கும்மிப் பாட்டு!
கும்மியடி கொட்டிக் கும்மியடி – நம்ம
குன்றக் குடியாரின் நூறுக்கடி!
நம்மின மேன்மைக்கு நாளுமுழைத் திட்ட
நல்லடி யாரின்சீர் சொல்லியடி!
குன்றக் குடிதந்த குன்றாக்குடி! – திருக்
குறள்சொன்ன நல்லறத் தொண்டர்அடி!
எண்ணம் பெரியார்போல் ஏற்றுங்கொடி! – இங்கு
எல்லார்க்கு மெல்லாமும் வாய்க்கும்படி!
பல்லக்கிலே யேறாப் பண்பின்குடி! – இவர்
பொன்னாக் குதிர்சொற்கள் அன்பின்முடி!
உள்ளக் கிடக்கெல்லாம் ஊருக்கடி – அந்த
உத்தமர் பேர்சொல்லிக் கும்மியடி!
பாராண்ட மன்னரின் மேலாம்அடி! அவர்
பற்றெல்லாம் மானுடம் பற்றியடி!
கூராண்ட தாலவர் குன்றாக்குடி – எங்கள்
குருமகா சந்நிதா னம்தானடி!
கல்வி தரப்பல பள்ளிகண்டார் மக்கள்
கற்றுயர்ந் தோங்கிடக் கைகொடுத்தார்!
பள்ளிகள் சீர்பெறக் கூடல்கண்டார்! – அதில்
பண்டித நேருவும் பங்குகொண்டார்!
சீனப்போ ரின்போது தானணிந்த தங்க
மாலையை ஏலத்தில் விற்றுவிட்டுத்
தானமாய் ஆயிரம் நான்குதந்தே – பறை
சாற்றினார் தாய்நாட்டுப் பற்றினையே!
செந்தமிழ் தீய்த்திட வந்தஇந்தி கண்டு
செந்தழல் போலெழுந் தார்அடிகள்!
மந்தண மாய்மடம் உள்ளடங்கா – தவர்
மக்களுடன் தானும் வழக்கும்பெற்றார்!
பாரி புகழ்பாட வந்தகிளி! – இவர்
பட்டிமன்றப் பேச்சுக் கன்னற்பிழி!
ஊரி லிளைத்தோரும் உய்யும்படி – தொழில்
ஊக்கி வளர்த்தநற் தாயின்மடி!
கோயிலைச் சார்ந்தவர் குடிகளென்பார்! – ஊரின்
குடிகளைச் சார்ந்ததே கோயிலென்பார்!
வாயிலைத் தாண்டிடத் தடைகளிட்டார் – வஞ்சம்
மாய்க்க அடிகளார் வாதுரைத்தார்!
கருவறைக் குள்ளேநாம் கால்பதிக்க – நமக்
கதிகாரம் உண்டென்று சொன்னவராம்!
திருப்பத்தூர்த் தமிழ்ச்சங்கக் கூடலிலே – செல்லத்
தீர்மானம் செய்தவர் நம்மடிகள்!
“இழிதகை நீக்கிநல் லேற்றந்தரும் ஓர்
இணையற்ற வீரராம்” நம்பெரியார்!
“தமிழினத் தந்தையாம் தழுவிப்பழ – கிடும்
இனியபண் பாடாம்” எனவிளித்தார்!
நூறாண்டு கண்டாராம் தேதிப்படி – பல
நூற்றாண்டு சென்றாலும் வாழும்படி
நூல்பல தந்தவர் பேரறிஞர்! – மதி
நுட்பத்தின் நுண்ணிய உச்சமவர்!
வேரை மறந்திடா வெல்விழுதாம் – அய்யா
வீரமணி சொன்ன சொல்லின்படி
காரைக் குடிநகர் மெச்சும்படி – நாம்
காண்போம் விழாவென்று கும்மியடி!
தாரைதாரை யாகத் தமிழர்குடி – வந்து
தமிழரின் நன்றியைக் காட்டும்படிச்
சாரைசாரை யாகச் செல்வோமடி – வர
லாறு படைத்துநாம் வெல்வோமடி!
– செல்வ மீனாட்சி சுந்தரம்