ஒன்றிய பி.ஜே.பி. அரசு திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு தழுவிய அளவில் கழக மாவட்டங்களில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் (3.9.2024) மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய இடைவெளியில் கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்ட இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தைக் கழகப் பொறுப்பாளர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு வெற்றிகரமாக நடத்தியுள்ளது – மிகவும் பாராட்டத்தக்கது.
திராவிடர் கழகத்தின் அணுகுமுறை பற்றி கழகத் தலைவர் வழிகாட்டும் வகையில் கூறுவது – ஒன்று பிரச்சாரம், இரண்டாவது போராட்டம் என்பதாகும்.
சட்டமன்றம், நாடாளுமன்றம், ஏன் உள்ளாட்சித் தேர்தல்களில் கூடப் போட்டியிடாத திராவிடர் கழகம் நாட்டு மக்களுக்குச் சாதித்துக் கொடுத்தவை எல்லாம் இந்த அடிப்படையிலான அணுகுமுறைகள் வழியாகத்தான்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக ஆரிய துரைத்தனம்! ஆட்சி புரிந்த மன்னர்களைக் கையடக்கத்துக்குள் வைத்து ராஜகுருவாக வீற்றிருந்து மனு தர்மத்தை கோலோச்சச் செய்தனர்.
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதானே மனுதர்மம்!
ஆரிய வருணா ஸ்ரம, ஸநாதன தர்மத்தை எதிர்த்து அற வழியில் பாடுபட்ட கவுதமப் புத்தரின் மார்க்கத்தை கபளீகரம் செய்த கூட்டம் – ஊடுருவி ஒழித்த கும்பல்! ஒவ்வொரு கால கட்டத்திலும் சூழ்ச்சிகளாலும், தந்திரங்களாலும், ஏமாற்றுப் பிரச்சாரங்களாலும், பார்ப்பனரல்லாத மக்களின் கல்விக் கண்களைக் குத்திக் கொண்டே வருகின்றன.
சுயமரியாதைச் சூரியனாம் தந்தை பெரியார் முகிழ்த்தெழுந்து வீரப்போர் – விவேகப் போர் நடத்திய காரணத்தால் – மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய தன்மையால் – நடப்பது அரசியல் சட்டப் போராட்டமல்ல – ஆரியர் – திராவிடர் போராட்டமே என்று நாள்தோறும், நாள்தோறும் மக்களைச் சந்தித்து சந்தித்து பகுத்தறிவு – இனநலப் பிரச்சாரப் பீரங்கி முழக்கத்தை நடத்தி வந்ததால் ஆட்சியாளர்கள் மத்தியிலும், ஒரு மாற்றத்தைக் காண முடிந்தது.
காங்கிரசில் இருந்தபோதே நீதிக்கட்சியின் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணைகளையும், இந்து அறநிலையத்துறை ஏற்பாடு போன்றவைகளையும் ஆதரித்து வந்திருக்கிறார்.
நான் எப்பொழுதுமே கட்சிக்காரனல்ல – கொள்கைக்காரன் என்று தந்தை பெரியார் சொன்னதை இந்த இடத்தில் நினைவுப்படுத்திக் கொள்ளலாம்.
நீதிக்கட்சி ஆட்சி, காமராஜர் தலைமையிலான ஆட்சி, அண்ணாவின் ஆட்சி, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆட்சி, இவற்றின் பின்னணியில் கல்வி சமூகநீதிக்கான அஸ்திவாரத்தைப் பலமாகக் கட்டமைத்தவர் தந்தை பெரியார்.
இன்றைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆட்சி அந்த அடித்தளத்திலேயே கெட்டியாக ஊன்றி, கம்பீரமாக ஏறுநடை போட்டு வருகிறது. இதற்குத் தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் உறுதுணையாக – செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
1938லும் 1952லும் சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் முதலமைச்சராக இருந்தபோது கல்வியில் பார்ப்பனீய ஆதி பத்தியத்தை நிலை நாட்டிய நிலையில், சுயமரியாதை இயக்கத் தந்தையாம் பெரியார். பூகம்பமாய், எரிமலையாய் பொங்கி எழுந்து – மக்களைத் திரட்டியதால் இனப்பகைவர்களின் திட்டம் தவிடுப் பொடியானது.
ஒன்றிய அரசைப் பொறுத்தவரை – குறிப்பாக பி.ஜே.பி. ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு பார்ப்பனரல்லாதாரின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்வதற்கான சூழ்ச்சிகளை அரங்கேற்ற ஆரம்பித்தனர்.
மாநில அரசுக்குக் கட்டுப்பட்ட மருத்துவக் கல்வி இடங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மத்திய தொகுப்புக்குக் கொண்டு சென்ற நிலையில், அதற்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று அடம் பிடித்தனர். உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி இடஒதுக்கீடு மீட்கப்பட்டது.
அதோடு ஒன்றிய பிஜேபி அரசு அமைதி காத்திடவில்லை. ‘நீட்’ என்ற கொடுவாளை ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மார்புக்கு எதிரே நீட்டினர். உயர்ஜாதியில் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு (நாள் ஒன்றுக்கு ரூ.2100 சம்பாதிப்பவர்கள் பார்ப்பனர்களாக இருந்தால் ஏழைகளாம் – இதுதான் மனுதர்மப் புத்தி), அதனைத் தொடர்ந்து இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்கும் ஒரே கல்வித ்திட்டம் என்று கூறி, தேசிய கல்வித் திட்டம் என்ற ஒன்றைத் திணித்துள்ளனர்.
பார்ப்பனீய கலாச்சாரத்தின் ‘அக்மார்க்’ அம்சமான சமஸ்கிருதம் – அதன் குட்டிக் குரங்கான ஹிந்தியைத் திணிக்கிறார்கள்.
3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளுக்கு அரசு பொதுத் தேர்வாம்! குழந்தைகளா – குட்டிச் சுவர்களா – என்னே மனுதர்ம சங்பரிவார்ப் புத்தி!
5ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தால் தொழிற் கல்விக்குச் செல்ல வேண்டுமாம். விஞ்ஞானம் வளர்ந்த ஒருகால கட்டத்தில் தொழிற் கல்விக்குக்கூட உச்சக் கட்டப் படிப்புகள் தேவை என்பது கூடத் தெரியாதா இந்த சங்பரிவார் கும்பலுக்கு?
5ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த வர்கள் கிராமப்புறங்களில் எந்தத் தொழிற்கல்வியைப் பெற முடியும்? இதற்குள் குடியிருக்கும் சூட்சமம் – அந்தத் தொழில் என்பது 5ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த சிறுவனின் அப்பன் செய்யும் தொழில்தானே?
என்னே சாணக்கியத்தனம்! ஈரோட்டுக் கண்ணாடி போட்ட திராவிடர் கழகம் இருக்கையில் திராவிட இயக்கக் கொள்கையை உள் வாங்கியவர்கள் ஆட்சியில் இருக்கும் கால கட்டத்தில் – இவர்களின் கண்ணி வெடியை நமத்துப் போகச் செய்திடுமே!
அவற்றில் ஒன்றுதான் கடந்த 3ஆம் தேதி தமிழ் நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்கள்.
‘போராடுவோம் – வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!’ என்பது தானே திராவிடர் கழகத்தின் இலக்கு!
தொடர்வோம் தோழர்களே, ஒத்த கருத்துள்ள சமூகநீதியாளர்களோடு கைகோர்ப்போம்!
பயணங்கள் முடிவதில்லை – வெற்றி முனையில் தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொடி பட்டொளி வீசப் பறக்கும்!
வாழ்க பெரியார்!