புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு 2ஆவது இடம்

Viduthalai
1 Min Read

சென்னை, செப். 13- புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், சூரியசக்தி, காற்றாலை ஆகிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்யுமாறு மாநில அரசுகளை ஒன்றிய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அத்துடன், பொதுமக்களும் தங்கள் வீட்டு மேற்கூரைகளில் சூரியசக்தி மின்னுற்பத்தி கட்டமைப்பை நிறுவ மானியமும் வழங்கி வருகிறது.

இந்நிலையில், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 8,379.19 மில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழ்நாடு 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8,400.15 மில்லியன் யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கருநாடக மாநிலம் 9,171.16 மில்லியன் யூனிட்டுகள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

அதேசமயம், காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழ்நாடு முதன்மையாக திகழ்கிறது. காற்றாலையில் இருந்து 4,114.02 மில்லியன் யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு உற்பத்தி செய்துள்ளது. அதேசமயம் கருநாடகா 3,095.93 மில்லியன் யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது.

மேலும், கருநாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தங்களிடம் உள்ள நீர்வள ஆதாரத்தைப் பொறுத்து சிறிய மற்றும் பெரிய நீர்மின் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன. இதன்படி கருநாடகாவில் 4,500 சிறிய நீர்மின் நிலையங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் 47 நீர் மின்நிலையங்கள் மட்டுமே உள்ளன. இவை 2,321.90 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்டவை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *