‘‘மொத்தம் 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீடு நூற்றுக்கு நூறு செயல்படுத்தப்படும்!’’
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, செப். 14- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு இன்று (14.9.2024) காலை சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களி டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,
அனைவர்க்கும் வணக்கம்!
நீங்கள் எல்லாரும் நல்லா இருக்கிறீர்களா? அமெரிக்க நாட்டிற்குச் சென்று அரசு முறைப் பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பி இருக்கிறேன். இது வெற்றிகரமான பயணமாகவும், இன்னும் சொல்லப்போனால் ஒரு சாதனைக்குரிய பயணமாகவும் அமைந்திருந்தது. தனிப்பட்ட எனக்கு அல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு சாதனைப் பய ணமாக இந்தப் பயணம் அமைந்திருக்கிறது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உலக நாடுகளில் இருக்கக்கூடிய தொழில் நிறுவ னங்கள், தமிழ்நாட்டில் தங்களுடைய தொழில்களை துவங்குவதற்கு தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த 28.8.2024 அன்று நான் அமெரிக்கா சென்றேன். 12.09.2024 வரை அங்கே இருந்திருந்தேன். இந்த 14 நாள்களும் மிகப் பெரிய பயனுள்ளதாக இந்தப் பயணம் அமைந்திருந்தது.
உலகின் புகழ் பெற்ற தலைசிறந்த 25 நிறுவனங்க ளுடன் நான் சந்திப்பை நடத்தியிருக்கிறேன். இதில் 18 நிறுவனங்கள், பார்ச்சூன் 500 நிறுவனங்கள் ஆகும். இந்த சந்திப்புகளின் போது, 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.
சான் பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்களுடனும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த 19 ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.7 ஆயிரத்து 616 கோடி முதலீடு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது. இதன் மூலம் 11 ஆயிரத்து 516 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த முதலீடுகள், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என்று பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன.
கடந்த 29.8.2024 அன்று சான்பிரான்சிஸ்கோ நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் பங்கேற்றார்கள்.
இன்னும் பல நிறுவனங்கள் வரும்!
தமிழ்நாடு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான பணியில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த நிறுவனங்களை நான் கேட்டுக் கொண்டேன். இன்னும் பல நிறுவனங்கள் வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வருவதாக விருப்பம் தெரிவித்துள்ளன.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல, தமிழ்நாட்டில் 30 ஆண்டு காலமாக செயல்பட்டு, தவிர்க்க இயலாத சில சூழ்நிலைகளால் உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், எங்களது வேண்டு கோளை ஏற்று, சென்னை மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியைத் துவக்க முன்வந்துள்ளது. அவர்கள் இரண்டு நாள்களுக்கு முன்பு பேசும்போது, அந்த நிறுவனத்தைச் சார்ந்த வர்கள் என்ன சொன்னார்கள் என்றால், கமிட்டி அமைத்து, உறுப்பினர்களுடன் பேசிவிட்டு அதற்குப் பிறகு சொல்கிறோம் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு நாங்கள் எங்களுடைய விருப்பத்தை அதிகமாக தெரிவித்த காரணத்தினால் அனைத்து வசதிகளும் உங்களுக்கு செய்து கொடுக்கிறோம் என்ற அந்த நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு, சரி நீங்கள் செல்லுங்கள், இரண்டு நாள்களுக்குப் பிறகு அதற்கான மகிழ்ச்சியான செய்தியை நிச்சயம் அனுப்புகிறோம் என்று சொன்னார்கள். நாங்கள் சிகாகோ விமான நிலையத்தில் விமானத்தில் உட்கார்ந்த பிறகு, அறிவித்துவிட்டார்கள் என்ற செய்தி கிடைத்தது. அந்தச் செய்தியை இன்றைக்கு உங்களுடன் நான் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு சார்பிலும், தமிழ்நாட்டு மக்க ளின் சார்பிலும் இந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்று, அவர்கள் உற்பத்தியை துவங்குவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நான் ஆணையிட்டிருக்கிறேன்.
‘நான் முதல்வன்’ திட்டம்!
அதேபோல, எனது கனவு திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வழியாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மேற்கொண்டு, அதன் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு, தொழில் நுட்பம் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கூகுள் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்மூலம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கும், வணிகம் புரிவதற்கும் உகந்த சூழ்நிலையை நிலவுவது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் இருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் முதலீடு மேற்கொள்ள விரும்பும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
31.8.2024 அன்று சான் பிரான்சிஸ்கோவிலும், 7.9.2024 அன்று சிகாகோ நகரிலும் நடைபெற்ற தமிழ் கூட்டமைப்பு மற்றும் தமிழ் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினேன். இது தமிழ்நாட்டில் நான் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அமெரிக்க தமிழ் அமைப்புகள் அனைத்துக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒப்பந்தங்கள் செய்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்தியாளர்கள் கேள்விகளும்,
முதலமைச்சர் பதில்களும்!
கேள்வி: முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பாகவும், வெளிநாட்டுப் பயணம் தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டு வருகிறார்கள் அது தொடர்பாக தங்களுடைய கருத்து?
முதலமைச்சர் பதில்: அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே உங்களைச் சந்தித்த போது, தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் வந்த முதலீடுகள் குறித்து நான் விளக்கமாகச் சொல்லி இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், தொழில் துறை அமைச்சர் அவர்களும் அதுகுறித்து புள்ளிவிவரங்களோடு விளக்கியிருக்கிறார். சட்டமன்றத்தில் தெளிவாக அவர் சொல்லி இருக்கிறார். அதை குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் படித்துப் பார்த்து தெரிந்துகொண்டு சொல்லவேண்டும். திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு போனதாகச் சொன்னார்கள். அதில் 10 விழுக்காடு ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதைச் சொன்னால் உள்ளபடியே அவருக்கு பெரிய அவமானமாக இருக்கும். அதனால் அதை தவிர்த்துவிடுகிறேன்.
எதிர்பார்த்ததைவிட அதிக முதலீடுகள்!
கேள்வி: தமிழ்நாட்டிற்குக் கிடைக்கவேண்டிய நிதி வேண்டும் என்றால், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் உங்கள் கோரிக்கைக்கு பதில் கொடுத்திருக்கிறார். அதைப்போல, மெட்ரோ இரயில் பிராஜக்ட் இரண்டிற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பை இதுவரைக்கும் கொடுக்கவில்லை. நேற்று முன்தினம் (12.9.2024) கூட ஒன்றிய நிதி அமைச்சர் நான் கடனுதவி பெற்றுக் கொடுத்தோம் என்று விளக்கியிருந்தார்கள். ஆனால், ஒன்றிய அரசின் பங்களிப்பைக் கொடுக்கவில்லை. இந்த இரண்டு பெரும் நிதி தேவையை வலியுறுத்தி பிரதமரை நீங்கள் சந்தித்து வலியுறுத்துவீர்களா?
முதலமைச்சர் பதில்: நிச்சயமாக, உறுதியாக.. மெட்ரோ இரயில் திட்டத்திற்கும், பள்ளிக் கல்வித்துறையின் நிதிக்கு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வது குறித்தும் ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்து வந்திருக்கிறார்கள். இதுகுறித்து பிரதமர் இடத்தில் உடனடியாக நேரம் கேட்டு, நானும் அதுகுறித்து வலியுறுத்த இருக்கிறேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: அமெரிக்க பயணத்தின்போது எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டு இருக்கிறதா? குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்கள் அமெரிக்க பயணத்தின்போது ரூ.25,000 கோடிக்கும் மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக திரு.ராமதாஸ் அவர்களின் அறிக்கையில் குறைந்த அளவு முதலீடுகள்தான் இந்த அமெரிக்கா பயணத்தின் மூலம் ஈர்க்கப்பட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
முதலமைச்சர் பதில்: அவை எல்லாம் அரசியல் நோக்கத்தோடு சொல்லப்படக்கூடிய விஷயங்கள். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான முதலீடுகள் வந்திருக்கிறது. உறுதியோடு வரக்கூடிய முதலீடுகள் தான் வந்திருக்கிறது. அதில் எந்தவித சந்தேகப்படவேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி: அமெரிக்கா பயணத்திற்கு முன்னதாக ‘‘மாற்றம் ஒன்றே மாறாதது’’ என்று சொல்லியிருந்தீர்கள். அமைச்சரவை மாற்றத்திற்கான கேள்விக்கு… மாற்றம் நிகழுமா? எதிர்பார்க்கலாமா? கூட்டங்களில் தொண்டர்களின் கோரிக்கைகளை தலைமைக் கழகம் அதை கவனிப்பதாகவும், அவை நிறைவேற்றப்படும் என்று சொல்லியிருந்தீர்கள். மாற்றம் நிகழுமா சார்?
முதலமைச்சர் பதில்: திமுக என்பது சொன்னதைத்தான் செய்யும். சொல்வதைத்தான் செய்வோம். ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன். இன்றைக்கு 75 ஆம் ஆண்டு கொண்டாடக்கூடிய வகையில் திமுக பவள விழா கொண்டாடப்பட இருக்கிறது. நிச்சயமாக, உறுதியாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று நம்புகிறேன்.
கேள்வி: விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இது அரசியல் கலந்த பேசும்பொருளாக இருக்கிறது. திமுக கூட்டணியில் ஏதோ சிரத்தன்மை இல்லையா என்பது போல. முதலமைச்சர் என்ன கருதுகிறீர்கள்?
முதலமைச்சர் பதில்: அதை அவரே தெளிவாக, திருமாவளவன் அவர்களே விளக்கமாக சொல்லியிருக்கிறார். அந்த விளக்கத்துக்கு மேல் பெரிய விளக்கம் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
கேள்வி : அமெரிக்க பயணம் வெற்றி என்று சொல்கிறீர்கள். அதே சமயம் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார், தெலங்கானா, கருநாடகா மாநிலங்களில் அவர்கள் ஈர்த்த முதலீடுகளை விட இது மிகவும் குறைவாக இருக்கிறது. வெறும் ரூ.7000 கோடி முதலீடு என்று சொல்லியிருக்கிறார். இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
முதலமைச்சர் பதில்: அப்படியில்லை. அவர்கள் மாநிலத்திற்கானதை கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதுபோல நாங்களும் நம்முடைய மாநிலத்திற்கு என்னென்ன வேண்டுமோ, என்னென்ன வசதிகள் ஏற்படுத்த வேண்டுமோ அதை கேட்கிறோம்.
கேள்வி: திருமாவளவன் அவர்கள் அதிமுக-வுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். விஜய் அவர்களும் எங்களுடைய மது ஒழிப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று கூறியது தொடர்பாக……
முதலமைச்சர் பதில்: திருமாவளவன் அவர்கள் அதற்குரிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார். ‘‘இது அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படக்கூடிய மாநாடு இல்லை. எல்லாவற்றிற்கும் தனிப்பட்ட முறையில் நான் அழைப்பு கொடுத்திருக்கிறேனா? அது பொதுவான விஷயம். இதற்கும், அரசியலுக்கும் முடிச்சுப் போடவேண்டாம்’’ என்று தெளிவாக சொல்லியிருக்கிறார். அதையேதான் மறுபடியும் நான் சொல்கிறேன்.
கேள்வி: அதிமுக காலத்தில் 10 சதவீதம் கூட முதலீடுகள் ஈர்க்கப்படவில்லை, நிறைவேற்றப்படவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ரூ.7000 கோடி முதலீடுகள் எப்படி சிறப்பாக செயல்படுத்தப்படும்…..
நூற்றுக்கு நூறு நிறைவேற்றப்படும்!
முதலமைச்சர் பதில்: ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். அமெரிக்கா செல்வதற்கு முன்பு விளக்கம் கொடுத்துவிட்டுச் இதே செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டு சென்றேன். சம்பந்தப்பட்ட தொழில்துறை அமைச்சர் அவர்களும் சொல்லியிருக்கிறார். சட்டமன்றத்திலும் இது பதிவாகியிருக்கிறது. ஏற்கெனவே எவ்வளவு முதலீடுகள் வந்ததது. எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறோம். இப்போதும் சொல்கிறேன். இப்போது வந்திருக்கக்கூடிய முதலீடுகள் 100-க்கு 99 என்று கூட சொல்லமாட்டேன். 100-க்கு 100 அதை நிறைவேற்றக்கூடிய வகையில்தான் இந்த முதலீடுகளை நாங்கள் ஈர்த்திருக்கிறோம். அதற்கான வேலைவாய்ப்புகளும் விரைவாக உருவாக்கப்படும். அது வருகிறபோது உங்களுக்கு அவ்வப்போது சொல்கிறோம்.
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.