ஜப்பானில் ஃபுகுஷிமா அணு உலையில் 13 ஆண்டுகளாக படிந்துள்ள கதிரியக்க எரிபொருள்

viduthalai
1 Min Read

ஆய்வு செய்ய ரோபோ எந்திரம்

ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய சுனாமி மற்றும் பூகம்பத்தில் பலத்த சேதமடைந்துள்ள ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையில் இருந்து கதிரியக்க எரிபொருள் மாதிரியை சேகரிக்கும் பணியில் ரோபோட் ஒன்று ஈடுபடுத்தப் பட்டுள்ளது.

2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.0 ஆக பதிவாகியிருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி பேரலையும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த இயற்கை பேரிடரால் ஃபுகுஷிமா அணு உலையின் குளிரூட்டும் அமைப்புகள் முற்றிலும் செயலிழந்துவிட்டன. இதன் காரணமாக கடந்த 13 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் அணு உலை உள்ளே இருந்த கதிரியக்க எரிபொருள் உருகி, கழிவுகளுடன் கலந்து அணு உலை உள்ளே படிந்துள்ளது.

நீண்டகாலம் அணு உலையின் உள்ளே கதிரியக்க எரிபொருள் படிந்து கிடப்பதால் சுற்றுச் சுழலுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடுமென்பதால் அணு உலையிலிருந்து கதிரியக்க எரிபொருளை மிகுந்த பாதுகாப்புடன் வெளியேற்றி அணு உலையை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஜப்பான் அணு சக்தி முகமை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக, சிறிய ரக ரோபோக்களை பயன்படுத்தி அணு உலை உள்ளே ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அணு உலையை பராமரிக்கும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி, அடுத்தகட்டமாக உருகிய நிலையில் உள்ள எரிபொருள் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ரோபோட் இயந்திரத்தை செப். 10 அன்று பயன்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *