வீதியின் ஓரத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை தட்டிக் கேட்காமல் போவோர் வருவோர் படமெடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் அக்கறை காட்டிய அவலம் பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனின் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றான சங்கசவுராஹி என்ற இடத்தில் நடந்து சென்றுகொண்டு இருந்த இளம்பெண் ஒருவர் சாலை ஓரத்திலேயே பாலியல் வன்கொடுமை செயப்பட்டார். அங்கு சென்றுகொண்டு இருந்த எவருமே தடுக்கவோ அல்லது அப்பெண்ணை காப்பாற்றவோ முன்வரவில்லை. அனைவருமே வேடிக்கை பார்த்துக் கொண்டு அலைபேசியில் படம் பிடித்துக்கொண்டு இருந்த அவலத்தை என்ன சொல்ல – சிலர் அதை சமூகவலைதளங்களில் நேரலையில் ஒளி பரப்பினர்.
இந்தக் கொடூர நிகழ்வு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி இதைக் கடுமையாக விமர்சித்துள்ளது. தேவ பூமி என்று கூறப்படும் (?) மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் – முதலமைச்சர் மோகன் யாதவின் சொந்த ஊராகும். அவரே உள்துறை அமைச்சர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்
இந்த அதிர்ச்சியான காட்சிப் பதிவு 5.9.2024 அன்று சமூக ஊடகங்களில் பரவியதும், காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்குக் கொண்டுசென்றனர். இது தொடர்பாக உஜ்ஜைன் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஷர்மா கூறும் போது, சங்கசவுராகி பகுதியில் குற்றம் நிகழ்ந்ததாக எங்களுக்கு தகவல் வந்தது, நாங்கள் நிகழ்விடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை காவல் நிலையம் அழைத்துவந்து, புகார் பதிவு செய்து அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம் என்றார்.
இது தொடர்பாக அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறும் போது, ‘‘அப்பெண் வேலை தேடி இங்கு வந்துள்ளார். காலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் உணவு அருந்தி உள்ளார். அப்போது அவருக்கு சிலர் வேலை தருவதாக அப்பெண்ணிடம் கூறியதைப் பார்த்தேன்’’ என்று கூறினார்.
இந்த நிலையில், அங்குள்ள சிலரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உஜ்ஜைன், தேவபூமி நகரம் என்று அறியப்படுகிறது. மேலும் இது முதலமைச்சரின் தொகுதியும் ஆகும்.
வேலை தேடிவந்த இளம்பெண் ஒருவர் பட்டப்பகலில் நடைமேடையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார் என்றால் உடனடியாக முதலமைச்சர் இதற்குப் பதில் கூற வேண்டும் – பதவி விலக வேண்டும்’’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கூறும் போது ‘‘மத்தியப் பிரதேசத்தில் பொது வெளியில், தெருக்களில் பகல்பொழுதில் கூட பாலியல் வன்கொடுமைகள் நடப்பதை கற்பனை செய்து பார்ப்பதே அதிர்ச்சியாக உள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் அரசு தோல்வி அடைந்துவிட்டது. முதலமைச்சரின் சொந்த ஊரின் நிலைமையே இப்படி என்றால், மாநிலத்தின் மற்றப் பகுதிகளின் நிலைமை எப்படி இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்” என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி கூறியுள்ளார்.
உலகத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறார் பிரதமர் மோடிஜி. கனத்த குரலில் ‘56 அங்குல’ மார்பு புடைக்கப் பேசுகிறார்.
பி.ஜே.பி.க்கு எதிரான கட்சிகள்பற்றி ஆக்ரோச மாகப் பொரிந்து தள்ளுகிறார். தம் கட்சி ஆளும் மாநிலத்தில் பட்டப் பகலில் ஒருபெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்வது எல்லாம் சரி என்று சொல்லப் போகிறாரா? மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கேவலத்தை என்ன சொல்ல!
வெறும் பக்தியையும், மதத்தையும், ராமனையும் காட்டி, பாமர மக்களின் வாக்குகளை அள்ளிக் குவித்து ஆட்சிப் பீடத்தில் அட்டகாசமாக அமர்ந்திருக்கலாம் என்று நினைப்பது நாகரிகமான அரசியல் ஆகாது! ஆகவே ஆகாது!!