ஒன்றிய பிஜேபி அரசின் அடாவடித்தனத்துக்கு ஓர் அளவே இல்லை. இந்தியா என்பது பல மாநிலங்களின் கூட்டணி என்ற அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாட்டைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறது.
எதிலும் அரசியல் கண்ணோட்டம், கட்சிக் கண்ணோட் டம் என்ற குறுகிய புத்தி கொண்ட கொடு அரிவாளைத் தூக்கிக் கொண்டு மூர்க்கத்தனமாக அலைந்து திரிகிறது.
மொழி வளர்ச்சி என்றாலும் செத்துப் போன சமஸ்கிருதத் துக்குத் தூக்கிக் கொடுக்கிறது – மற்ற மொழிகள் என்று வரும்போது பின்னங்காலால் உதைக்கிறது.
தேசிய புதிய கல்விக் கொள்கை என்ற ஒன்றைக் கொண்டு வந்து, மாநிலங்களின் கருத்துகளை, ஒரு மரியாதை என்ற அளவில் கூடக் கேட்காமல், கல்விக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் கொண்ட ஒரு குழுவை தன் விருப்பத்துக்கு நியமித்து, அவர்களிடமிருந்து ஓர் அறிக்கையை ஒப்புக்கு வாங்கி அந்த அடிப்படையில் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான தேசிய கல்விக் கொள்கை – திட்டத்தை அனைத்து மாநிலங்களும் செயல்படுத்த வேண்டும்; அப்படி செயல்படுத்தாத மாநிலங்களுக்கு, ஒன்றிய அரசு ஒரு சல்லிக்காசுகூட நிதியாகத் தராது என்று அடம் பிடிப்பது என்பது எந்த வகையில் ஆட்சி ஒன்றுக்கு தகுதி யும் – நாகரிகமும் என்பது உடையதாக இருக்க முடியும்?
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைத் திட்டத்தை ஏற்பதில்லை என்று திட்டவட்டமாகவே தெரிவித்து விட்டது.
தி.மு.க. மட்டுமல்ல தமிழ்நாட்டில் பிஜேபியைத் தவிர அத்தனைக் கட்சிகளும் பிசிறு சிறிதுமின்றி ஒரே குரலில் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்கின்றன என்பது அடிக் கோடிட்டுக் காட்ட வேண்டிய முதன்மையான கருத்தாகும்.
தமிழ்நாட்டில் இந்தக் கல்வித் திட்டம் பல தளங்களில், பல மேடைகளில் சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் இதுகுறித்து கலந்தாய்வுக் கூட்டத்தையும் நடத்தியது (28.7.2016).
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், கல்வியாளர்களும், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்களும் பங்கேற்றுப் பயனுள்ள கருத்தினை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில், மாணவர்களும், கல்வியாளர்களும் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர் (6.8.2016).
28.7.2016 அன்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது (8.8.2016). இவ்வார்ப்பாட் டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் சார்பாக சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் கருத் தரங்கமும், சென்னை விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப் பாட்டமும் நடத்தப்பட்டன.
2016 நவம்பர் 19 இல் அரக்கோணத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் இதற்காகவே இளைஞரணி சார்பில் மாநாடும் நடத்தப்பட்டது.
புதிய கல்விக் கொள்கை என்ன சொல்லுகிறது?
1. இது ஒரு நவீன குலக்கல்வித் திட்டமே!
2. ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பை உள்ளடக்கியது!
3. அய்ந்தாம் வகுப்புவரை தேர்வு முறையில்லை; அதற்குப் பின் தேர்வு உண்டு. அதில் இரண்டு முறைக்குமேல் மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றால், தொழில் பயிற்சிக்குச் செல்ல வேண்டும். (அதாவது அறிகபட்சப் படிப்பே 5 ஆம் வகுப்பு வரை தான்) 5 ஆம் வகுப்புவரை படித்தவன் தொழிலைக் கற்றுக் கொள்வது என்பது குலத்தொழிலைக் கற்றுக்கொள்ள மட்டுமே சாத்தியமாகும்!
4. உயர்கல்வி என்பது ஏழை – எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகும். அரசு உயர்கல்வியில் புதிய நிறுவனங்களைத் தொடங்காது.
5. மாநில அரசின் முடிவில் தலையிடுகிறது.
6. இந்தக் கல்வித் திட்டம் குறித்து நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாது- நடுவர் மன்றம் மட்டும் அமைக்கப்படும்.
7. இத்திட்டம் கல்வியாளர்களைக் கொண்டு வகுக்கப்பட வில்லை என்பது கவனிக்கத்தக்கது ஆர்.எஸ்.எஸ்.காரரான ஜெ.எஸ்.ராஜ்புத் என்பவர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
8. கல்வியைப் பன்னாட்டு மயமாக்கும் வர்த்தக்கத்தன்மை உடையது.
9. பதினான்கு வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய கல்வி என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதமே இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், கல்வியை உலக மயமாக்கிடத் துடிப்பது விபரீதமான ஒன்றே!
10. மழலையர் பள்ளிமுதல் உயர்கல்வி வரை கல்வியின் அளவில் ஒரே மாதிரியான பாடத் திட்டமும் நிர்ணயிக்கப் படுமாம். இதன் பொருள் இந்தியாவின் பன்முகத் தன்மை, பண்பாடு, மொழி, தட்பவெட்பம் எல்லாம் தூக்கி எறியப்பட்டு, இந்தியா ஒரே நாடு எனும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை அரங்கேற்றப்படுகிறது.
இந்தத் திட்டம் இட ஒதுக்கீடு பாதிப்புக்கு வழிவகுக்கும். தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாமையால் மருத்துவக் கல்லூரி பொதுப்போட்டியில்கூட தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், கிராமப்புற மக்கள் கூட சிறப்பான இடங்களைப் பெற்றுள்ளனர். புதிய கல்வித் திட்டத்தில் திணிக்கப்படும் நுழைவுத் தேர்வுமூலம் இந்த நிலை வேரோடு முற்றிலும் துடைத்து எறியப்பட்டு விடும்.
எந்த வகையில் பார்த்தாலும் ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்வித் திட்டத்தை ஏற்கவே முடியாது.
தமிழ், ஆங்கிலம் இரண்டுமே தமிழ்நாட்டில் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை வழிப்பட்ட, சட்டப்படி ஆக்கப்பட்ட நிலைப்பாடாகும். இந்த நிலையில் மாநில அரசு சட்டம் இயற்றி நடை முறைப்படுத்தப்படும். தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பிஜேபியின் சித்தாந்த வழிப்பட்ட சமஸ் கிருதத்தையும், ஹிந்தியையும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பச்சைப் பாசிச பார்ப்பனீய கொடூரமாகும்.
மக்கள் மன்றம் தான் இதற்கொரு முடிவை ஏற்படுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து சொல்வோம்!
வரும் செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கழக மாவட்டங்களில் ஒன்றிய அரசின் எதேச்சதிகார முரட்டுப் போக்கைக் கண்டித்து திராவிடர் கழக மாணவர் கழக, இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழக மாவட்டப் பொறுப்பாளர்கள், கழகத்தில் பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்கள் முழு ஒத்துழைப்பை அளித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திடுமாறு வலியுறுத்துகிறோம்.
இதில் ஒத்த கருத்துள்ள அமைப்பினரையும் நாட்டின் நலங் கருதி இருகரம் விரித்து வரவேற்கிறோம்.