சென்னை, செப். 2- பிரதமரின் சிறீபள்ளிகள் மூலம் இந்தியை ஒன்றிய அரசு மீண்டும் திணிக்க முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை நேற்று முன்தினம் (31.8.2024) வெளியிட்ட அறிக்கை:
ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து போராடி வருகிறது. இந்த நிலையில், ஒன்றிய கல்வித் துறை அமைச்சகம் சமக்ர சிக்ஷா திட்டத்தை அறிமுகப்படுத்தி, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 573 கோடியை நிறுத்தி வைத்து, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்தால் நிதி ஒதுக்க முடியாது என நிர்பந்திக்கிறது.
தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், ‘பிரதமரின் எழுச்சி மிக்க இந்திய பள்ளிகள்’ எனும் திட்டத்தை அறிமுகம் செய்து இதன் வழியாக இந்தி மொழியை கற்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. மேலும், மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் தேசிய கல்விக் கொள்கையைத் திருத்தியமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இது தொடா்பாக பிரதமருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சரின் கடிதத்தை நோ்மறையாக பரிசீலித்து, உதவாமல் ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், முதலமைச்சரின் கடிதத்துக்கு விளக்கம் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் உணா்வுகளை மதிக்காமல், மாநில உரிமைகளை பறித்து, இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை வெளிப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஒதுக்கீடு பெற்றவர்கள் செப்டம்பர் 5க்குள் கல்லூரியில் சேர வேண்டும்
மருத்துவக் கல்வி இயக்கம் அறிவிப்பு!
சென்னை, செப். 2- ‘எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங்கில் ‘சீட்’ பெற்றவர்கள், வரும் 5ஆம் தேதிக்குள் கல்லுாரிகளில் சேராவிட்டால், அவை காலியிடங்களாக அறிவிக்கப் படும்’ என, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில்,
எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., இடங்களுக்கான பொது கவுன்சிலிங், tnmedicalselection.net/ என்ற இணையம் வழியாக நடந்தது.
இதில், அரசு ஒதுக்கீட்டில் 28,819 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டில் 13,417 பேரும் தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளில் இடங்களை தேர்வு செய்தனர். அவர்களின் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இட ஒதுக்கீடு ஆணையை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 5ஆம் தேதி பகல் 12:00 மணிக்குள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளில் மாணவர்கள் சேர உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு சேராத மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும் என, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்பு: அரசுப் பள்ளி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பா?
தனியார் கல்லூரிகள் மீது புகார்!
சென்னை. செப். 2- பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களிடம் சில தனியார் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் பொறியியல், மருத்துவம், சட்டம் உட்பட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே செலுத்திவிடுகிறது.
இந்த திட்டத்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் பயன்பெற்று வருகின்றனர். இதற்கிடையே நடப்புக் கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 3 சுற்றுகள் கலந்தாய்வு முடிந்துவிட்டன. இவற்றில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சென்று சேர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களிடம் சில தனியார் பொறியியல் கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதன்படி சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர சென்ற அரசுப் பள்ளி மாணவரிடம் விடுதிக் கட்டணமாக ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டுமென கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தும் ஒலிப்பதிவு சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இதுதவிர சில கல்லூரிகள் புத்தகம், சிறப்புப் பயிற்சி, ஆய்வக உபகரணங்கள் என வெவ்வேறு பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.
இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் கூறும்போது, “தமிழ்நாட்டில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறிவருகிறது. ஆனாலும், சில தனியார் பொறியியல் கல்லூரிகளின் அரசின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வருகின்றன.
இதை அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். மறுபுறம் தமிழ்நாடு அரசு தரும் கல்விக்கட்டணம் போதுமானதாக இல்லை. அதை முறையாக வழங்கினால் நாங்கள் ஏன் மாணவர்களிடம் கூடுதலாக வசூலிக்கப் போகிறோம் என தனியார் கல்லூரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகின்றன.