பொழுது விடிந்து பொழுது போனால் ஊடகங்களில் தவறாமல் வெளிவரும் செய்தி – பெண்கள்மீதான பாலியல் வன்கொடுமை யாகும். கடந்த ஒரு மாதமாக அனல் பறக்கும் செய்தி – திரைத் துறையில் பெண்கள் படும் பாலியல் பெருந் துயரம் என்ற செய்தி காட்டாறாகப் பெருக்கொடுத்து ஓடி வருகிறது!
இது நாடா, கடும்புலிகள் திரியும் காடா என்று நினைக்கத் தோன்றுகிறது. பேருந்திலேயே பெண்கள் பாலியல் வன்தொல்லைக்கு ஆளாகிறார்கள் என்பது எல்லாம் எண்ணிப் பார்க்கவே முடியாத காட்டு விலங்காண்டித்தனம்!
கல்வி நிறுவனங்களில் ஆண் பேராசிரியர்கள் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ளும் அளவுக்கு நாடு சீழ்பிடித்துக் காணப்படுகிறது.
ஒரு ஆளுநரே இந்தப் பிரச்சினையில் சிக்கவில்லையா?
உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என்று தரவுகள், ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகள்
1.இந்தியா, 2.ஆஃப்கானிஸ்தான், 3.சிரியா, 4.சோமாலியா, 5.சவூதி அரேபியா, 6.பாகிஸ்தான், 7.காங்கோ குடியரசு, 8.ஏமன், 9.நைஜீரியா, 10.அமெரிக்கா
எதனை அடிப்படியாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது?
சுகாதாரம், பாகுபாடு பார்த்தல், கலாச்சார மரபுகள், பாலியல் வன்கொடுமை, பாலியல் அல்லாத வன்கொடுமை, ஆள் கடத்தல். இந்த ஆறு மரபுகளைஅடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த முடிவுகளின் ஆய்வு அடிப்படையிலேயே, இந்தியா பெண்களுக்கு ஆபத்தான நாடு என்று கூறுகின்றது.
இதே ஆய்வு ஏழு ஆண்டுகளுக்கு முன்பும் நடத்தப்பட்டது. அப்போது இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது.
பெண்கள் பிரச்சினைகளில் வல்லுநர்களாக இருக்கும் சுகாதார பணியாளர்கள், அரசு சாரா அமைப்புகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு அவர்கள் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
சுகாதார குறைபாடு, எச்.அய்.வி/எய்ட்ஸ் நோய்களில் இருந்து பாதுகாப்பு மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வு, பாலியல் நோய்கள், குழந்தை பேறுகால ஆரோக்கியம், குழந்தை இறப்பு விகிதம், கருத்தடை மற்றும் குடும்ப கட்டுப்பாடு உள்ளிட்டவைகளை கணக்கிட்டும் கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் முதல் மோசமான நாடு ஆஃப்கானிஸ்தான் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியா இதில் 4ஆவது இடத்தில் உள்ளது.
வேலையில் பாரபட்சம், வாழ்வாதாரத்தை இயக்குவதில் இயலாமை, நிலம், சொத்து அல்லது பரம்பரை உரிமைகளில் பாகுபாடு, கல்வி பற்றாறக்குறை, உள்ளிட்டவைகளை அடக்கி பாகுபாட்டில் எது மோசமான நாடு என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஃப்கானிஸ் தான் மற்றும் சவூதி அரேபியா முறையே ஒன்று மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன.
பெண் பிறப்புறுப்பு சிதைவு, குழந்தை திருமணம், கட் டாயத் திருமணம், உடல் ரீதியான துன்புறுத்தல், பெண் சிசுக் கொலை போன்றவற்றை அடிப்படையாக வைத்து கேள்விகள் கேட்கப்பட்டன.
கலாச்சார மரபுகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.
பாலியல் ரீதியான வன்கொடுமை, குடும்ப வன்முறை, யாரென்று தெரியாத நபரால் பலாத்காரம் செய்யப்படுவது, இது தொடர்பான வழக்குகளில் முறையான நீதி கிடைக்காதது, கட்டாயப் படுத்தி உறவு வைத்துக் கொள்வது என இதிலும் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
வன்முறை, உடல் மற்றும் மன ரீதியாக இங்கு பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இதில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்.
வீட்டில் அடிமைப்படுத்துதல், கொத்தடிமையாக நடத்துதல், கட்டாயத் திருமணம் மற்றும் பாலியல் அடிமையாக நடத்தப்படுவது என இவற்றை அடிப்படையாக வைத்து பெண்களுக்கு எது ஆபத்தான நாடு என்று கேட்கப்பட்டது. இதிலும் இந்தியாவே முதலிடத்தில் அபாயகரமான நாடாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கேட்கப்பட்ட ஆறு பிரிவுகளில், 3 பிரிவுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடாக முதல் பத்து இடங்களில் இருக்கும் ஒரே மேற்கத்திய நாடு அமெரிக்கா என்கிறது தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவு.
விளம்பரங்கள் என்ற பெயரால் பெரும் தொழில் நிறுவனங்கள் பெண்களை அரைகுறை ஆடைகளுடன் பயன்படுத்துவது எல்லாம் சகித்துக் கொள்ளத்தக்கதுதானா?
திரைப்படக் காட்சிகளும் சொல்லும் தரமன்று!
பணியாற்றும் இடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லைகள்!
இதற்கெல்லாம் பரிகாரங்கள் என்ன? ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதுகாப்பாக காவல்துறை சார்பில் ஒருவரை நிறுத்த முடியுமா?
பெண்களை தற்காப்பு வீராங்கனைகளாகவும், தேவைப்பட்டால் எதிர் கொள்பவர்களை அடித்து வீழ்த்தும் ஆற்றல் உள்ளவர்களாகவும் உருவாக்கியே தீர வேண்டும்.
‘கும்மி, கோலாட்டங்களை ஒழித்து விட்டு, ஓடவும், குதிக்கவும், தாண்டவும், கைக்குத்து, குஸ்தி முதலியவைகளைச் சொல்லிக் கொடுத்து, ஆண் பிள்ளைகளுக்கு உள்ள பலம் தைரியும், உணர்ச்சி ஆகியவைகள் பெண்களுக்கும் உண்டாகும் படியாகவும் செய்ய வேண்டும்’’ (‘குடிஅரசு’ 26.4.1931) என்கிறார் தந்தை பெரியார்.
இதன் பொருள் என்ன? பெண் என்றால் மனதளவிலும் உடல் அளவிலும் பலகீனமானவர்கள் என்ற நிலை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் – மாற்றப்பட வேண்டும் என்பதுதான்.
‘‘ஓர் ஆணுக்குச் சமையல்காரி, ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி, ஓர் ஆணின் – குடும்பப் பெருக்கிற்கு பிள்ளை விளைவுக்கும் பண்ணை – ஓர் ஆணின் கண்ணழகிற்கு ஓர் அழகிய – அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல், பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! (‘குடிஅரசு’ 21.7.1946) என்ற தந்தை பெரியாரின் கூற்றில், எள் மூக்கு முனை அளவுக்குக் குற்றம் காண முடியுமா?
பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்குத் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுக் குழு தீர்மானம் நிறைவேற்றியதுண்டு.
இது ஏதோ வேடிக்கைக்கானது அல்ல – நடைமுறையில், யதார்த்தத்தில் தேவையானதே!
உயர்கல்வித் துறைக்கு மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது. பாலியல் தொந்தரவுப் புகார்களைப் பெறுவதற்கு ஏதுவாக பல்கலைக் கழகம், கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழு அமைக்க வேண்டும் என்று மாநில மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது போன்ற சுற்றறிக்கைகள் ஏற்கெனவே இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக் காயாகத்தான் உள்ளனவே தவிர, செயல்பாட்டில் சுழியமாகத் தான் இருக்கிறது என்பது கல்லுப் போன்ற உண்மையாகும்.
அத்து மீறினால் பெண்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற அச்சம் ஆண்களுக்கு ஏற்படும் வகையில் பெண்கள் தயாராக வேண்டும் – தயாரிக்கப்படவும் வேண்டும்.
இதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்த வல்லுநர் குழு ஒன்றைக்கூட அமைக்கலாம். அதில் பெண்களும் குறிப்பிட்ட அளவில் இடம் பெற வேண்டும்.