சென்னை, செப்.8- தமிழ்நாடு கோயிலில் இருந்து திருடி விற்கப்பட்ட, ரூ.5 கோடி மதிப்புள்ள கிருஷ்ணன் சிலை அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டது.
தமிழ்நாட்டில் சோழர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட, கலியுக கல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணன் (குழந்தை கிருஷ்ணன் காலிங்கன் எனப்படும் பாம்பின்மேல் நடனமாடும் நிலையில் உள்ளது) உலோக சிலை அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பிடம் இருப்பதை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கடந்த ஆண்டு கண்டறிந்தனர்.
இந்த சிலையை பன்னாட்டு சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரிடம் இருந்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் லாட்ச் போர்டுஎன்பவர் ரூ.5 கோடிக்கு வாங்கி இருக்கிறார். மேலும், அவர் 2020ஆம் ஆண்டு இறந்துள்ளார் என சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்குத் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த சிலையை மீட்கும்முயற்சியில் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை தலைவர் தினகரன் தலைமையிலான காவல் துறையினர், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், தொல்லியல் துறை அதிகாரிகள் கூட்டாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் தங்கள் வசம் இருந்த கிருஷ்ணன் சிலையை தாய்லாந்து நாட்டின் பாங்காக் அரசிடம் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பு அதிகாரிகள் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் இந்த சிலை தாய்லாந்து நாட்டில் உள்ள இந்திய உயர்ஆணையம் வசம் ஒப்படைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட கிருஷ்ணன் சிலை தாய்லாந்து நாட்டிலிருந்து கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி ஒன்றிய அரசின் தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இந்த சிலை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட சிலையை காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார். அப்போது அவர், இந்த சிலை மீட்பு முயற்சியில் ஈடுபட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை தலைவர் தினகரன், காவல்துறை கண்காணிப்பாளர் சிவக்குமார், புலன் விசாரணை அதிகாரி பாலமுருகன் மற்றும் காவல் துறையினரை வெகுவாகப் பாராட்டினார்.
மீட்கப்பட்ட கிருஷ்ணன் சிலைகும்பகோணத்தில் உள்ள சிலைகள்தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள எந்த கோயிலில் இருந்து இந்த சிலை திருடப்பட்டது என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வர்கள்
15ஆம் தேதிக்குள்
கட்டணம் செலுத்த வேண்டும்!
சென்னை, செப்.8- டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குரூப்-1 மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்கள், அனைத்து அசல் சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து செப்.16ஆம் தேதிக்குள் இணையம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.200-அய் செப்.15ஆம் தேதிக்குள் இணையம் மூலம் செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் அக்கட்டணத்தை செலுத்திய பின்னரே தங்களின் சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால், அத்தகைய விண்ணப்பதாரருக்கு மெயின் தேர்வெழுத விருப்பமில்லை எனக் கருதி அவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள்
அக்.21இல் ஆரம்பம்
சென்னை,செப்.8- மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையரும், தொழில்நுட்பத்தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகளுக்கான உத்தேச செமஸ்டர் தேர்வு கால அட்டவணை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி செமஸ்டர் தேர்வுகள் அக்டோபர் மாதம் 21 முதல் நவம்பர் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெறும். செய்முறைத்தேர்வுகள் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கும். செமஸ்டர் விடுமுறை முடிந்து வகுப்புகள் டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கும்.