புதுடில்லி, ஆக.31- செம்மொழி தமிழை ஒன்றிய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி யாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி உலக தமிழ் கவிஞர்கள் கலை இலக்கிய சங்கம் சார்பில் டில்லி ஜந்தர் மந்தரில் தமிழ்நாட்டு கவிஞர்கள் நேற்று (30.8.2024) உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கு டி.ஆர். ஆர். செங்குட்டுவன் தலைமை தாங்கினார். அகில இந்திய தமிழ்ச்சங்க தலைவர் கோவிந்தராஜ், உலகதிருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞான மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டக்குழு அமைப்பாளர் ச.கலையரசன் வரவேற்று பேசினார்.
போராட்டத்தை தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தார். இதில் டில்லி தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் இரா. முகுந்தன் மற்றும் கவிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசிடம் மனு அளிக்கப்பட்டது.
நியாய விலைக் கடையில் விடுபட்ட பொருட்கள்…
சென்னை ஆக.31 ஆகஸ்ட் மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப்.5 வரை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று (31.8.2024) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதிவரையில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.