தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் முதல் கொள்கையே பிறவி பேதமான ஜாதி ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான்!
பிறவி பேதம் என்றால், பெண்ணடிமைத்தனமும் பிறவி பேதம்தான்!
‘டேன்’ தொலைக்காட்சியில் “ஸ்பாட் லைட்” நிகழ்ச்சிக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
யாழ்ப்பாணம், செப்.14 1925 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தி னுடைய முதல் கொள்கையே, பிறவி பேதமான ஜாதி ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான். அப்படிச் சொல்லுகின்ற நேரத்தில், பெரியார் சொல்கிறார், ‘‘பிறவி பேதம் என்றால், வெறும் ஜாதியை மட்டும் நான் சொல்லவில்லை; ஆண் உயர்ந்தவன் – எஜமானன்; பெண் தாழ்ந்தவள் – அடிமை என்று சொல்லக்கூடிய பெண்ணடிமைத்தனமும் பிறவி பேதம்தான்” என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘டேன்’ தொலைக்காட்சியில், ‘ஸ்பாட் லைட்’ :
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
கடந்த 24.8.2024 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 97 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘டேன்’ தொலைக்காட்சியில், ‘ஸ்பாட் லைட்’ நிகழ்ச்சிக்காகப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுடைய வாழ்க்கை வசதிகள் எப்படி இருக்கிறது?
நெறியாளர்: ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் தங்கி யிருக்கிறார்கள். அந்தத் தமிழர்களுடைய வாழ்க்கை, வசதிகள் இப்பொழுது எப்படி இருக்கிறது?
தமிழர் தலைவர்: முன்பைவிட நன்றாக இருக்கிறது. கலைஞருடைய காலத்தில் நாங்கள் எல்லாம் முடிவு செய்து, மாநாடுகளை நடத்தினோம்.
ஒன்றிய அரசுக்கு நாங்கள் வைத்த கோரிக்கை அப்படியே இருக்கிறது. திரும்ப, தங்கள் தாய்நாட்டுக்கு வர விரும்பாதவர்கள், அங்கேயே இருக்கவேண்டும். பிள்ளைகளுக்குப் படிப்பு, வாழ்வுரிமையைக் கொடுக்க வேண்டும்.
முழுக்க முழுக்க அவர்களுடைய விருப்பத்திற்கேற்ப இருக்கிறது!
வெறும் ஏதிலிகள் என்று அவர்களைக் கருத வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக நல்ல வசதிகளை செய்துதரவேண்டும் என்கிறபொழுது, வீடுகள் கட்டிக் கொடுக்கிறார்கள்.
ஆனால், முழுக்க முழுக்க அது அவர்களுடைய விருப்பத்திற்கேற்ப அமைந்திருக்கிறது.
புலம்பெயர்ந்தவர்கள் போகும்பொழுது, தொப்புள் கொடி உறவுள்ள ஒரு நாட்டில் அவர்கள் இருப்ப தற்குத்தான் விரும்புவார்கள். அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்யவேண்டும்.
அவர்களுக்குக் குறைகள் இருக்கின்ற நேரத்தில், எங்களைப் போன்ற பல அமைப்புகள், பல அரசியல் கட்சிகள் நண்பர்களும் அதனை நிவர்த்தி செய்ய வலியுறுத்துகிறோம்.
முதலில் அந்த நாட்டில், வேறுபாடுகள் இருந்தி ருக்கலாம்; இப்பொழுது வேறுபாடுகள் இல்லை.
எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், வெளிநாட்டுக்காரர்களுக்கு, புலம் பெயர்ந்தவர்களுக்கு பள்ளிக்கூடங்களில் படிப்பதற்கு அனுமதியில்லை என்று சொன்னார்கள்.
இங்கே இருந்து எப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள்? அவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று வரும்பொழுது, எல்லா சான்றிதழ்களையும் தேடிக் கண்டுபிடித்து எடுத்துக்கொண்டு வர முடியாது என்பதை நாங்கள் எடுத்துச் சொன்னோம்.
உடனடியாக எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு உத்தரவைப் போட்டார். அவர்களுக்கு விதி விலக்குக் கொடுத்து, அவர்களின் பிள்ளைகளுக்குப் படிப்பைக் கொடுக்க வேண்டும் என்று.
இதுபோன்ற பிரச்சினைகள் அவர் கவனத்திற்கு வருகிறபொழுது, அதனை நிவர்த்தி செய்தார்.
அவர்கள் வேறு; நாம் வேறு என்று வேற்று மைப்படுத்தவேண்டிய அவசியமில்லை. இப்போது அதற்காக நிதியை ஒதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வேறு குறைபாடுகள் இருந்தால், எங்களைப் போன்ற வர்களும், அனைத்துக் கட்சிகளும் ஒருங்கி ணைந்து, ஊடகத்தின் ஒத்துழைப்பில் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
ஜாதியை ஒழிப்பதற்கு வழிமுறைகள் என்ன?
நெறியாளர்: திராவிடர் கழகம் குறிப்பாக அரசியலுக்கு அப்பால் ஓர் இயக்கமாக செயல்படுகின்ற அமைப்பு. குறிப்பாக, பெண்ணடிமை, ஜாதியம் என்பவற்றிற்கு எதிராக கூடுதலாக நீங்கள் உங்களுடைய குரலை எழுப்பி வருகின்றீர்கள். அந்த வகையில், இன்றைய இந்த நிலையில், அது தமிழ்நாட்டிலும் சரி, ஈழத் தமிழர்களுக்குள்ளும் சரி, ஜாதி என்பது ஒரு தொடர்ச்சியான ஒரு நோயாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதனை இல்லாமல் செய்வதற்கு, ஒழிப்பதற்கு என்ன வழிமுறைகள் இருக்கின்றன?
தமிழர் தலைவர்: அருமையான கேள்வி. இன்றைய சூழலில், இதுதான் மிக முக்கியமானதாகும். நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியதுபோல, சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழா இப்பொழுது நடைபெறுகிறது.
சுயமரியாதை இயக்கத்தினுடைய முதல் கொள்கையே, பிறவி பேதமான ஜாதி ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான்!
1925 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தினுடைய முதல் கொள்கையே, பிறவி பேதமான ஜாதி ஒழிக்கப்பட வேண்டும்.
அப்படிச் சொல்லுகின்ற நேரத்தில், பெரியார் சொல்கிறார், ‘‘பிறவி பேதம் என்றால், வெறும் ஜாதியை மட்டும் நான் சொல்லவில்லை; ஆண் உயர்ந்தவன் – எஜமானன்; பெண் தாழ்ந்தவள் – அடிமை என்று சொல்லக்கூடிய பெண்ணடிமைத்தனமும் பிறவி பேதம்தான்” என்றார்.
பெண்ணாகப் பிறந்ததினால், அவர்கள் கீழான வர்களாம்.அதற்கு மதமும் துணை நிற்கிறது.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அழகாகச் சொன்னார். தந்தை பெரியாரும், அம்பேத்கரும் ஒரே கருத்து டையவர்கள்தான்.
உலகத்தில் பேதங்கள் இருக்கின்றன; ஆனால், இங்கே இருக்கக்கூடிய பேதம் என்பது மிகவும் வித்தியாசமானதாகும்.
Graded inequality – படிக்கட்டு ஜாதி முறை. எனக்கு மேல், அவருக்கு மேல், அவருக்கு மேலே – எல்லோரையும்விட, மேலே ஒருவர் என்று இருக்கும் அமைப்பு. தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் – அதற்கும் கீழே அய்ந்தாம் ஜாதியான பஞ்சமன். அதற்கும் கீழே எல்லா ஜாதிப் பெண்களும் சேர்ந்ததுதான் நமோ சூத்திரர்கள்.
பெண்ணடிமை என்பதும், ஜாதி என்பதும்
ஒரு நாணயத்தினுடைய
இரண்டு பக்கங்கள்!
பெண்ணடிமை என்பதும், ஜாதி என்பதும் ஒரு நாணயத்தினுடைய இரண்டு பக்கங்கள் போன்று ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
வருத்தத்தோடு சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால், புலம்பெயர்ந்த தமிழர்களி டையே உள்ள ஜாதி முறையை ஒழிக்கவேண்டும் – மலேசியா போன்ற இடங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்றார்கள். புலம்பெயர்ந்து போகக்கூடி யவர்களில், நம்முடைய தமிழ்ப் பண்பாடு, இசை, கலை போன்றவை பரவியதில் நன்மை ஏற்பட்டு இருக்கின்றது என்று மகிழ்ச்சியடையலாம்.
ஜாதியைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள் பற்பல நாடுகளிலும் புலம்பெயர்ந்தவர்கள்!!
ஆனால், வாழ்க்கையில் துன்பத்தை, துயரத்தை, தீமைகளைச் சந்தித்திருந்தாலும்கூட, பாரத்தைக் கருதி, எதைக் கடலிலே தூக்கி எறிந்துவிட்டு, எதை முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டுமோ, அதை மட்டுமே எடுத்துக்கொண்டு, அவசரத்தில் உயிர் தப்பிக்கவேண்டும் என்ற நேரத்தில், எதை எடுத்துக்கொள்ளக் கூடாதோ, அதனை ஜாதிப் பிரச்சி னையை எடுத்து வைத்துக்கொண்டு பத்திரமாகப் பாது காத்துக் கொண்டிருக்கின்றார்கள் பற்பல நாடுகளிலும் புலம்பெயர்ந்தவர்கள்!
எங்கள் நாட்டில்தான், அந்த ஜாதிக்கு ஆதாரமும், அடிப்படையும் – அங்கே இருந்துதான் ஏற்றுமதி.
ஜாதிக் கொடுமை என்பது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியிருக்கின்றது!
எப்படி ஒரு நாட்டில் ஏற்படும் தொற்று நோய் – அது பன்றிக் காய்ச்சலாக இருந்தாலும், பறவைக் காய்ச்சலாக இருந்தாலும், கோவிட்டாக இருந்தாலும் – எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி யாகுமோ, அதுபோன்று ஜாதிக் கொடுமை என்பது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியிருக்கின்றது.
அமெரிக்காவில் வழக்குப் போட்டுக் கொண்டி ருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் வழக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் கனடாவில், மற்ற இடங்களில் இன்னமும் ஒரே ஜாதிக்குள் – அக மண முறை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அந்த முறையில் செய்யவேண்டும் என்று இருப்பது, மிகமிக வருத்தப்படக் கூடியதாகும்.
தமிழனுக்கு ஓர் அடையாளம் வேண்டும். தமிழன் என்று சொல்லும்பொழுது வெறும் மொழியால் தமிழனாக இருக்கக் கூடாது.
அண்ணா அவர்கள் சொன்னதுபோல,
‘‘மொழியால் தமிழன்
வழியால் தமிழன்
விழியால் தமிழன்” என்று சொன்னார்.
மொழி, வழி, விழி என்று சொல்வது வெறும் அலங்காரத்திற்காக அல்ல.
விழி என்பது பார்வை – தமிழனுடைய பார்வை இருக்கிறதே, கலாச்சார அடிப்படையில் வரவேண்டும்.
ஒன்றுபடுவதற்கே
ஜாதி ஒரு தடையாக இருக்கிறது!
அதுபோன்ற முறையில் வரும்பொழுது, ஜாதி முறையின்மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், வயதானவர்களை, பெற்றோ ரைத் திருப்திப்படுத்தவேண்டும் என்று நினைக்கின்றபொழுது சிக்கல்கள் இருக்கின்றன.
எனவேதான், நம்முடைய அரசியல் உரிமை களுக்காக நாம் போராடுகின்ற நேரத்தில், மனிதர்களை ஒன்றுபடுத்தவேண்டும் என்று நினைக்கின்றபொழுது, ஒன்றுபடுவதற்கே ஜாதி ஒரு தடையாக இருக்கிறது, இன்றைக்கும்!
இங்கேயே தொடக்கக் காலகட்டத்தில் ஜாதியை வைத்து, இளைஞர்களைப் பிரிக்கலாமா என்ற சூழ்ச்சிகள் நடந்தன என்பது பழைய கதை.
அதற்குப் பிறகு அதைத் தாண்டி வந்துவிட்டது. ஜாதி ஒழிப்புப் பணிகள் எல்லாம் வேகமாக நடந்தன. ஆனால், அந்த இயக்கம் இன்னும் வளர்ந்திருக்குமேயானால், இன்றைக்குப் பெரிய மாறுதல் வந்திருக்கும்.
பண்பாட்டுப் படையெடுப்பு என்பது
மூளையில் போடப்பட்ட விலங்கு!
ஜாதி என்ற நோயை ஏன் ஒழிக்கவில்லை என்று நீங்கள் கேட்கலாம். அது மனதில் எழுப்பப்பட்ட கட்ட டம் போன்றது அல்ல; உடனே ஒரு சம்மட்டி கொண்டு உடைத்துவிடலாம் என்பதற்கு.
பண்பாட்டுப் படையெடுப்பில் இருக்கின்ற மிகப்பெரிய ஆபத்தே அதுதான்.
அரசியல் படையெடுப்பு என்பது கைகளில் போடப்பட்ட விலங்கு. பொருளாதாரப் படையெடுப்பு என்பது கால்களில் போடப்பட்ட விலங்கு. பண்பாட்டுப் படையெடுப்பு என்பது மூளையில் போடப்பட்ட விலங்கு.
மூளையில் போடப்பட்ட விலங்கு என்பது அவ்வளவு சீக்கிரம் கண்களுக்குத் தெரியாது. அந்த விலங்கை உடைக்கும்பொழுது, மூளைக்குச் சேதாரம் ஏற்படாதவாறு செய்யவேண்டும்.
இன்னமும் ஜாதியும், பெண்ணடிமைத்தனமும் இருக்கின்றன.
இன்றைக்குப் பெண்கள் நல்ல அளவிற்குப் படித்தி ருக்கிறார்கள். ஆனால், அப்படி படித்த பெண்களுக்கு எந்த அளவிற்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கின்றோம் என்பது கேள்விக்குறிதான்.
அவர்கள் எதை உண்ணவேண்டும்; அவர்கள் எதை உடுத்தவேண்டும் என்பதிலேயே அவர்களுக்குச் சுதந்திரம் இல்லை.
அந்தப் பெண்ணுக்குச் சொத்துரிமை இருக்கிறதா? அந்தப் பெண்ணுக்குச் சுதந்திர சிந்தனை இருக்கிறதா?
பெண் என்று சொன்னாலே, அடிமை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது.
ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்று சொல்லக்கூடிய அளவிற்குத்தான் இருக்கிறது.
எங்கள் நாட்டில் ஒரு பழமொழி இருக்கிறது – இந்த நாட்டில் இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை.
பெரியார் சொன்னதனால்,
கலைஞர் செய்ததனால்…
அது என்னவென்றால், ‘‘ஆசைக்கு ஒரு பெண்; ஆஸ்திக்கு ஓர் ஆண்” என்பதுதான் அது.
ஆஸ்திக்கு என்றால், சொத்துரிமைக்கு ஆண். ஆசை என்றால், அது பெண்ணாக இருக்க வேண்டும் என்பதுதான் அது.
ஆனால், இப்பொழுது அந்த நிலை எங்கள் நாட்டில் மாறியிருக்கிறது. பெரியார் சொன்ன தனால், கலைஞர் செய்ததனால்.
ஆகவே, பெண்களுக்குச் சமத்துவம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று, சமூகத்தில் ஜாதி உணர்ச்சிக்கு இடம் இல்லாமல் செய்ய வேண்டும். அந்த உணர்வை நாம் எடுத்துச் செல்லவேண்டும்.
அதை மற்றவர்கள் செய்வதைவிட, இந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அது இல்லாமல் இருக்குமேயானால், அவர்கள் ஒரே தமிழர்கள் – தமிழ்ப் பண்பாடுதான் – ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பதைத் தாண்டியும்கூட,
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’’ என்பது
வள்ளுவரின் குறள். திருக்குறளைப் பேசினால் மட்டும் போதாது; திருக்குறளுக்குப் பதவுரை, கருத்துரை, பொழிப்புரை சொன்னால் மட்டும் போதாது. அதை சமூக வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.
நடிகர் ஒருவர் கட்சி தொடங்கியிருக்கிறாரே, அதை திராவிடர் கழகம் எப்படி பார்க்கிறது?
நெறியாளர்: குறிப்பாக திராவிடர் கழகம் தேர்தல் அரசியலில் இல்லை. ஆனால், தி.மு.க.வை தொடர்ச்சி யாக ஆதரித்து வருகின்ற இயக்கம். ஒருமுறை உங்கள் நேர்காணலைப் பார்த்தேன், ஸ்டாலின்பற்றி ஒரு கேள்வி கேட்கும்பொழுது, ‘அவர் தன்னுடைய உறையிலிருந்து நல்ல கத்தியை எடுத்திருக்கிறார்’ எதிரிகள் யார் என்பதை அவர் களையவேண்டும்; நல்ல அரசியலைச் செய்யவேண்டும் என்று சொல்லியி ருந்தீர்கள். தொடர்ச்சியாக தி.க. இயக்கமாக இருந்தாலும், அரசியல் செயற்பாட்டில் பின்புலமாக இருக்கும். ஆதரவு தளங்களைத் தெரிவிக்கும்.
இப்பொழுது நடிகர் விஜய் அவர்கள் கட்சியை தொடங்கி, அண்மையில் கொடியையும் அறி முகப்படுத்தியிருக்கிறார்; அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
யார் வேண்டுமானாலும்
கட்சி ஆரம்பிக்கலாம்!
தமிழர் தலைவர்: நான் ஏற்கெனவே சொன்னேன். தமிழ்நாட்டு அரசியலைப்பற்றி நான் சொல்லப் போவதில்லை என்று.
இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டதினால், அதற்குரிய பதிலை சொல்லுகிறேன்.
யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சி ஆரம்பிப்பதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிமை இருக்கிறது. யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். அவர் நடிகரா, இல்லையா? என்பதெல்லாம் பிரச்சினை இல்லை.
அவர் கட்சியைத்தொடங்கியிருக்கிறார். இனி மேல்தான் அவருடைய அனுபவங்களைப் பார்க்க வேண்டும்.
ஏற்கெனவே கட்சியைத் தொடங்கியவர்கள் என்ன ஆனார்கள் என்ற வரலாறு இருக்கிறது.
அவருடைய கொள்கை என்ன? நடைமுறை என்ன? என்று தெரியவில்லை.
கொடியேற்றம் நடந்திருக்கிறது; திருவிழா இனிமேல்தான் நடைபெறவேண்டும்!
இப்பொழுதுதான் கொடியேற்ற வந்திருக்கிறார். கொடியேற்றம் நடந்திருக்கிறது; திருவிழா இனிமேல்தான் நடைபெறவேண்டும். திருவிழா எப்படி கலவரமின்றி நல்லபடியாக நடைபெறுகிறதா? என்று பார்க்கவேண்டும்.
Proof of the pudding is Eating என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதேபோன்று எப்படி வருகிறது என்பதைப் பொறுத்தத்தான், கருத்துகளைப் பின்னால் சொல்வோம்.
அவருக்கு இருக்கின்ற உரிமைகளை மறுக்கவில்லை. ஆனால், அவரது கடமைகளில் எந்த அளவிற்கு வெற்றி பெறுகிறார் என்பது, அவர் வைக்கின்ற கொள்கையையும், அவர் பின்பற்றுகின்ற நடைமுறையையும் வைத்துத்தான்.
இதுவரையில் பல நடிகர்கள் கட்சியைத் தொடங்கினார்கள். அவர்கள் எதைச் சொன்னார்களோ, அதை கடைசிவரையில் கடைப்பிடித்தார்களா? இல்லையா? என்பதைப் பொறுத்து மக்கள் முடிவு செய்வார்கள்.
கட்சி தொடங்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால், அந்த உரிமையினுடைய நியாயப்படுத்துதல் என்பது இருக்கிறதே, அது எப்படி இருக்கிறது என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
இலங்கை அதிபர் தேர்தலில்
தமிழர் ஒருவரை நிறுத்தியிருக்கின்றோம்,
அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
நெறியாளர்: நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால், கூடுமானவரையில் அரசியலை அதிகமாகப் பேசுவதில்லை என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆனாலும், இந்தக் கேள்வி தவிர்க்க முடியாத ஒரு கேள்விதான்.
இப்போது எமது நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. எங்களுடைய ஈழத் தமிழர்கள் கடந்த காலங்களில், சிங்கள அதிபர் ஒருவருக்குத்தான் வாக்களித்து வந்திருக்கின்றார்கள். ஏனென்றால், நாங்கள் சிறுபான்மையின மக்கள் – நாங்கள் எங்களில் ஒருவரை அதிபராக்க முடியாததொரு நிலைதான். ஆகவே, அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சிங்களர்களுக்கு வாக்களித்தார்கள். தலைவர்கள் சொன்னதன் அடிப்படையிலும், சிந்தனையின் அடிப்படையிலும், போராட்டத்தில் தங்களுக்கு யார் அதிகமான ஆபத்துகளை ஏற்படுத்தவில்லையோ என்ற அடிப்படையில் ஆதரித்தார்கள்.
இப்பொழுது, நீங்கள் சொன்னதைப்போல, ஒரு ஒற்றுமை என்பதைக் காண்பிக்கவேண்டும் என்பதற்காக, எங்கள் மத்தியில் ஒரு வேட்பாளரை நிறுத்துகிறார்கள். அந்த வேட்பாளருக்கு வாக்களிக்கச் சொல்லி, ஒரு பொது கட்டமைப்பாக ஓர் அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஈழத் தமிழர் ஒருவரை அதிபர் தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்கள். எங்களுடைய பிரச்சினைகளை, நாங்கள் போராடிய உரிமைகளை இவர்மூலம் நிறைவேற்றிக் கொள்வோம் என்பதற்காக.
திராவிடர் கழகத்தின் தலைவராக, 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பத்திரிகையின் ஆசிரியராக, பல அரசியலைக் கண்டவராக நீங்கள் இருக்கிறீர்கள். இந்த செயற்பாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: எனக்கு இது புதிய செய்தியாகும். இந்த நாட்டு அரசியலை சரியாகப் புரிந்துகொண்டு சொல்லவேண்டிய பதிலாகும் இது.
ஆகவேதான், சிறுபான்மை சமுதாயமாக நாம் இருக்கின்றோம் என்று சொல்லுகின்ற நேரத்தில், எந்த அளவிற்கு அது சரியாக இருக்குமோ, இல்லையோ என்பதையெல்லாம் புரிந்துகொள்ளவேண்டிய கடமை – எங்களைப் போன்ற வெளியிலிருந்து வரக்கூடியவர்களுக்கு இருக்கின்றது.
ஓர் அமைப்பில், நம்முடைய செல்வாக்கைத் தவிர்க்க முடியாது என்று பெரும்பான்மையோர் நினைக்கக்கூடிய அளவிற்கு நாம் ஒன்றிணைய வேண்டும். பெரும்பான்மையோர் அதை நினைத்து அச்சப்படவேண்டும்.
இந்த மண்ணில் உள்ளவர்கள்
முடிவு செய்யவேண்டிய விஷயம்!
இவர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ, அவர்கள்தான் வெற்றி பெற முடியும் என்று சொல்லக்கூடிய நிலையை, உணர்வை நாம் கட்டுப்பாடாக இருந்து அதைக் காட்டவேண்டும்.
அந்தக் கட்டுப்பாட்டை எந்த ரூபத்தில் கொண்டுவரப் போகிறார்கள் – அது எந்த அளவிற்குப் பயன்படும் என்பது இந்த மண்ணில் உள்ளவர்கள் முடிவு செய்யவேண்டிய விஷயமே தவிர, எங்களைப் போன்றவர்கள் கருத்துச் சொல்வது என்பது – அது ஒரு பார்வையாக இருக்குமே தவிர, எதார்த்தமாக இருக்க முடியாது.
நெறியாளர்: நன்றி!
தமிழர் தலைவர்: நன்றி!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியின்போது தெரிவித்தார்.