உயிரோடு விளையாடும் ஒன்றிய பிஜேபி அரசு!

Viduthalai
3 Min Read

ஆகஸ்ட் மாதம் நாடெங்கும் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசின் ஆயுஷ் துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. மருந்து மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின் விதிமுறை 170 இனிமேல் செல்லாது என்பதுதான் அந்த சுற்றறிக்கை!
விதிமுறை 170 என்பது என்ன?
ஆயுர்வேத, சித்த, யுனானி மருந்து தயாரிப் பாளர்கள் தத்தம் மருந்துகளின் நன்மை என்ற பெயரில் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் விளம்பரம் செய்வதை விதிமுறை 170 தடுக்கிறது. அப்படி எந்த ஒரு மருத்துவ ஆய்வறிக்கை சான்றும் இன்றி கண்டபடி விளம்பரம் செய்தால் அவர்கள் மேல் நடவ டிக்கை எடுக்க அரசுக்கு அந்த விதிமுறை அனுமதி அளிக்கிறது; நிறுவன உரிமத்தை ரத்து செய்து சிறைத் தண்டனை வழங்கவும் அந்த விதிமுறை வலியுறுத்துகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த குறிப்பிட்ட விதிமுறையை ரத்து செய்துள்ளது புதிய சுற்றறிக்கை!
இந்த விதிமுறை எண் 170 நீக்கப்பட்ட பிறகுதான் கருப்புப் பணப் புகழ் சாமியார் ராம் தேவின் பதஞ்சலி மிகவும் அதிகமாக போலியான தகவல்களைக் கூறி விளம்பரங்களை செய்தது.

தங்கள் மருந்துகளை உட்கொண்டால் ரத்த அழுத்தம், நீரழிவு மற்றும் எலும்பு தேய்மான வலிகள் எல்லாம் சில நிமிடங்களில் குண மாகி விடும் என்று அந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
அவற்றின் மீதான வழக்கில்தான் இந்த சுற்றறிக்கை வெளிச்சத்துக்கு வந்தது. அந்த சுற்றறிக்கையை திரும்பப்பெறுமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உடனடி ஆணை பிறப்பித்தது. ஒன்றிய அரசும் உடனே ஆவன செய்வதாக உறுதி அளித்திருந்தது.
ஆனால் ஒன்றிய அரசு அவ்வாறு செய்யாமல் புதிதாக வெளியிட்ட சுற்றறிக்கையில் அந்த விதி எண் 170 நீக்கப்பட்டுள்ளதுதான் அதிர்ச்சிக் குரியது.
இதற்கான காரணத்தின் பின்னணி என்ன?

‘அந்த சாமியார் ராம்தேவ் உட்பட மோடிக்கு ஆதரவான பல கார்பரேட் மருந்து நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என்பதால்தான் இந்த புதிய நிலைப்பாடு!
உச்சநீதிமன்ற ஆணையை ஒன்றிய அரசு அப்பட்டமாக மீறி இருக்கிறது. இது குறித்த விசாரணையை முடிவுக்குக் கொண்டு வந்த உச்ச நீதிமன்ற அமர்வு ஒன்றிய அரசின் சுற்றறிக்கையை தாங்களே ரத்து செய்வதாக அறிவித்தது. ‘அப்படி செய்ய வேண்டாம். அரசு சார்பில் இது குறித்து ஒரு புதிய வரைவு அறிக்கை தாக்கல் செய்கிறோம்’ என்று ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டதையும் உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. ‘நீதிமன்ற ஆணையை மீறி விட்டு எந்த மாதிரியான வரைவு அறிக்கையை தாக்கல் செய்யப் போகிறீர்கள்?’ என்றும் கேட்டிருக்கிறது.

மருந்து தயாரிப்பாளர்கள் குறிப்பாக மோடிக்கு நெருங்கிய நண்பர்கள்! பி.எம். கேர் மற்றும் தேர்தல் பத்திரங்களில் சில கோடிகளைக் கொடுத்து விட்டு தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வெளியிடும் – மக்களை ஏமாற்றும் விளம் பரங்களுக்கு ஒன்றிய அரசு துணை போவது எத்தகைய கொடுமை – விபரீதம்?
சில ஆயுர்வேத மருந்துகள் உடலில் உள்ள கால்சியம் சத்துக்களை கரைக்கும் தன்மை கொண்டவை; அமிலத் தன்மை வாய்ந்தவை. இதனால் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கும் ஆபத்தும் உள்ளது.
மேலும் சில மருந்துகள் ரத்தத்தில் கலந்து ரத்த நாளங்களின் சுவர்களை பாதிக்கும் தன்மை கொண்டவை.
இந்தியாவை ஆளும் ஒன்றிய பிஜேபி அரசு அரசமைப்புச் சட்டத்தையும் மதிப்பதில்லை – உச்சநீதிமன்ற தீர்ப்பையும் தூக்கி எறிந்து மக்களின் உயிரோடு விபரீத விளையாட்டு ஆடுவதற்கு – மக்கள் மன்றம்தான் தீர்ப்பளிக்க வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *