்கும், ஆட்சிக்கும் நன்றி சொல்லவேண்டும்.
சிறந்து தொண்டாற்றியவர்களுக்கு, தமிழறி ஞர்களுக்கு, இலக்கிய அறிஞர்களுக்கு, பேராசிரியர் திண்ணப்பன் அவர்களுக்கெல்லாம் பரிசு கொடுத்தார்களே, அந்தப் பட்டியலிலே, எங்களுடைய அடுத்த முயற்சி – நேற்று முன்தினம்கூட (15.9.2024) புலம்பெயர்ந்தவர்கள் சார்பிலே நடைபெற்ற விழாவில், அப்துல்லா எம்.பி., அவர்களிடம் ஒரு செய்தியைச் சொன்னேன்.
தமிழ்நாடு அரசு – தமிழவேள் கோ.சாராங்கபாணி பெயரில் விருது அறிவிக்க கோரிக்கை!
அடுத்து நீங்கள் உடனடியாகச் செய்யவேண்டிய வேலை என்னவென்றால், தமிழவேள் கோ.சாராங்கபாணி பெயரில் தமிழ்நாடு அரசு ஒரு விருதைக் கொடுக்கவேண்டும் என்றேன்.
ஏனென்றால், அவர்கள்தான் சிங்கப்பூர் மக்கள் இன்றைக்குத் தலைநிமிர்ந்து நாம் நிற்கக்கூடிய அளவிற்கு, பெரியாருடைய பணியை அன்றைக்குச் செய்தார்கள். வீடு வீடாகச் சென்று, அவர்களை வாக்காளர்களாக, குடியுரிமை உள்ளவர்களாக ஆக்கினார்கள். அந்தக் குடியுரிமை அவர்களுக்கெல்லாம் சிறப்பான வாய்ப்பைத் தந்திருக்கிறது. தமிழர்கள் எல்லா துறைகளிலும் பெருமையோடு இருக்கிறார்கள்.
பெரியார் என்ன செய்தார் என்றால், அவர் இன்னொரு நாட்டிற்குப் போகும்போது, எதையோ பெற்றுக்கொண்டு போக வந்தார்; அல்லது சுற்றுலாவுக்கு வந்தார் என்று யாரும் நினைக்கவேண்டிய அவசியமில்லை.
பண்பாட்டுக்கு விதை ஊன்றினார்
தந்தை பெரியார்!
அங்கே இருக்கும் மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வந்தார்; பண்பாட்டுக்கு விதை ஊன்றினார். அந்த விதைதான், மிகப்பெரிய அளவிற்கு, விதை நெல்லாக அன்றைக்கு அவர்கள் இருந்தார்கள். இன்றைக்கு அவை விளைச்சல்களாக வருகின்றன.
எனவே, அந்த விளைச்சல்களில் பூச்சிகள் நுழைந்து விடக் கூடாது; கிருமிகள் நுழைந்துவிடக் கூடாது.
படையெடுப்புகளில் எல்லாம் மிக முக்கியமான ஆபத்தான படையெடுப்பு பண்பாட்டுப் படையெ டுப்பாகும்.
எது நம்மைப் பிரிக்கிறதோ,
அதை அலட்சியப்படுத்துங்கள்!
மிகச் சிறப்பாக நீங்கள் எப்படி வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று சொன்னால், ‘‘எது நம்மைப் பிரிக்கிறதோ, அதை அலட்சியப்படுத்துங்கள்; எது நம்மை இணைக்கிறதோ,அதை அகலப்படுத்துங்கள்.”
எனவே, ‘‘வேற்றுமையில் ஒற்றுமை” என்ற சிங்கப்பூரிய கலாச்சாரமும் நமக்கு மிக முக்கியம். குடிமக்களாக நீங்கள் என்றைக்கும் சிறந்து திகழுங்கள்.
சிங்கப்பூர் கலாச்சாரம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை காட்டுவது; ஒற்றுமையில், வேற்றுமையைப் பார்க்கவேண்டிய அவசியம் கிடையாது. இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள், மனிதக் குலத்திற்குச் சொன்னார், ‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை சமூகத்திற்காகப் பிறந்தவன், சமூகத்திற்கு வாழ்வு செய்யக்கூடியவன்’’ என்றார்.
மானுடப் பார்வையைச் செலுத்துங்கள்!
எனவே, தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்று இல்லாமல், தொல்லுலக மக்கள் எல்லாம் நம்முடைய மக்கள் என்று மானுடப் பார்வையைச் செலுத்துங்கள்.
அறிவின் எல்லை என்று போடாதீர்கள்; அறிவுக்கு எல்லை கட்டாதீர்கள். புதுமைக்கு வரவேற்பு கொடுங்கள்.
பழைமை என்று சொல்லும்பொழுது, அந்தப் பழைமையை மிகப்பெரிய அளவிற்கு ஊதிக்காட்டத் தேவையில்லை என்று அய்யா அவர்கள் இங்கே உரையாற்றினார். அதைத்தான் அவருடைய உரையின் தத்துவமாக நான் கருதுகிறேன்.
பழைமையை உணவாக அல்ல;
உரமாகப் பயன்படுத்துங்கள்!
அதே நேரத்தில், பழைமையை ஓரளவிற்குப் பயன்படுத்தலாம். எப்படி என்று சொன்னால், பழைமையை உரமாகப் பயன்படுத்தவேண்டும். உணவாகப் பயன்படுத்தக் கூடாது.
எனவே, நீங்கள் பழைமையை உரமாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளுங்கள் இளைஞர்களே என்று சொல்லி, இவ்வளவு அற்புதமான நூலை அவர்கள் தந்திருக்கிறார்கள்.
அது ஒரு தொடக்கம் என்று சொன்னார்கள்.
வெளிச்சங்கள் விரிவாகட்டும்!
இருட்டுகள் அகலட்டும்!
அறியாமை விலகட்டும்!
இது உங்களுக்குத் தொடக்கம். எங்களுக்கு ஒரு பெரிய வெளிச்சம்.
ஆகவேதான்,
இந்த வெளிச்சங்கள் விரிவாகட்டும்!
இருட்டுகள் அகலட்டும்!
அறியாமை விலகட்டும்!
உங்களுடைய புதையல் எங்களுக்கும் பயன்படும்; எல்லோருக்கும் பயன்படும்!
புரியாமை, நெருங்காமை இவையெல்லாம் இல்லாமல், எல்லாவற்றிலும் மனித குலம் ஒன்று என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நாட்டால் வேறுபட்டாலும், அரசியலால் மாறுபட்டாலும், பண்பாட்டால் ஒன்றுபடுவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நம் பண்பாட்டைக் காப்பாற்றி, அதேநேரத்தில், இந்த நாட்டினுடைய பண்பாடு இருக்கிறதே, அதற்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லி, வரலாற்றை வரலாறாகப் பாதுகாப்பதற்கு நீங்கள் அறிவாயுதங்களைத் தாருங்கள் – அந்த அறிவாயுதங்கள் உங்களுக்கு மட்டுமல்ல – கண்டுபிடித்த மருந்து, ஒரு நாட்டில் என்று சொன்னாலும், அது எல்லா நாட்டில் உள்ள மக்களின் நோய்களைப் போக்குவதற்கு எப்படி பயன்படுகிறதோ, அதுபோல, உங்களுடைய புதையல் எங்களுக்கும் பயன்படும்; எல்லோருக்கும் பயன்படும்!
வாழ்க பெரியார்!
வளர்க உங்களுடைய முயற்சிகள்!
உறுதுணையாக நாங்கள் பயன்பட்டு இருக்கிறோம்!
நன்றி, நன்றி, நன்றி!
வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றி
னார்.