தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
சென்னை, செப்.8- பள்ளிகளில் ஆன்மிகத்தைப் பரப்புவது தவறு என, தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி வருமாறு:–
கேள்வி: பள்ளிக்கல்வித்துறை செயலாளரும் சொல்லி இருக்கிறார்கள். நீங்களும் உங்களுடைய பேச்சுக்களில் சொல்லி இருக்கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ். கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டிற்குள் கால் ஊன்றி இருக்கிறார்கள். இது குறித்து ஏற்ெகனவே சுற்றறிக்கையும் வந்திருக்கிறது. அந்த தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து?
பதில்: இது அனைத்துமே திட்டமிட்டு யாரோ செய்கிறார்கள். ஆளுநர் கல்விக் கொள்கை குறித்து விமர்சித்ததற்கும், இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கும் ஏதோ ஒரு பின்னணி இருக்கிறது. அதை அறிந்து, புரிந்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது போன்று நடக்கக் கூடாது, நான்கூட பேசுகிறபோது குறிப்பிட்டேன். இது போன்று புல்லுருவிகள் அங்கிருந்து வருவார்கள். அதை அரசு உடனடியாக கவனித்து, 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று இனிமேல் நடக்காமல் எல்லோரும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமல்ல… பெற்றோருக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது. அரசின் கவனத்திற்கு வராமல்கூட கூட சில இடங்களில் நடக்கலாம். இது போன்று எங்காவது நடந்தால், உடனடியாக கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்பதை இன்றைக்கு துறையின் செய லாளரின் அறிக்கையும், அமைச்சரின் பேட்டியும் சொல்லி இருப்பதை பார்க்கிறபோது நிச்சயமாக இது போன்ற சம்பவங்கள் இனிமேல் தமிழ் நாட்டில் நடக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.
கேள்வி: தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தான் அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறுவது குறித்து?
பதில்: அது முட்டாள் தனமானது. அது எவ்வாறு தன்னம்பிக்கை ஆகும். எந்த Rational Human Being-யும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த ஜென்மத்தில் நடந்தது, இந்த ஜென்மத்தில் – நான் வார்த்தைகளை கடுமையாக பயன்படுத்த வேண்டியது வந்துவிடும். தமிழ்நாடு கல்வியில் சிறந்து நிற்கிறது. இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு கல்வி யில் முதலிடம் பெற்றிருப்பதை ஜீரணிக்க முடியாமல் சில சக்திகள் இதைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். இது பெரியார் பிறந்த மண், அண்ணாவால் பக்குவப்படுத்தப்பட்ட மண், கலைஞரால் வழிநடத்தப்பட்ட மண், இன்றைக்கு தளபதி மு.க.ஸ்டாலினால் தலைமை தாங்கி நடத்தப்படும் மண். எனவே, இது போன்ற மூடநம்பிக்கைகள், இதுபோன்ற தவறானவைகள் இங்கே நுழைவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நுழையாது.
கேள்வி: இதே இடத்தில் கல்வி நிலை யங்களில் ஆன்மிகத்தை பற்றி பேசினால் என்ன தவறு என்று கேட்கிறார்கள்?
பதில்: பேசக்கூடாது. அண்ணா முதன்முதலில் ஆட்சிக்கு வந்தவுடன், அரசு அலுவலகங்களில் எந்த கடவுளின் படமும் இருக்கக் கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார். எனவே, ஆன்மிகத்திற்கு வெளியே பிரச்சாரம் செய்வதற்கு அவர்களுக்கு பலவீனமா? அங்கு தான் சென்று சொல்ல வேண்டுமா? ஆன்மிகத்தை பேசுவதற்கு அதற்கென்று ஃபோரம் இருக்கிறது. தனித் தனியாக போட்டு சொல்லலாம். கல்வி நிலையங்களில் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இது செக்யூலர் ஸ்டேட். அதனால்தான் முதன் முதலில் ஆட்சிக்கு வந்தவுடன் எந்த அரசு அலுவலகங்களிலும் கடவுள் படங்கள் இருக்க கூடாது என்று அண்ணா உத்தரவு போட்டார். அதன் வழி வந்தது தான் தி.மு.க.
-இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்தார்.