டில்லி, செப். 11 குற்ற வழக்கில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் குற்றவாளிகள் மீது வேறொரு வழக்கு பதிவு செய்யப்பட்டால், அவர் அதிலிருந்து முன் பிணை பெற முடியுமா?. அல்லது அதில் வேறு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? என்ற அடிப்படையில் தனியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இவ்வழக்கை விரிவாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், ‘ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்ற காவலில் உள்ள குற்றவாளி, மற்றொரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தை நாடி முன் பிணைக்காக விண்ணப்பித்து அதனை பெறலாம்.
அதில் சட்ட சிக்கல்கள் எதுவும் கிடையாது. குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், அந்த குற்றத்தில் கைது செய்யப்படாமல் இருக்கும் வரையில் அவருக்கு முன் பிணை பெறுவதற்கு உரிமை உண்டு. ஒரு வழக்கில் காவலில் இருப்பதால், வேறு ஒரு வழக்கில் முன் பிணை வழங்க முடியாது என்ற அச்சத்தை ஏற்படுத்த முடியாது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் மற்றொரு குற்றத்தில் ஈடுபட்டு காவலில் இருந்தால், அவருக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு மாவட்ட நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது. அப்படி நடத்துவது என்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானதாகும். அதேபோல் தடுப்புக் காவலில் இருக்கும் போது, அடுத்தடுத்து குற்றங்களில் முன் பிணை வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்ய முடியாது’ என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டனர்.
வீடுகளின் முன்பாக ‘நோ பார்க்கிங்’ பலகை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
சென்னை, செப்.11 வீடுகளின் முன்பாக ‘நோ பார்க்கிங்’ பலகை அல்லது தடுப்புகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது.
பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில் அனுமதியின்றி இத்தகைய அறிவிப்புகளை வைப்பதுடன், பூந்தொட்டிகளையும் வைத்துள்ளதாகவும், இதுகுறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்ட போது, இது போல அறிவுப்புகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்பட வில்லை என பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் வீடுகளின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ பார்க்கிங்’ அறிவிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல வீடுகளின் கதவுகளில் ‘நோ பார்க்கிங்’ என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது. ஆனால் சில விளம்பரதாரர்கள் வீடுகளின் உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெறாமல் ‘நோ பார்க்கிங்’ என்ற அறிவிப்பு பலகையை வைத்துவிட்டு அதில் தங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தையும் வைத்து விடுகின்றனர்.
வீட்டின் உரிமையாளர் தங்கள் வீட்டிற்கு பார்க்கிங் என்பது தொல்லையாக இருந்தால் அவர் வைப்பது என்பது வேறு, ஆனால் ஏதோ ஒரு நிறுவனத்தினர் வீட்டின் உரிமையாளரிடம் எந்தவித அனுமதியும் இல்லாமல் ‘நோ பார்க்கிங்’ விளம்பரத்தை ஒட்டி அதன் நிறுவனத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்வது குறித்துதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.