பாலியல் துன்புறுத்தல் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனை

viduthalai
1 Min Read

சென்னை, செப்.1 தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி மய்யங்களில் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வருகின்றன.

இந்நிலையில், கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் நாளை (2.9.2024) மதியம் 3 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள், கல்வி அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக துறைசார்ந்த அதிகாரிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து காணொலிக் காட்சி மூலமாக கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இதுகுறித்த தகவலை அனைத்து துறையினருக்கும் தெரிவித்து கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உள்துறை செயலர் தீரஜ் குமார் மின்னஞ்சல் வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *