தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக் கரைக்கப்பட்டு வருகிறது.
கரைக்கப்படும் போது ஏற்படும் விபத்துகளில் மரணங்களும் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
விருதுநகரில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது மேலும் ஒரு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகாசி அருகே சிலையை கரைக்கச் சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து ஜெகதீஸ்வரன் என்ற 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைப்பது குறித்து பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருந்தாலும், சில இடங்களில் எதிர்பாராத வகையில் விபத்துக்கள் நேர்ந்துள்ளன.
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் விநாயகர் சிலையைக் கரைத்து விட்டு டிராக்டரில் திரும்பிய போது டிராக்டர் கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பிள்ளையார் சிலையை கரைக்கச் சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தான்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூரை அடுத்த ஆனத்தூர் காலனியை சோ்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ஆதி கிருஷ்ணன் (12). அங்குள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பிள்ளையார் சதுா்த்தியையொட்டி, தனது வீட்டில் சிறிய அளவிலான பிள்ளையார் சிலையை வைத்து ஆதி கிருஷ்ணன் வழிபட்டார். அந்த சிலையை பண்ருட்டியை அடுத்துள்ள நத்தம் கிராமத்தில் உள்ள ராமர் குளத்தில் கரைக்க நண்பர்களுடன் சென்றார். அப்போது, அவா் குளத்தில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார்.
அவருடன் சென்ற நண்பர்கள் கூச்சலிடவே அங்கிருந்தவா்கள் ஓடி வந்து ஆதி கிருஷ்ணனை மயங்கிய நிலையில் மீட்டனர். பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதே போல் சிவகங்கையிலும் குளத்தில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேவிநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 28 வயது வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்தவர்சூளகிரியில் உள்ள மில்லத் நகரைச் சேர்ந்த பி. வினோத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
‘விநாயகனே வினை தீர்த்தவனே!’ என்று பாடுவதற்கும், பிரச்சாரத்திற்கும் மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால் அந்த விநாயகனுக்கு சதுர்த்தி என்ற பெயரில் சேற்றைப் பிடித்து வைத்து, வண்ணம் தீட்டி, அதற்கு விநாயகர் என்று பெயர் சூட்டி, வடலூர் வள்ளலார் மொழியில் கூற வேண்டுமானால் சிறுபிள்ளை விளையாட்டு விளையாடித் தீர்க்கின்றனர்.
அது வேடிக்கை – வினோதம் என்று இல்லாமல், நீர் நிலையில் அந்தப் பொம்மையைக் கரைக்க ஊர்வலமாகச் செல்லுவதும் அதில் சிறுவர்களும், பக்தர்களும் உயிரிழப்பதும் எதைக் காட்டுகிறது?
கடவுளும் இல்லை – ஒரு வெங்காயமும் இல்லை என்று தெரியவில்லையா?
மும்பையில் பாலகங்காதர திலகர் இந்த விநாயகரை வைத்து விபரீத விளையாட்டைத் தொடங்கினார் – பார்ப்பனீயத்துக்குப் புத்துயிர் கொடுத்தார். ஆர்.எஸ்.எஸின் ஸநாதனத்துக்குப் பூமி பூஜை போட்டவரும் இவரே! அதை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற மற்ற மாநிலங்களிலும் இந்த வியாதி தொற்ற ஆரம்பித்து விட்டது. பிள்ளையார் உடைப்புப் போராட்டத்தையும் தந்தை பெரியார் நடத்திக் காட்டினார் – தமிழர்கள் எழுச்சியும் – பகுத்தறிவு உணர்ச்சியும் பெறட்டும்!