அமெரிக்கா விர்ஜீனியாவில் பெரியார் -அண்ணா பிறந்த நாள் விழா: கருத்தரங்கில் தோழர்கள் உரை

viduthalai
2 Min Read

அமெரிக்காவின் விர்ஜீனியா, சவுத் ரைடிங் பகுதியில் தந்தை பெரியார் 146 ஆவது மற்றும் அறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்தநாள் விழா எழுச்சியுடன் 15. 9 .2024 ஞாயிறு மாலை 6:00 மணி முதல் 9 மணி வரை வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்க தலைவர் அறிவுமணி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் எழில் வடிவன் கலைவாணன் வரவேற்புரை ஆற்றினார். பெரியார் பிஞ்சுகள் இனியா- இலக்கியா ‘கிழவன் அல்ல- அவன் கிழக்கு திசை ‘மற்றும் ‘பெரியார் ஒருவர் தான் பெரியார் ”ஆகிய பாடல்களை பாடினர். அமெரிக்கா அயலக திமுக அணி துணை அமைப்பாளர் ம. வீ. கனிமொழி “பெரியாரும் பெண் உரிமையும்” எனும் தலைப்பில் சிறப்பான கருத்துகளை விளக்கிப் பேசினார் .பெரியார் என்னும் ஆண் தாய் அவரால் மகளிர் குலம் அடைந்த மாண்பு சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களாக கீழிறக்கம் செய்யப்பட்டிருந்த பெண்களின் அடிமைத்தனங்களை அகற்றி விடுதலைக்கான வழிகாட்டுதல் நெறிகளை பறைசாற்றி மகளிர் குலத்தை முன்னேற்றம் காணச் செய்தவர் பெரியார் என்பதை தமது உரையில் சிறப்பாகப் பதிவு செய்தார்.

தொடர்ந்து மேரி பொன்முடி, மோகன்ராஜ் ,பாலாஜி, கார்த்தி, ராஜேஷ் ,சிவக்குமார் பிரகாஷ் ,ஸ்டாலின்,கவிதா, சத்யநாராயணன், செல்வா, தனசேகரன் ஆகியோர் தங்கள் கருத்துகளை சுருக்கமாக எடுத்துரைத்தனர் .அமெரிக்க தமிழ் கல்வி கழக பேராசிரியர் அரசு செல்லையா” பெரியாரும் அறிவியல் மனப்பான்மையும்” எனும் தலைப்பில் அய்யாவின் அறிவியல் பார்வை எந்த அளவு சிறப்பு வாய்ந்தது உலகளாவிய சிந்தனை என்பதை விளக்குவதாய் அமைந்தது

இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் “பெரியாரே நம் ஒளி” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

வளர்ந்துவிட்ட நாடாக அமெரிக்கா இருந்தாலும், தமிழ்நாட்டில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் இங்கு வேலை வாய்ப்பு கருதி வந்திருக்கக் கூடியவர்கள் தங்களுடன் ஜாதி, மூடநம்பிக்கை ,மத மவுடீகம் ஆகியவற்றையும் சேர்த்தே கொண்டு வருகிறார்கள் .இங்கும் தேர் இழுத்தல், கூழ் ஊற்றுதல் ,அலகு காவடி எடுத்தல், கையில் கயிறு கட்டுதல் போன்ற மூடநம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள்.

எனவே இங்கும் பெரியார்இன்றும் தேவைப்படுகிறார். பெரியாரின் பகுத்தறிவு வெளிச்சம் அவசியமாகிறது. பெரியார் தொடங்கிய பகுத்தறிவு சுயமரியாதை சமத்துவம் சமூக நீதி பெண் விடுதலை ,அதனால் தமிழ் சமூகம் பெற்ற பயன், அந்த நன்றியின் வெளிப்பாடாகத்தான் இந்த விழா .அதுபோல அறிஞர் அண்ணா குறைந்த காலத்தில் முதலமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது, இரு மொழி திட்டமே தமிழ்நாட்டுக்கு போதும் என்று ஆக்கியது, சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தது வரலாற்றுச் சாதனைகள் ஆகும் என்பதையும் எடுத்துரைத்தார்.

நிகழ்வில் தனிஷ்கா, சந்திரகாசு, பாலாஜி, ஜோய், மிஷாயில், சுபாஷ் சந்திரன், இலக்கணன், எயினி, சத்தியா, ஆர்யா, சூர்யா, கவின், பாலாஜி, சந்திரன், ராணி, ரேகா, கவிதா சுகிர்தா, கவின், ஷிவானி செல்வா கிறிஸ்தோபர், பிரவீனா, டாக்டர் பிரியா, அகத்திய பிரபு, நித்திலா பிரவீனா, மெல்வின், பிரீத்தி, கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் து.ச. அறிவுப்பொன்னி நன்றி கூறினார். அனைவருக்கும் பெரியார் அண்ணா பிறந்தநாள் விழா சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *