சென்னை, செப்.10- மதுரையில் கட்டப்பட் டுள்ள பிரமாண்டமான நூலகத்தை தொடர்ந்து, கோவையில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மய்த்தை அமைக்கும் ஆரம்ப கட்டப்பணியில் பொதுப்பணித் துறை தீவிரமாக இறங்கி உள்ளது.
மதுரை, புதுநத்தம் சாலையில், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.206 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் 2 லட்சத்து 13 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மாபெரும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டுமானப்பணியை பொதுப்பணித்துறை கட்ட தொடங்கி, திட்டமிட்ட காலத்தில் பணியை முடித்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு நேரில் சென்று நூலகத்தை திறந்து வைத்தார்.
இங்கு, நூல்கள், ஆய்விதழ்கள், இதழ்கள், பிரெயில் படைப்புகள், கையெழுத்துப்படிகள், மின்நூல்கள் என 3.5 லட்சம் நூல்கள் உள்ளன. நூலகம் திறக்கப்பட்டு கடந்த 13 மாதங்களில் அதிகபட்சமாக 11 லட்சம் பேர் சென்று பார்வையிட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில், கோவை மற்றும் திருச்சியிலும் மாபெரும் நூலகம் கட்ட முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்காக பொதுப்பணித்துறை விரிவான திட்ட அறிக்கை தயாரித்தது. அதன்படி கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் ரூ.300 கோடியில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் கூடிய மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மய்யம் அமைக்கப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தப்புள்ளியை பொதுப்பணித்துறை கோரி உள்ளது. இதில் ரூ.245 கோடியில் சிவில் மற்றும் எலக்டிரிக்கல் பணிகளும், ரூ.50கோடியில் புத்தகங்களும், ரூ.5 கோடி மதிப்பில் கணினி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்கப்பட உள்ளன.
இந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மய்யம் அமைக்கும் ஆரம்ப கட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தொடர்ந்து திருச்சியில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மய்யம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தற்போது தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விரைவில் இதற்கான முறைப்படி அறிவிப்பும் வெளியாகும். மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்ட நூலகத்தால் லட்சக்கணக்கான வாசகர்கள் பயனடைந்து வருவதுபோல் கோவை மற்றும் திருச்சியிலும் அமைக்கப்படும் நூலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்ட பிறகு லட்சக்கணக்கான மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட வாசகர்கள் பலர் பயனடைவார்கள் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.