தமிழர்களின் தொன்மைச் சிறப்பு! புதிய புதிய கண்டுபிடிப்புகள்!

Viduthalai
3 Min Read

சென்னை, செப்.13 தமிழர்களின் தொன்மைச் சிறப்புகள் நாள்தோறும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. நேற்றும் (12.9.2024) புதிய புதிய கண்டுபிடிப்புகள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம் வருமாறு:

கீழடி அகழாய்வில்
பழங்கால மண் பானை, கூரை ஓடுகள்

தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 10 ஆம் கட்ட அகழாய்வில் பழங்கால சிவப்பு நிற மண் பானை, கூரை ஓடுகள் (நேற்று 12.9.2024) கண்டெடுக்கப்பட்டன.

கீழடியில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் 10 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் கண்ணாடி பாசி மணிகள், மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள், வட்டச் சில்லுகள், சிறிய செங்கல் கட்டுமானம், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், உலோகப் பொருள்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

தற்போது ஒரு குழியில் 8 அடி உயரம் தோண்டப்பட்ட நிலையில், பழங்கால முழு வடிவ 2 அடி உயர சிவப்பு நிறப் பானை, கூரை ஓடுகள் கிடைத்தன. இவை பண்டைய காலத் தமிழா்கள் பயன்படுத்தியவை என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான கூம்பு வடிவக் குவளை

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரை யில் மேட்டுக்காடு பகுதியில் 3 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஜூன் 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணியின் போது கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, கிபி 16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால செம்புக் காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன.

இந்த நிலையில், நேற்று (12.9.2024) நடை பெற்ற அகழாய்வுப் பணியின் போது அலங்க ரிக்கப்பட்ட சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவக் குவளை கண்டறியப்பட்டது. இதை நமது முன்னோா்கள் உணவு அருந்தவோ அல்லது மண்பாண்டங்களை மூடுவதற்கோ பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறை இணை இயக்குநா் பொன்பாஸ்கா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூரில் நடைபெற்று வரும் அகழாய்வில்
தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட
பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன

தமிழ்நாடு

ஊத்தங்கரை வட்டம், குன்னத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட சென்னானூா் கிரா மத்தில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சாா்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வில், புதிய கற்கால கற்கருவி, சுடுமண்ணாலான முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்ட சில்லுகள், கண்ணாடி வளையல் துண்டுகள் போன்ற தொல் பொருள்கள் கிடைத்துள்ளன.
அகழாய்வில் முதல் குழியில் ஜூன் 24 ஆம் தேதி உடைந்த நிலையில் புதிய கற்கால வெட்டுக் கற்கருவி, 28 இல் களிமண்ணால் ஆன சுடுமண் முத்திரை, 30 இல் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கிடைத்துள்ளன. மேலும், இந்த குழியில் சேகரிக்கப்பட்ட பானை ஓடுகளை சுத்தம் செய்து ஆய்வு செய்ததில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

தற்போது சென்னானூா் அகழாய்வில் 90 செ.மீ. முதல் 108 செ.மீ. வரையிலான ஆழத்தில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பானை ஓடுகளில் முறையே (ந்)தை பாகஅந், ஊகூா், (சா)த்தன் என பொறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பிறஇடங்களில் பாறைகளில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக் கல்வெட்டுகளில், வேள்ஊா், மதிரை, இவகுன்றம், நெல்வெளிஇய், இலஞ்சி, கருஊா், முசிறி, வெள்அறைய், தேனூர், அகழ்ஊா், கோகூா் போன்ற ஊா்ப்பெயா்கள் காணப்படுகின்றன.

ஆனால் பானை ஓடுகளில் பெரும்பாலும் ஆட்களின் பெயா் இடம் பெற்றுள்ளன. உறையூரில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓட்டில் மூலனபேடு என்ற ஊா்ப்பெயா் உள்ளது. தற்போது சென்னானூர் பானை ஓட்டில் ஊகூா் என்ற ஊா்ப் பெயா் கிடைத்துள்ளது சிறப்பாக கருதப்படுகிறது என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *