யார் வயிற்றில் அடிக்கிறார்கள்?

Viduthalai
3 Min Read

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து   5 கோடி பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இத்தகவலை எழுத்துபூர்வ பதிலாகத் தெரிவித்துள்ளார். இது கடந்த 2021- 2022 நிதியாண்டை ஒப்பிடுகையில் 24.7% அதிகம் என்பது தெரிய வந்துள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த யுபிஏ அரசில் 2006-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்து கொண்டவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகின்றன. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் பல கோடி குடும்பங்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளன. இந்நிலையில், 2022- 2023 நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புஉறுதித் திட்டத்திலிருந்து  5 கோடி பணியாளர்கள் நீக்கப்பட்டுள் ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கவுரவ் கோகோய், விகே ஸ்ரீகாந்தன் ஆகியோர் 2022-23 நிதியாண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.43 சதவீதம் அதிகரித் துள்ளதாக ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகையில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கிரிராஜ் சிங் இந்தப் பதிலை அளித்துள்ளார்.

ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையில் ஆதார் எண்ணுடன் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டையை இணைக்க வலியுறுத்தி யதும், இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கான ஊதியத்தை ஆதார் அடிப்படையில் பணம் செலுத் துதல் முறைக்கு மாற்றியதுமே பணியாளர்கள் வெகு வாகக் குறையக் காரணம் என்று குறிப்பிடப்பட்டி ருந்தது. 2023 தொடங்கி ஜூன் மாதம் 23 ஆம் தேதி வரை 61 லட்சம் பதிவு செய்யப்பட்ட பணி யாட்களின் பெயர் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் தெரி வித்திருந்தது.  இந்நிலையில் ஆதார் – ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்ட அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை ஒன்றிய அரசு 4ஆவது முறையாக ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது.  இது  இத்திட்டத்தின் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதையும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களின் கேள்வியில் சுட்டிக்காட்டியிருக்க அதற்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த அமைச்சர் கிரிராஜ் சிங், “ஆதார் – ஊரக வேலை அட்டை இணைப்பை முறைப்படுத்தி உறுதி செய்தல் மாநில அரசுகளின் பொறுப்பு” என்று கூறியிருக்கிறார். மேற்குவங்க மாநிலத்துக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை முற்றிலுமாக ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளதாக சமாளிக்கிறது. திட்டத்தை முறையாகப் பின்பற்றாததால் நிதியை நிறுத்தியதாக ஒன்றிய அரசு காரணம் கூறியுள்ளது. அடுத்தபடியாக தெலங்கானாவில் 27.27%, ஆந்திரப் பிரதேசத்தில் 11.47% என எதிர்கட்சி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தொடர்ந்து பயனாளிகள் நீக்கப்பட் டுள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பயனாளர்கள் நீக்கம் 24.7% ஆக அதி கரித்துள்ளதற்கு சமூக செயற் பாட்டாளர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.   தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிறுபான்மையினர் நூறுநாள் வேலை திட்டத்தினால் அதிகம் பயன்பெறுகின்றனர்.

ஒன்றிய பிஜேபி அரசு யார் வயிற்றில் அடிக்கிறது என்பது இப்பொழுது புரிகிறதா?

சிறுபான்மையினரும் தாழ்த்தப்பட்ட மக்களுமே பிஜேபி ஆட்சியின் தாக்குதல் குறியாகும்.

மாட்டுக்கறி பிரச்சினை, குடி மக்கள் உரிமைப் பிரச்சினை பற்றியெல்லாம் சிந்தித்தால் இதன் உண்மை கண்டிப்பாக விளங்கும்.

அல்லற்பட்டு ஆற்றாது அழும் கண்ணீர் இந்த அரசை வீழ்த்தும் படை என்பது நினைவில் இருக்கட்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *