பாணன்
2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாளிதழ்களில் ஒரு செய்தி பரபரப்பாக வெளியானது. உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் அக்லாக் என்ற முதியவர் அவரது வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வதந்தி கிளப்பப்படுகிறது.
அதுவும் அவ்வூரில் உள்ள ஒரு கோவிலில் அப்படி அறிவிக்கிறார்கள். ஊரில் ஒருவரின் பசுமாடு காணாமல் போனதாகவும், அந்த பசுமாட்டின் வெட்டப்பட்ட சில பாகங்கள் ஊரில் உள்ள ஒரே ஒரு இஸ்லாமிய குடும்பமான அக்லாக் வீட்டின் சந்தில் கிடைத்ததாகவும் அறிவிக்கிறார்கள்.
யார் அறிவித்தார்? யாரது பசுமாடு? எப்போது காணாமல் போனது? என்று யாருக்குமே தெரியாது. உடனடியாக பல இளைஞர்கள் ஒன்று கூடுகிறார்கள். 4 தலைமுறைகளாக அந்த ஊரிலேயே சகோதரர்களாக ஒன்றாக வாழ்ந்துகொண்டு இருக்கும் அக்லாக் வீட்டிற்குள் நுழைகிறார்கள். அங்கு அவரது சிறிய மகள் அவர்களைத் தடுக்கிறார். அவரை மானபங்கப்படுத்துகிறார்கள். அக்லாக்கின் முதிய வயது தாயாரை தள்ளிவிடுகிறார்கள். அவரது மகனின் தாடையை உடைத்து கண்ணில் காயத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இறுதியாக அக்லாக்கை அடித்து சாலையில் இழுத்துப் போட்டு கொலை செய்கிறார்கள். அவரது மூத்த மகன் சென்னை விமானப் படைத் தளத்தில் வீரராக பணி புரிகிறார். வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல் விமானப் படை வீரராக இருக்கும் அவரது படத்தையும் சுக்கு நூறாக்கி சாலையில் வீசுகின்றனர்.
அரியானா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து மாட்டிறைச்சி வதந்தியில் இசுலாமியர்கள் கொல்லப்பட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக உத்தரப் பிரதேசம். காரணம், அங்கு பாஜக ஆட்சியைப் பிடிக்கவேண்டும். அதற்காக மிகவும் திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த வன்முறை கொலைக்குப் பின்னால் சங்கீத் சோம் என்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர் இருந்தார்.
இவர் முசாபர் நகர் கலவரத்தின் சூத்திரதாரி என்று நீதிமன்றம் குற்றம் சாட்டியது.
அக்லாக் கொலை தொடர்பாக கைதானவர்கள் அனைவரையும் பிணையில் எடுத்தது சங்கீத் சோம் தான்.
குற்றவாளிகளுக்கு உத்தரப்பிரதேசத்தில் சாமியார் அரசு ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் தெர்மல் பவர் கார்ப்பரேசன் என்ற பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டது.
குறிப்பாக அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் குண்டர்கள் சட்டத்தைக் கையிலெடுத்து காவல் துறையினரோடு சென்று இசுலாமியர்களைக் கொலை செய்யும் நிகழ்வுகள் சில ஆண்டுகளாக தொடர்கதையாக இருந்தது. ஆனால் முதல் முறையாக தேசிய ஊடகங்களில் அக்லாக் கொலைதான் பரபரப்பாக பேசப்பட்டது.
காரணம், பசுக் கொலைகாரர்களுக்கு ஒரு கவுரவ அடையாளம் கொடுக்கவேண்டும். மேலும் 2017ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெறவேண்டும்.
உத்தரப் பிரதேசத்தில் 2015 செப்டம்பரில் நடந்த இந்தப் படுகொலை 2017ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் அமருவதற்காக ஹிந்து வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு கொடூர நிகழ்வாக நடந்து முடிந்தது. பிறகுதான் மாட்டிறைச்சி கொலைகள் ஒரு ‘சிஸ்டமாக’ மாற்றப்பட்டது.
அதாவது ஒரு முசுலீமை கொலை செய்தால் அதைச் செய்தவர்களுக்கு பெரிய மரியாதை உண்டு என்ற ஒரு கேவலமான சிந்தனையை வெற்றிகரமாக பாஜக டில்லி தலைமை விதைக்க அது குறிப்பாக மத்தியப் பிரதேசம், குஜராத், உபி, அரியானா, உத்தராகண்ட், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சுயாதீனமாக வழக்கமாகச் செய்யும் (பிரிலென்சர்) வேலையாகவே அமைந்துவிட்டது.
கொலை செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது, துப்பாக்கியால் சுடுவது, சித்திரவதை செய்வது என்று சமூக வலைதளங்களில் பல நூறு காணொலிகள் பரவத் துவங்கின, இதில் வியப்பு என்னவென்றால் ஒன்றிய அரசைப் பற்றி விமர்சித்து எழுதினாலோ, பசுப் பாதுகாவலர்கள் செய்யும் கொலைகளைக் கண்டித்து எழுதினாலோ உடனடியாக விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி சமூக வலைதளக் கணக்கை முடக்கும் டுவிட்டர் (தற்போது எக்ஸ்), முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவைகள், பசுப் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் வெளியிடும் கொலைகார காணொலிகளுக்கு தாராளமாக அனுமதி கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல், அந்த காணொலிகளுக்கு ஆயிரக்கணக்கில் ‘லைக்ஸ்’ (விருப்பம்) மற்றும் நூற்றுக்கணக்கில் (SHARE) பகிரப்பட்டும் அதை தாரளமாக அனுமதிக்கிறது.
இந்த பசுக் கொலைகாரக் கூட்டங்களில் பெரும் பாலானோர் மோடியின் சமூகவலைதளக் கணக்குகளை பின்பற்றுபவர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
2017ஆம் ஆண்டு ராஜஸ்தானின் அல்வர் நெடுஞ் சாலையில் பசுமாட்டை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பெகலூகான் மற்றும் அவரது உறவினரை மறித்து அடித்து சித்திரவதை செய்தனர். இதில் பெகலூகான் மரணமடைகிறார். அவரது உறவினர் தலையில் அடிபட்டதால் மனநோயாளியாகி விடுகிறார்.
இந்த கொலை விவகாரத்தில் ஈடுபட்ட கூட்டத்தினருக்கு உடனடியாக பிணை வழங்கப்படுகிறது. சிறையில் இருந்து வெளிவந்த அந்த கொலைகாரர்களை ஊர்வலமாக தேர் போன்ற வடிவில் செய்யப்பட்ட லாரியில் வைத்து அழைத்துச் செல்கின்றனர்.
இவ்வாறு பச்சைப் படுகொலைகள் நடக்கின்றன. ‘சப்கே சாத் சப்கே விகாஸ்’ என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி இவர்களைப் பற்றி பேசினரா – என்றால் ஆம் பேசினார்.
எப்போது பேசினார்?
2016ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று குஜராத் மாநிலம் உனா என்ற ஊரில் உரிமம் பெற்று – இறந்த மாட்டுத்தோலை உரித்துக்கொண்டு இருந்த 7 தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை பசுமாட்டைக் கொலை செய்தார்கள் என்று கூறி ஒரு ஜீப்பில் கட்டி 2 கிலோ மீட்டர் தூரம் வரை அவர்களை அரை நிர்வாணமாக்கி ரப்பர் குழாய், மின்சார வயர், மற்றும் கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளைக் கொண்டு அடித்து நகர வீதிகளில் இழுத்துச் சென்றனர்.
சாலைகளில் போவோர் வருவோர் பார்க்கின்றனர். சில காவல்துறையினர் இதை பார்த்தும் கண்டுகொள்ளாமல் செல்வதை அந்த 14 நிமிடக் காணொலி உறுதி செய்கிறது.
இந்த கொடூரமும் நேரலையில் ஒளிபரப்பாகிறது. அங்கு இசுலாமியர் இல்லை. தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அம்பேத்கரிய அமைப்புகள் இந்த விவகாரத்தை கையிலெடுக்க குறிப்பாக உத்தரப்பிரதேசம் மகாராட்டிரா மற்றும் குஜராத்தில் பேரணிகள் நடந்தன.
இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச தேர்தலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகள் கிடைக்காமல் போய்விடும் என்பதால் தெலங்கானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மோடி பசுப் பாதுகாவலர்களை சமூக விரோதிகள் என்று பேசி அனைத்து மாநில அரசுகளும் இந்த குண்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று கூறினார்.
17.07.2017 அன்று அவர் தெலங்கானாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்:
‘பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சமூக அமைதியைக் குலைத்தால்…’ – மோடி எச்சரிக்கை!
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்துவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் சமூக அமைதியைக் குலைப்பவர்களுக்கு எதிராக, மாநில அரசுகள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ‘சட்டம் ஒழுங்கைக் காப்பது மாநில அரசுகளின் கடமை. சமூக விரோதக் கும்பலுக்கு எதிராக மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பசு என்பது ஒரு தாய்போலத்தான். அதைக் காக்க சட்டம் இருக்கிறது. எனவே, பசுவைக் காப்பேன் என்ற பெயரில் சட்டத்தை மீறக்கூடாது. நாட்டில் நிலவிவரும் அமைதியான சூழலைக் குலைப்பதற்கு சில கும்பல்கள் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு எதிராக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.
அதிலும் கோடிட்டுக் காட்ட வேண்டியது, “இனிமேல் பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் குண்டர்கள் யாரையும் அடிக்க வேண்டுமென்றால் முதலில் என்னை அடியுங்கள்” என்று பேசினார்.
மோடியின் இந்த முதலைக்கண்ணீர் உரை உத்தரப் பிரதேச தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கே என்று அப்போது சிலருக்குப் புரிந்தது.
கொலை வெறியர்களை
“ஹீரோ’க்களாக கொண்டாடுகின்ற அவலம்!
கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 247 பேர் பசுப் பாதுகாவலர்களால் கொல்லப்பட்டனர். இதில் அதிகமானோர் இசுலாமியர்கள். இவ்வாறு இசுலாமியர்களைக் கொலை செய்து அதை சமூகவலைதளத்தில் வெளியிடுபவர்களை ஹீரோவாக நினைக்கும் கொடூரம் வட இந்தியாவில் உள்ளது.
“மாட்டிறைச்சி சாப்பிட்டுவிட்டு வந்தாயா? உண்மையைச் சொல்!” என்று கூறியே 16 வயது இஸ்லாமிய சிறுவனை நொய்டா புறநகர் ரயிலில் கத்தியால் குத்தி கொலை செய்த கொடுமையும் நடந்தது. (16.07.2017).
ஆனால், செய்தி ஏடுகள் ரயிலில் இடம் பிடிப்பது தொடர்பான கைகலப்பில் நடந்த நிகழ்வு என்று எழுதி மூடிவிட்டன. கொலை செய்த நபர் ஏற்கெனவே பல இசுலாமியர்களை தாக்கியவர் என்பது நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தது.
இந்த நிலையில் அரியானாவில் ஒரு கொலை
அரியான மாநிலம் பரிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஆரியன் மிஸ்ரா.
12ஆம் வகுப்பு படித்து வரும் பார்ப்பனச் சிறுவனான இவர் கடந்த 23 ஆம் தேதி, தனது நண்பர்களுடன் நூடுல்ஸ் சாப்பிடுவதற்காக காரில் சென்றுள்ளார்.
அப்போது பசுப்பாதுகாவலர் என்ற பெயரில் திரியும் ஒருகும்பலுக்கு சிகப்பு நிறக்காரில் கன்றுக்குட்டியை கடத்திச் செல்கின்றனர் என்ற தகவலை யாரோ கூறுகிறார்களாம்.
உடனே அந்த பசுப் பாதுகாவலர்கள் கும்பலைச் சேர்ந்த வருண், கிருஷ்ணா, அதேஷ், சவுரப், அனில் கவுசிக் ஆகியோர் ஒரு காரில் ஆரியன் மிஸ்ரா சென்ற காரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சிறுவன் விளையாட்டாக நினைத்து காரை வேகமாக ஓட்டியுள்ளான். உடனே, அவர்கள் பசுவைத் திருடிச் செல்கின்றனர் என நினைத்து காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் தலை மற்றும் கழுத்தில் குண்டு பாய்ந்து ஆரியன் நிகழ்விடத்திலேயே மரணமடைந்தார்.
பின்னர் காவல் துறையினர், ஆரியன் மிஸ்ராவின் உடலைக் கைப்பற்றி உடற் கூராய்வுக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 5 பேர்கொண்ட கும்பலைக் கைது செய்தனர்
முதலில் இது தொடர்பாக பேட்டியளித்த காவல் துறையினர் சிறுவன் ஆரியன் மிஸ்ரா தவறுதலாக கொல்லப்பட்டார் என்று கூறினர். அதாவது இறந்தவர் உண்மையிலேயே இஸ்லாமியராக இருந்தால் இந்நேரம் கொலைகாரர்களுக்கு காவல்துறை விருது கொடுத்திருப்பார்களோ என்றே தோன்று கிறது.
இந்த வழக்கு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா முதலமைச்சர் நயாம் சிங் நைனி கூறும் போது, “பசுப் பாதுகாவலர்களால் கொல்லப்பட்ட ஆரியன் மிஸ்ரா கொலை தொடர்பாக விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது. பசுக் கடத்தல்காரர்கள் என்று நினைத்து ஆரியன் மீது தாக்குதல் நடந்துள்ளது. கிராமங்களில் இது போன்று நடப்பதை தடுப்பது மிகவும் கடினம்” என்று கூறியிருக்கிறார். இந்தக்கொலைகள் நடக்கும், அதை யாரும் கண்டு கொள்ளக் கூடாது என்பது போன்று ஒரு முதலமைச்சரே பேசியுள்ளார்.
ஆரியன் தந்தை காலில் விழுந்து கதறிய – கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆதேஷ் என்ற கொலைக் குற்றவாளியின் தந்தை கூறும் போது, “எனது மகன் ஒரு பிராமணரைக் கொலை செய்து குலத்திற்கே பாவத்தை தேடித் தந்துவிட்டான்” என்று கூறியிருக்கிறார்.
அதாவது அவரது மகன் எத்தனை இசுலாமியர்களைக் கொலை செய்திருப்பார்? அப்போது எல்லாம் ஹிந்து தர்ம பாதுகாவலனாக அவரைக் கொண்டாடிய குடும்பம் ஒரு பார்ப்பனரைக் கொலை செய்த பிறகு, “அய்யோ பாவம் பிடித்துவிட்டதே” என்று புலம்பியுள்ளனர்.
2015ஆம் ஆண்டு அக்லாக் மரணம் தொடர்பாக ‘விடுதலை’ தலையங்கத்தில் அப்போதே குறிப்பிடப் பட்டிருந்தது.
“இன்று அக்லாக் கொலைகாரர்களைக் கொண்டாடு பவர்களால் நாளை உங்கள் பிள்ளைகளும் கொலை செய்யப் படுவார்கள்” என்று. இன்று அதேபோல் நடந்துவிட்டது.
உருது கவிஞர் மிர்ஸா காலிப் கவிதை மிகவும் பிரபலமானது.
“நீ வைத்த நெருப்பு, உனது வீடு – எதிரி வீடு என்று பார்க்காது. அந்தத் தீயில் ஒருநாள் உனது வீடும் தீப்பற்றும். அப்போது உனக்காக ஓடி வந்து உதவ யாருமிருக்க மாட்டார்கள்” என்ற கவிதை.
இந்தக் கவிதையில் உள்ள உண்மைதான் தற்போது ஆரியன் மிஸ்ராவின் வழக்கிலும்.
அரியானாவில் தற்போது மாநில சட்டமன்ற தேர்தல் களம். இந்த நேரத்தில் ஆரியன் கொலை தொடர்பான செய்திகள் வெளிவந்தால் பாஜகவின் வாக்குகள் பாதிக்கப்படும் என்பதால் ஆரியன் மிஸ்ரா கொலை தொடர்பான செய்திகள் பத்தோடு பதினொன்றாக போய்விட்டன.
தற்போது ஆரியன் மிஸ்ரா குடும்பத்திற்கும், கொலை செய்தவர்களின் குடும்பத்திற்கும் சில பிரச்சினை. ஆகவேதான், இந்தக் கொலை நடந்தது என்று பாஜகவினர் வதந்திகளைப் பரப்பிக்கொண்டே இருக்கின்றனர்.
விலங்குகள் மனிதாபிமானமுள்ள மனிதர்கள் போல் செயல்படும் இக்காலங்களில் மனிதன் மிருகமாய் நடக்கலாமா?