மும்பை, செப்.6- மராத்திய மாநிலம் மும்பை கலைஞர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கூட்டம் தாராவி அசோக்மில் காம்பவுண்ட் அரங்கத்தில் புரவலர் பொ.அன்பழகன், செயலாளர் ஜேம்ஸ்தேவதாசன்,பொருளாளர் க.மு.மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் மேனாள் திமுக மாநில இளைஞரணி அமைப்பாளர், கலைஞர் தமிழ்ச் சங்கம் நிறுவநர் – தலைவர் ம.சேசுராசு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை மும்பையில் சிறப்பாக கொண்டாடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை மராத்திய மாநிலம் மும்பையில் கலைஞர் தமிழ்ச் சங்கம் சார்பில் வருகிற நவம்பர் திங்களில் மிகவும் சிறப்பாக நடத்திட இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இவ்விழாவில் 500 நபர்களுக்கு மேல் இலவச நலத் திட்ட உதவிகள் வழங்குவது எனவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு சிறப்பு சேர்த்திடும் வகையில் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியிடுவது என்றும், கலைஞர் புகழை மென்மேலும் பரப்புகின்ற வகையில் கவியரங்கம்,கருத்தரங்கம் நடத்துவது எனவும், மும்பையில் இயக்க வளர்ச்சியில் மும்முரமாக இருந்து செயலாற்றிய முன்னோடிகளை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கு கலைஞர் படம் பொறித்த சுவர் கடிகாரங்கள் வழங்கிட வேண்டும் எனவும், கலைஞர் படம் பொறித்த 2025ஆம் ஆண்டுக்கான தினசரி நாள்காட்டி வெளியிடுவது எனவும், மும்பையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படும் தமிழ் ஆர்வலர்களை அழைத்து சிறப்பு செய்வது எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இலவச நலஉதவிகள் வழங்கி பேருரையாற்ற சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களையும், அன்றைய தினம் நடைபெறவிருக்கின்ற கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கிற்கு தலைமையேற்று நடத்தித்தர மேனாள் அமைச்சரும், காரைக்குடி கலைஞர் தமிழ்ச் சங்கம் நிறுவநருமான இலக்கியத் தென்றல் முகவை மு.தென்னவன் அவர்களையும் அழைத்து சிறப்பு சேர்க்க வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜான் சாமுவேல்,நீதிதுரை,காரை இரவீந்திரன்,மாறன் ஆரியசங்காரன், தனுஷ்கோடி,வே.இரவிச்சந்திரன், இரா.ரவிரஜினி, ரா.காந்தி,அ.அலெக்சாண்டர், களந்தை சண்முகவேலு மற்றும் சி.பாண்டியன், பிராங்கிளின், எம்.ராஜன், தை.ரூசோ, காளிமுத்து, எஸ்.பி.ஆனந்த், ரவிகுணசீலன், வெ.அன்பரசு, மு.இராமநாதன், ஜோயல், தோ.ஸ்டிபன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு சால்வைக்கு பதிலாக கருப்பு சிவப்பு கலர் சட்டைத் துணி கொடுத்து மரியாதை செய்யப்பட்டது. நிர்வாகக் குழுவினர்கள் சேர்ந்து புரவலர்,தலைவர்,செயலாளர்,பொருளாளர் ஆகியோர்க்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்கள். கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து அனைவராலும் பூக்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.