சென்னை, ஆக. 30- தமிழ்நாடு கூட்டு றவுத் துறை பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன் களை குறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்கி வருகிறது.
அதன்படி, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணையவழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதியுடன் கூடிய ‘கூட்டுறவு’ என்ற செயலியை கூட்டுறவுத்துறை அறிமுகப்படுத்தியது.
இந்த ‘கூட்டுறவு’ செயலி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதுடன் கடன் விண்ணப்பத்தினை இணைய வழியே சமர்ப்பித்திடவும் முடியும்.
இந்த செயலியில் பயிர்க் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை வளர்ப்பு கடன், கடன் விண்ணப்பம், இ-வாடகை, வங்கி சேவை, உங்கள் சங்கம், இ-சேவை, மருந்தகம், கிடங்கு, நியாயவிலைக் கடை, தொடர்புக்கு, அலுவலகம் என்ற தலைப்புகளில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் சங்க உறுப் பினர்களால் ‘கூட்டுறவு’ செயலி மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பமானது தொடர்புடைய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு இணைய வழியில் சென்றடைகிறது.
இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள்.
அந்த வகையில், இந்த ‘கூட்டுறவு’ செயலி மூலம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வட்டி வீதம் 8.5 சதவீதமாக இருப்பதுடன் இந்த கடனை அடைப்பதற்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டுறவு வங்கி மூலம் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களை பெறுவதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் ‘கூட்டுறவு’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். செயலியை திறந்து, வங்கி சேவை பிரிவை தேர்வு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து கடன் தகவல் பொத்தானை அழுத்த வேண்டும்.
அதில், பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை வளர்ப்பு கடன், அடமானக் கடன், குறுகிய கால கடன், நகைக் கடன், தனிநபர் கடன், ஓய்வூதியர் கடன், வீட்டுக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், எம்.எஸ்.எம்.இ. கடன், வேலைசெய்யும் பெண்களுக்கான கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சில்லரை வணிகக் கடன், சுயஉதவிக்குழு கடன், தாட்கோ கடன், மனை வாங்கும் கடன், கல்விக் கடன், வாகனக் கடன், மூத்த குடிமக்களுக்கான அடமானக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களின் விவரம் பட்டியலிடப்பட்டிருக்கும்.
அதில், அதிகபட்சமாக வீட்டுக் கடனுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்படுகிறது. வீட்டுக் கடன் பெற விரும்புவோர் அதனை தேர்வு செய்ய வேண்டும். வீட்டுக்கடன் தேர்வு செய்யப்பட்ட உடன், கூட்டுறவு சங்கம் தொடர்பான விவரங்கள் (அதாவது மாவட்டம், வட்டம், சங்கம்), வங்கி விவரங்கள், தனிநபர் விவரங்கள், முகவரி, முந்தைய கடன் விவரங்கள் போன்றவற்றை பதிவு செய்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.