தனி மனிதர்களுக்குத்தான் மரணம் உண்டே தவிர, தத்துவங்களை முன்னெடுத்த ஒரு போராளிக்கு எப்பொழுதும் மரணம் கிடையாது!
‘டேன்’ தொலைக்காட்சியில் “ஸ்பாட் லைட்” நிகழ்ச்சிக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
யாழ்ப்பாணம், செப்.11 அமிர்தலிங்கனார் அவர்கள் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக தன்னுடைய வாழ்வையே, உடல், பொருள், உயிர் என்று எல்லாவற்றையுமே தியாகம் செய்த ஒரு மாபெரும் வரலாற்று மனிதர் அவர். வரலாறுகள் எப்பொழுதுமே மனிதர்களை மறக்காது. தனி மனிதர்களுக்குத்தான் மரணம் உண்டே தவிர, தத்துவங்களை முன்னெடுத்த ஒரு போராளிக்கு எப்பொழுதும் மரணம் கிடையாது. அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நண்பர் அய்யா அமிர்தலிங்கனார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘டேன்’ தொலைக்காட்சியில், ‘ஸ்பாட் லைட்’ :
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
கடந்த 25.8.2024 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 97 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘டேன்’ தொலைக்காட்சியில், ‘ஸ்பாட் லைட்’ நிகழ்ச்சிக்காகப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
நெறியாளர்: ‘டேன்’ தொலைக்காட்சிக்காக ‘ஸ்பாட் லைட்’ நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரசி யல் பிரதிநிதிகள், கட்சி சார்ந்த, அமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகளை களம் கண்டு வருகிறோம். இன்று ஸ்பாட் லைட் நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான பிரதிநிதியைப் பேட்டி காணவிருக்கின்றோம். என்னோடு சேர்ந்து இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்திருக்கிறார் தேவராஜ்.
நம்முடைய ஸ்பாட் லைட் நிகழ்ச்சியில், வழக்கமாக எமது தரப்பில் இருக்கின்ற அரசியல் தலைமைகளை நாங்கள் நேர்காணல் காண்பது வழமை. ஆனால், இடையிடையே கொழும்பைத் தலை நகராகக் கொண்டவர்களும், அதேபோன்று, எமது தொப்புள்கொடி உறவான தமிழ்நாட்டிலிருந்து வருகை தருகின்ற பிரமுகர்களையும் நேர்காணல் செய்வது வழக்கமாக இருக்கிறது. அந்த வரிசையில், இன்றைய ‘ஸ்பாட் லைட்’ நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருக்கின்ற திராவிடர் கழகத்தின் தலைவரும், ‘விடுதலை’ பத்திரிகையின் ஆசிரியருமான திரு.வீரமணி அவர்களை நாங்கள் அழைத்திருக்கின்றோம்.
அன்போடு அவர்களை வரவேற்கிறோம்.
நெறியாளர்: வணக்கம்!
தமிழர் தலைவர்: வணக்கம்!
முன்பு நீங்கள் பார்த்த யாழ்ப்பாணத்திற்கும் – இப்போது நீங்கள் பார்க்கும் யாழ்ப்பாணத்திற்கும் என்ன வித்தியாசம்?
நெறியாளர்: சுமார் 45 ஆண்டுகளுக்குப் பின்பு, இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருக்கின்றீர்கள்; அப்பொழுது நீங்கள் பார்த்த யாழ்ப்பாணத்திற்கும், இன்றைக்கு நீங்கள் பார்க்கின்ற யாழ்ப்பாணத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்ன விஷயத்தை அறிந்துகொள்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு வேறுபாடுகள். அது நகரத்தினுடைய அமைப்பிலே, கட்டடங்களைப் பொறுத்து நான் சொல்லவில்லை; மக்களுடைய மனநிலையில் இருந்து எங்களைப் போன்றவர்கள் அப்பொழுது பார்த்த சூழல்கள்; அப்பொழுது இருந்த எதிர்பார்ப்புகள்; பிறகு ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள் – இன்னமும் தீராத பிரச்சினைகளாக இருக்கக்கூடிய வேதனைகள்; இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, அன்றைக்கும் வாழ்வுரிமைகளுக்காகத்தான் பேசினோம். 45 ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கே வந்தபொழுது, திரு.நவசோதி அவர்கள், ‘‘கலைஞர் கருணாநிதி மன்றம்” என்ற ஓர் அமைப்பை அமைத்து, அதில் இந்தப் பகுதியில் இளைஞர்கள் ஏராளமாக இருந்தனர். அப்பொழுதுதான் தந்தை பெரியார் அவர்களுக்கு நூற்றாண்டு விழா தொடக்கம். அவர் பெரியார் நூற்றாண்டு விழாவினை இங்கு ஏற்பாடு செய்தார். அவ்விழாவில் பங்கேற்பதற்காக என்னைப் போன்றவர்களை அழைத்தார்.
அப்போதும் பல்வேறு சூழல்கள் இருந்தன. ஆனால், அன்றைக்கு ஏற்பட்ட சூழல்களுக்கும், இன்றைக்கு ஏற்பட்டு இருக்கும் சூழல்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு.
இளைஞர்கள் இன்றைக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தோடும், கேள்விக்குறியோடும் இருக்கிறார்கள்!
அன்றைக்கு இளைஞர்கள் எல்லாம் நம்பிக்கையோடு களத்தில் நின்றார்கள். இன்றைக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தோடும், ‘எதிர்காலம் எப்படி?’ என்ற கேள்விக்குறியோடும் இருக்கக்கூடிய ஒரு சூழலை நான் மிகக் குறுகிய காலத்தில் தெரிந்துகொண்டேன்.
முழுமையாகத் தெரிந்துகொண்டேன் என்று நான் சொல்லமாட்டேன்.
ஏனென்றால், 45 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் சந்திக்கின்றபொழுது, இன்னும் இங்கே இருந்து தங்கி பல பேரை சந்திக்கக் கூடிய வாய்ப்பில்லை. ஊடகவியலாளர்களான உங்களைப் போன்றவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. அதேபோன்று, அன்றைக்கு இருந்த நண்பர்கள் எல்லாம் இன்றைக்கு வயதானவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வயது மட்டும் கூடியிருக்கவில்லை; பல அனுபவங்களும் கூடியிருக்கிறது.
அதையெல்லாம் பார்க்கின்றபொழுது, தோற்றங்கள் என்பதைவிட, மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றனவா என்பதுதான் மிக முக்கியமாகும்.
எனவே, தோற்றங்களும், மாற்றங்களும் நமக்கு எப்படிப்பட்ட படிப்பினைகளைத் தருகின்றன என்பதை இனிமேல் போகப் போகத்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.
எது வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் மாறலாம்!
ஏனென்றால், அரசியல் என்பது இருக்கிறதே, நேற்றையது இன்று காலை இருக்காது; இன்று காலையில் இருப்பது நாளை மாலை இருக்காது. எது வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் மாறலாம், நடக்கலாம் என்ற அதிரடியைக் கொடுக்கக்கூடி யது.
அந்த இடத்திற்கு நான் போகாமல், சமூக மாற்றத்திற்கும், இளைஞர்களுக்கும் எப்படிப்பட்ட உணர்வுகள்? அவர்களிடம் நம்பிக்கை இருக்கிறதா? என்று கேட்கும்பொழுது, இங்கே வாகனம் ஓட்டிக் கொண்டு வந்த ஒரு தோழரிடம் கேட்டேன்; அவர் சொன்னார், ‘‘நாங்கள் ஏதோ இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், அவ்வளவுதான். ஆனால், நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்” என்றார்.
வாழ்க்கையே நம்பிக்கைதான். எனவேதான், அந்த நம்பிக்கை அவர்களுக்குப் பலனளிக்கும்.
இப்பொழுது நீங்கள் இங்கே வந்ததன்
காரணம் என்ன?
நெறியாளர்: அன்றைக்கு நீங்கள் வந்தது பெரியாரு டைய நூற்றாண்டு விழாவிற்காக – இப்பொழுது நீங்கள் இங்கே வந்ததன் காரணம் என்ன?
தமிழர் தலைவர்: அமிர்தலிங்கனார் அவர்களுடைய 97 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்ப தற்காகத்தான். எதிர்க்கட்சித் தலைவராகவும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக தன்னுடைய வாழ்வையே, உடல், பொருள், ஆவி என்று சொல்வதை விட உயிர் என்று எல்லாவற்றையுமே தியாகம் செய்த ஒரு மாபெரும் வரலாற்று மனிதர் அவர்.
தத்துவங்களை முன்னெடுத்த ஒரு போராளிக்கு எப்பொழுதும் மரணம் கிடையாது!
வரலாறுகள் எப்பொழுதுமே மனிதர்களை மறக்காது. தனி மனிதர்களுக்குத்தான் மரணம் உண்டே தவிர, தத்துவங்களை முன்னெடுத்த ஒரு போராளிக்கு எப்பொழுதும் மரணம் கிடையாது.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நண்பர். எனக்கு 40 ஆண்டுகளுக்குமேல் பழக்கமுள்ளவர் அவர். ஈழ அமைப்பை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த நம்முடைய தந்தை செல்வா அவர்களுடைய தளபதியாக இவர் நின்ற காலத்தில் தந்தை பெரியார் அவர்களை வந்து சந்தித்தார்கள். அந்தக் காலத்திலிருந்து எங்களுக்கு பரிட்சயம், தோழமை உண்டு.
ஆகவே, அவருடைய பிறந்த நாள் விழாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் போன்ற தொற்று ஏற்பட்ட காலகட்டத்தில், காணொலிமூலமாக நான் உரையாற்றியிருக்கிறேன்.
அமிர்தலிங்கனாருடைய பிறந்த நாளில் இங்கே வந்து பங்கேற்கவேண்டும் என்று என்னை அழைத்தார்கள்.
அமிர்தலிங்கனாருடைய நினைவு சிறப்புச் சொற்பொழிவாற்ற நான் வந்திருக்கின்றேன்!
இங்கே இருக்கும் மாறுபட்ட சூழ்நிலைகளைப்பற்றி தெரிந்துகொள்வதற்கும் வாய்ப்பாக இருந்தது. அவருடைய பிறந்த நாள் விழா நாளை நடைபெறுகிறது – அவ்விழாவில் அவருடைய நினைவு சிறப்புச் சொற்பொழிவாற்ற நான் வந்திருக்கின்றேன்.
அவருடைய உணர்வுகளை, தியாகத்தை இன்றைக்கு நம்முடைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டிருக்கின்றேன்.
மற்ற தலைவர்களோடு உங்களுக்கு இல்லாத அளவிற்கான நெருக்கம், அமிர்தலிங்கனார் அவர்களோடு எப்படி ஏற்பட்டது?
நெறியாளர்: குறிப்பாக இலங்கையைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியப் பரப்பைப் பொறுத்தவரையில், பல்வேறுபட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்; பல்வேறுபட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு திரு.அமிர்தலிங்கம் அவர்களுடைய நினைவுப் பேருரையாற்றத்தான் வந்திருக்கிறீர்கள். மற்ற தலைவர்களோடு உங்களுக்கு இல்லாத அளவிற்கான நெருக்கம், அமிர்தலிங்கனார் அவர்களோடு எப்படி ஏற்பட்டது?
எங்களுடைய நட்பு கொள்கையைத் தாண்டிய ஒரு நல்ல கொள்கை உறவாகும்!
தமிழர் தலைவர்: கூடுமானவரையில், போராளிகளாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும், எல்லோருடனும் பழகியிருக்கின்றோம். ஆனாலும், அய்யா அமிர்தலிங்கனாரைப் பொறுத்தவரையில், குடும்ப ரீதியாக, அவருடைய வாழ்விணையர் சகோதரி மங்கையர்க்கரசி ஆனாலும், அவருடைய பிள்ளைகளானாலும், அதேபோல, மற்றவர்களானாலும், தமிழ்நாட்டிற்கு வந்து தங்கி, அடிக்கடி எங்களை சந்திக்கும்பொழுதும், மற்ற நிகழ்வில் பங்கேற்கும்பொழுதெல்லாம், எங்களுடைய நட்பு கொள்கையைத் தாண்டிய ஒரு நல்ல கொள்கை உறவாக மலர்ந்தது.
ஆகவே, அது எப்பொழுதுமே அவர்களுடன் தொடர்பாக இருக்கக் கூடிய அளவிற்கு வந்தது.
அய்ரோப்பா சுற்றுப்பயணத்திற்கு நாங்கள் சென்றபொழுதுகூட, தந்தை பெரியார் அவர்க ளுடைய நூற்றாண்டு விழாவை – ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக வளாகத்தில் கொண்டாடினார்கள். அந்த விழாவிற்கு எங்கள் இருவரையும் அழைத் தார்கள். மகிழ்ச்சியோடு அவர் அங்கே வந்தார்.
ஈழத் தமிழர்களுடைய
வாழ்வுரிமைக்காகத்தான் அந்த சந்திப்புகள்!
அதுபோலவே, எப்பொழுதெல்லாம் அவர் தமிழ்நாட்டிற்கு வருகிறாரோ, அப்பொழுது எல்லா தலைவர்களையும் அவர் சந்திப்பார். அதில் கட்சி வேறுபாடு இல்லாமல், கருத்து மாறுபாடில்லாமல் சந்திப்பார். ஏனென்றால், ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமைக்காகத்தான் அந்த சந்திப்புகள் நடக்கும்.
அய்யா ஈழத் தந்தை செல்வா அவர்களுடைய மறைவிற்குப் பின், இவரது முன்னெடுப்பில், எங்களையெல்லாம் சந்திக்கின்றபொழுது ஏற்பட்ட அந்த உறவு மிக நெருக்கமான உறவாகும்.
உங்களுக்கெல்லாம் தெரியும், திராவிடர் கழகம் தேர்தலில் நிற்கக்கூடிய ஓர் அரசியல் கட்சியல்ல. ஒரு சமுதாய ஒருங்கிணைப்பு இயக்கமாகும்.
ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு – தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கமாகும். இந்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்திற்கு நூற்றாண்டு விழாவாகும்.
முற்போக்குச் சிந்தனையாளர்
அமிர்தலிங்கம் அவர்கள்
அப்படிப்பட்ட சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி அவர் சொல்லும்பொழுது, இந்த உணர்வுகள் வேகமாக பரவி வருகிறது என்பதில் மகிழ்ச்சியடையும் மிகப்பெரிய முற்போக்குச் சிந்தனையாளர் அமிர்தலிங்கம் அவர்கள்.
அதேபோன்று, அவருடைய வாழ்விணையர் அவர்கள். பெண்கள், பொதுவாழ்க்கையாக இருந்தாலும், கூட்டு வாழ்க்கையாக இருந்தாலும், போராளி வாழ்க்கையாக இருந்தாலும், லட்சிய வாழ்க்கையாக இருந்தாலும்.
அப்படி அவர்களை நாங்கள் சந்திக்கும்பொழுது, பல கருத்துகளைப்பற்றி விவாதிப்போம். அந்தக் கருத்துகளை ஏற்பார்கள். சில நேரங்களில், சூழ்நிலை களை விளக்குவார்கள்.
அமிர்தலிங்கம் அவர்கள்
ஒரு நுண்மாண் நுழைபுலம் உள்ளவர்!
இதையெல்லாம் பார்க்கின்றபொழுது, அவர் ஒரு நுண்மாண் நுழைபுலம் உள்ளவர். வெறும் நாளைய அரசியல் என்பதைவிட, எதிர்கால அரசியலில் எது நிலைக்கும்? எது நிலைக்கவேண்டும் என்பதற்காக தன்னுடைய ஆழமான சிந்தனையை தந்தவர். அதுமட்டுமல்லாமல், எல்லோரையும் அணைத்துப் போகவேண்டும் நினைக்கக் கூடியவர்.
யாருக்கும், தன்னை ஒரு விரோதியாகவோ, வைரியாகவோ காட்டிக் கொள்ளாமல், தன்னுடைய கொள்கையே, ‘‘எங்களுடைய மக்கள் வாழவேண்டும். எங்களுடைய பகுதியில் இருக்கின்ற அடிமைத்தனம், உரிமைகள் பறிபோன நிலை இருக்கக் கூடாது. எங்களுடைய மக்களுக்கு வாழ்வுரிமை வரவேண்டும்” என்பதற்காக அவர் காட்டிய ஈடுபாடு என்பது எங்களை வெகுவாகக் கவர்ந்த ஒன்றாகும்.
ஆகவேதான், பல நேரங்களில் முரண்பட்டவர்களாக இருக்கக் கூடியவர்களை வைத்துக்கூட, கலைஞரோ, எங்களைப் போன்றவர்களோ நாங்கள் எல்லாம் இணைந்து, இவரோடு ஒரு ஈர்ப்புள்ளவர்களாக இருக்கி றோம்.
உடலால் மறைந்தாலும் – உணர்வால் நிறைந்தவர் அமிர்தலிங்கனார்!
சில பல நேரங்களில் அணுகுமுறைகளில் ஒரு சில வேறுபாடுகள் இருக்கலாம். நட்பு என்பது, அவர் மறைந்த பிறகும்கூட, மறைந்த என்கிற வார்த்தையை நான் சொல்லக்கூடாது; உடலால் மறைந்த நிலையில், உணர்வால் நிறைந்த ஒரு சூழ்நிலை – தொடர்ந்து அது நிறைந்து கொண்டிருக்கின்றது.
ஆகவேதான், இங்கே வந்து அவருடைய பிறந்த நாள் விழாவில், நான் உரையாற்றவேண்டும் என்று அந்த அறக்கட்டளை விரும்பிய நேரத்தில், அவருடைய சிறப்புகளைப்பற்றி எடுத்துக்கூறு வதற்காகத்தான் இங்கே வந்திருக்கின்றேன்.
மற்ற எல்லா தலைவர்களோடும் எனக்கு ஈடுபாடு உண்டு. யாரும் இங்கே விரோதிகள் கிடையாது; யாரும் மாறுபட்ட கருத்து உள்ளவர்கள் இல்லை.
இரண்டாவது, நான் பகுத்தறிவுவாதி. தந்தை பெரியாருடைய தொண்டன். பகுத்தறிவு என்று சொல்லும்பொழுது, உங்கள் கருத்துக்கு உரிமை உண்டு. என்னுடைய கருத்துக்கு நான் உரிமையாளன். அதேபோன்று நம்முடைய பத்திரிகை ஆசிரியர் ஈழநாடு ஆசிரியர் (தேவராஜனைக் காட்டுகிறார்) அவர்களுக்கு, அவருடைய கருத்தை எடுத்துச் சொல்வதற்கு உரிமை உண்டு.
உரிமைக்காகப் போராட வேண்டிய கடமை
நமக்கு இருக்கிறது!
ஒவ்வொரு கருத்தையும் ஏற்கின்றோமா இல்லையா என்பது இல்லை. சொல்வதற்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமையே இல்லை என்று சொல்லும்பொழுது, அதற்காகப் போராட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
ஒருவர்மீதான ஈடுபாடு என்பது நபரைப் பொறுத்ததல்ல; தத்துவங்களையும், கொள்கைகளையும் பொறுத்தது. அந்தக் கொள்கை இன்னமும் தேவை என்பதற்காகத்தான்.
விழுதுகளுக்கு,வேரைப்பற்றிச் சொல்லவேண்டும்!
தனிப்பட்ட நபர் மறைந்திருக்கலாம்; அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தக் கொள்கை எப்பொழுதும் நம்மை வழிநடத்திச் செல்வது மட்டுமல்ல – இளைஞர்களுக்கு, தலைமையாளர்களுக்கு, விழுதுகளுக்கு, வேரைப்பற்றிச் சொல்லவேண்டும்.
விழுதுகள், வேரை மறந்துவிடக் கூடாது. வேர் சரியாக இருந்தால்தான், பழுதில்லாத வேராக இருந்தால்தான், சிறப்பான, பழுதில்லாத விழுதுகள் வர முடியும். விழுதுகள், வேரைப் பாதுகாக்கும்.
(தொடரும்)