சென்னை, செப்.14- சென்னை துறைமுகம்- மதுரவாயல் விரைவு சாலை திட்டத்திற்காக கூவம் ஆற்றில் தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை மாநகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப் படுத்தவும். சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் சரக்கு லாரி போக்குவரத்து தடையின்றி செல்வதற் காகவும் ரூ.1,815 கோடியில் கடந்த 2009ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் துறைமுகம்- மதுரவாயல் இடையே புதிதாக உயர் மட்ட சாலை அமைக்கும் பணி தொடங்கியது. 15 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இந்த திட்டம் முடங்கியது.
ஈரடுக்கு மேம்பாலம்
தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்தவுடன் திட்டமதிப்பு உயர்த்தப்பட்டு ரூ.5 ஆயிரத்து 855 கோடி செலவில் சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே 20.56 கிலோ மீட்டர் நீளத்திற்கு பறக்கும் சாலை ஈரடுக்குமேம்பாலமாக மாற்றப்பட்டது. குறிப்பாக இந்த திட்டத்தில் சுவாமி சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘துறைமுகம்-மதுரவாயல் இடையே கட்டப்படும் ஈரடுக்கு மேம்பாலத்தில், முதல் அடுக்கில் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் 6 வழிப்பாதை அமைக்கப்படுகிறது.
அதே போல் 2ஆம் அடுக்கில் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுர வாயல் வரை இயக்கப்படும் கனரக சரக்கு வாகனங்கள் செல்லும் வகையில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. கூவம் ஆற்றங்கரையில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட தூண்கள் இடித்து அகற்றப்பட்டு புதிய தூண்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, மதுரவாயலில் சாலை நடுவில் உள்ள மின்சார கம்பங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக எழும்பூர்- ஆயிரம் விளக்கு பகுதியில் கூவம் ஆற்று கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள 17 தூண்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது. புதிதாக அமைக்கப்படும் 604 தூண்களில் 375 தூண்கள் கூவம் ஆற்றின் பகுதிகளிலும், 210 தூண்கள் கடலோர பாதுகாப்பு ஒழுங்கு முறை மண்டலப் பகுதிகளிலும், மீதம் உள்ளவை நகரப் பகுதிகளிலும் அமையவிருக்கின்றன.
தூண்கள் அமைக்கும் பணி தீவிரம்
மேம்பாலப்பணியின் இறுதியில் துறைமுகத்துடன் 120 மீட்டர் தூரத் திற்கான இணைப்பு பகுதியில் தேவைப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டதால் சிக்கல்கள் தீர்ந்துள் ளன. அரும்பாக்கத்தில் 4 ஆயிரத்து 800 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கு ரூ.91 கோடி இழப்பீடு தொகையை அரசு வழங்குகிறது.
துறைமுகத்தில் கடற்படையின் இடத்தில் உள்ள 64 வீடுகள் இடிக்கப்பட உள்ளன. இதற்கு மாற்றாக நந்தனத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன. அதன்பின்னர் கடற்படை இடத்தில் உள்ள வீடுகள் இடிக்கப்பட உள்ளது. தற்போது புதிதாக கட்டப்படும் மேம்பாலத்தில் 13. சரிவுப் பாதைகள் அமைக்கப்படுகிறது. சென்னை சிந்தா திரிப்பேட்டை அருகில் உள்ள கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதற்கான துளை போடும் பணி நடந்து வருகிறது’ என்றனர்.
இதுகுறித்து ஒன்றிய சாலைப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘4 பகுதிகளாக கட்டப் படும் இந்தச் சாலைத்திட்டம் முடிவ டைந்தவுடன், சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48 சதவீதம் அதிகரிப்பதுடன், காத்திருப்பு நேரமும் 6 மணி நேரம் குறையும் என்றனர்.