இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வறுமை நிலை MPI மூலம் கணக்கெடுக்கப்படுகிறது. அதன்படி வறுமை ஒழிப்பில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக பீகார் உள்ளது.
வறுமையை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளை அய்க்கிய நாடுகள் அமைப்பு பாராட்டியுள்ளது.
அய்.நா. மதிப்பீட்டின்படி, 2005-2006 மற்றும் 2019-2021க்கு இடையில், இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை சுமார் 41.5 கோடி குறைந்துள்ளது. இதனை வரலாற்று மாற்றம் என்று அய்.நா. அமைப்பு கூறியுள்ளது.
இது அய்க்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாடு (OPHI) ஆகியவற்றால் வெளியிடப்பட்டுள்ளது.
பீகாரைத் தொடர்ந்து ஜார்கண்ட், அதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளன. இவற்றுக்கு அடுத்த இடத்தை மேகாலயா பிடித்துள்ளது.
இந்நிலையில் 51.9% வறுமை விகிதத்துடன் இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலமாக பீகார் உள்ளது. மேலும் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்கள் 3 மற்றும் 4ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.
இந்நிலையில் கோவா மாநிலத்தில் வறுமை வேகமாக குறைந்து வருவதாகவும், அதேபோல ஜம்மு காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் வறுமை குறைந்து வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலேயே கேரளாவில் தான் வறுமை குறைவாக உள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 0.71% மக்கள் மட்டுமே வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இதேபோல கோவாவில் 3.76%, சிக்கிமில் 3.82%, தமிழ்நாட்டில் 4.89% மற்றும் பஞ்சாப்பில் 5.59% வறுமை நிலவுகிறது.
நிட்டி ஆயோக்கின் அறிக்கையின் படி இந்தியாவின் வறுமை மிகுந்த மாநிலமாக பீகார் உள்ளது. குறிப்பாக தாய்மார்களின் ஆரோக்கியம், கல்வி, உணவு, மின்சாரம் என எல்லாவற்றிலும் பின்தங்கியுள்ளது.