அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு – கட்டண உயர்வு ரத்து பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்

viduthalai
1 Min Read

சென்னை ஆக 30 தேர்வு கட்டண உயர்வு உள்பட அனைத்து கட்டண உயர்வும் திரும்பப் பெறப்படுவதாகவும், எனவே, மாணவர்களிடம் பழைய கட்டணங்களைத்தான் வசூலிக்க வேண்டும் என்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுக்கட்டணம், பட்டச்சான்றிதழ் கட்டணம், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், ஆய்வறிக்கை கட்டணம் ஆகியவற்றை அண்மையில் உயர்த்தியது. கட்டணங்கள் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறி அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அனைத்து கட்டண உயர்வும் திரும்பப் பெறப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார். இந்நிலையில், தேர்வு கட்டணம் உள்பட அனைத்து கட்டண உயர்வும் திரும்பப் பெறப்படுவதாகவும், எனவே, மாணவர்களிடம் பழைய கட்டணங் களைத்தான் வசூலிக்க வேண்டும் என்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்தின் பதிவாளர் ஜெ.பிரகாஷ் அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் நேற்று (29.8.2024) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

“உயர்கல்வித்துறை அமைச்சரின் ஆணையின்படியும், பரிந்துரையின் படியும், தேர்வுக்கட்டணம், சான்றிதழ் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களின் உயர்வும் திரும்பப்பெறப்படுகிறது. எனவே, அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் (தன்னாட்சி தகுதி மற்றும் தன்னாட்சி தகுதி பெறாதவை) முன்பு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்களையே மாணவர்களிடம் வசூலிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *