இப்படிக் கூடவா?

Viduthalai
1 Min Read

வெளியில் செல்லும்போது பாதுகாப்புக்காக மகள் தலையில் சிசிடிவி பொருத்திய தந்தை

கராச்சி, செப்.9 தலையில் சிசிடிவி கேமரா பொருத்திய படி பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் வலம் வரும் காட்சி பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது.
சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான காட்சிப் பதிவுகள் வெளியாகின்றன. சில காட்சிப் பதிவுகள் தகவல்கள் நிறைந்ததாகவும், பாராட்டும் வகையிலும் இருக்கும். சில காட்சிப் பதிவுகள் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கும். சில காட்சிப் பதிவுகள் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். அத்தகைய காட்சிப் பதிவு ஒன்று சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது.
அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தலையில் சிசிடிவி கேமராவுடன் தெருவில் செல்கிறார். இது வித்தியாசமாக இருந்ததால் அந்தப்பெண்ணை ஒருவர் பேட்டி எடுக்கிறார்.

தலையில் சிசிடிவி கேமரா ஏன்? எனகேட்டதற்கு அந்தப் பெண் கூறுகையில்,
‘‘நான் எங்கு செல்கிறேன், என்ன செய்கிறேன் என்பதை அறிந்து கொள்வதற்காக என் தந்தை இதை பொருத்தியுள்ளார். இது எனக்கு பாதுகாப்பாக உள்ளது. எனது தந்தைதான் எனது பாதுகாவலர். கராச்சியில் தாக்குதல், கொலை, பாலியல் வன்கொடுமை என பல நிகழ்வுகள் நடைபெறுவது கவலையளிப்பதாக உள்ளது. ஆகையால் எனது பாதுகாப்புக்காக இந்த கேமராவை என் தந்தை பொருத்தியுள்ளார்.

இதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை’’ என்றார்.
இளவரசிக்கு கிரீடம்: இந்த காட்சிப் பதிவு மற்றும் பேட்டியை பார்த்து பலரும் நகைச்சுவையான கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஒருவர் கூறுகையில், ‘‘இதெல்லாம் பாகிஸ் தானில் மட்டும்தான் நடக்கும்’’ எனகூறியுள்ளார். மற்றொருவர் பதிவிட்டுள்ள கருத்தில், ‘‘இந்த பெண்ணுக்கு அசம்பாவிதம் ஏதும் நடந்தால், இவரது தந்தை எப்படி காப்பாற்றுவார்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார். இன்னொருவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்தப் பெண் அவரது தந்தையின் இளவரசி. அதனால் அவளுக்கு கிரீடம் சூட்டியுள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *