ஆள்வது அரசமைப்புச் சட்டமா? மனுதர்மமா?

Viduthalai
2 Min Read

உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னோர்வில் உள்ள அம்ரோஹாவில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவர் பிரியாணி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அதை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கவனித்துள்ளார். இதைப் பார்த்த அவர், அந்த மாணவனை மட்டும் தனி அறையில் அடைத்துள்ளார்.
மேலும், அந்த மாணவனைப் பள்ளியிலிருந்து நீக்கிவிட்டதாக அவருடைய பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதைக் கேட்டு உடனே பள்ளிக்கு வந்த அந்த மாணவனின் தாயார், பள்ளி முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
அதில், “உங்கள் மகன், தொடர்ந்து அசைவ உணவைக் கொண்டுவந்து சாப்பிடுவதன் மூலம், மற்ற மாணவர்களை மதம் மாற்றம் செய்ய விரும்புகிறார். இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் இப்படிப்பட்ட மாணவனை எங்கள் பள்ளியில் படிக்கவைக்க வேண்டியதில்லை. மாணவனை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டோம்” எனக் கூறுகிறார்.
அதற்கு மாணவனின் தாயார், “கடந்த மூன்று மாதங்களாக வகுப்பில் இந்து – முஸ்லிம் என பிரிவினைப் பார்ப்பதாக என் மகன் கூறுகிறான்.

இதைத்தான் பள்ளியில் கற்றுக் கொடுக்கிறீர்களா? வகுப்பில் உட்கார அனுமதிக்காமல், தனி அறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள். இது அநியாயம்! என் மகனுக்கு எதுவும் தெரியாது. ஆனால், அவன் வீட்டுக்குத் திரும்பியபிறகு எப்படியெல்லாம் தண்டிக்கப்பட்டான் என்பதை எங்களிடம் தெரிவித்தான்” எனக் கூறுகிறார்.
இதையடுத்து பள்ளி முதல்வர், “நீங்கள் பள்ளி வளாகத்தைவிட்டு வெளியேறவில்லை எனில் காவல்துறையை அழைப்பேன்” என மிரட்டுகிறார்.

இது விவகாரமானதைத் தொடர்ந்து, அம்ரோஹாவின் துணைப்பிரிவு நீதிபதி சுதிர்குமார், அடிப்படை ஷிக்ஷா அதிகாரி (பிஎஸ்ஏ) மோனிகா மற்றும் பள்ளிகளின் மாவட்ட ஆய்வாளர் ஆகியோர் இந்த விடயத்தை விசாரிக்க பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “குற்றச் சாட்டுகளை முழுமையாக விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளின் அடிப் படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்ரோஹா (பி.எஸ்.ஏ.) மோனிகா, ”இந்த வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர மூன்று பேர் கொண்ட குழு செயல்பட்டு வரு கிறது. விசாரணை முடிந்ததும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ எனத் தெரி வித்துள்ளார். இதற்கிடையே அந்த மாணவன் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து அம்ரோஹா முஸ்லிம் கமிட்டி, அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியது. மேலும், பள்ளி முதல்வர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஒன்றிய கல்வி அமைச்சருக்கு, அந்தக் குழு மனு அனுப்பியுள்ளது.

பள்ளியில் பிரியாணி உணவு சாப்பிடக் கூடாது என்று சட்டம் உள்ளதா? அப்படி சாப் பிட்ட மாணவனைத் தலைமை ஆசிரியர் தனி யறையில் வைத்துப் பூட்டுவதா? இது எந்த ஊர் நியாயம்?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சாமியார் ஆதித்யநாத்தின் அதிகாரம் எத்தகைய மதவெறி நிர்வாண ஆட்டத்தில் குதிக்கிறது என்பது இதன் மூலம் தெரியவில்லையா?
பிரியாணி சாப்பிடுவதாலேயே, மதம் மாற்றம் செய்யத் தூண்டுகிறான் என்று பொருளா? அதுவும் ஒரு மூன்றாம் வகுப்பு மாணவன்மீது இப்படியொரு அபாண்டபழியையும், குற்றத் தையும் சுமத்துவதா?
எந்த அளவுக்குப் பள்ளி தலைமை ஆசிரியர் சென்றுள்ளார்? பள்ளிக் கூடத்தைவிட்டே நீக்கி இருக்கிறார். பிஜேபி ஆட்சியில் சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா? ஆள்வது மனு தர்மமா? அண்ணல் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டமா? மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு எழ வேண்டும்!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *