இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் பொறுப்பது?

Viduthalai
3 Min Read

உத்தரப்பிரதேச மாநிலம் பருக்காபாத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்க விடப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். உடல்களில் காயங்கள் வெளிப் படையாக தெரிந்த நிலையிலும் தற்கொலை என காவல்துறையினர் ஊடகத்தினருக்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.
26.8.2024 அன்று மாலை கிருஷ்ண ஜெயந்தி விழாவைப் பார்க்க தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் (வயது 15 மற்றும் 17) சென்றுள்ளனர். மாலையில் சென்றவர்கள் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவர்களைத் தேடியுள்ளனர்.

இந்த நிலையில் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள காயம்கஞ்ச் என்ற பகுதியில் உள்ள அடர்ந்த மாந்தோப்பில் இரண்டு சிறுமிகளின் உடல்களும் ஒரே துப்பட்டாவில் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன. இதனைக் கண்டு மாந்தோப்பு காவல்காரர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்து உடல்களை அப்புறப்படுத்தி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இது தொடர்பாக பருக்காபாத் காவல்துறை கண்காணிப்பாளர் அலோக் பிரியதர்ஷி கூறுகையில், ‘‘இரண்டு பெண்களும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக காவலர்கள் குழுவை அனுப்பினோம்” என்று கூறினார்.
“எங்களுக்குக் கிடைத்த முதல் அறிக்கையின் படி அவர்கள் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன, ஆனால் நாங்கள் முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம்.

அதே நேரத்தில் நிகழ்விடத்தில் உடைந்த நிலையில் ஒரு அலைபேசியின் கவரும் சிம் கார்டும் கண்டறியப்பட்டது’’ என்றும் அவர் கூறினார். இறந்துபோன சிறுமிகளிடம் அலைபேசி எதுவும் இருந்ததில்லை. இந்த நிலையில் அங்கு எப்படி உடைந்த அலைபேசி மற்றும் சிம் கார்ட் வந்தது என்பது குறித்தும் விசாரணை செய்துவருகிறோம் என்றார்.
இறந்துபோன ஒரு சிறுமியின் தந்தை, ‘‘எனது பிள்ளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாகக்’’ கூறினார். ‘‘அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கிருஷ்ணாஷ்டமியைப் பார்க்க அவர்கள் அருகில் உள்ள ஊருக்குச் சென்றனர். அப்படி இருக்க அவர்கள் நள்ளிரவில் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாந்தோப்பில் எப்படி தற்கொலை செய்திருப்பார்கள்? உடலில் காயங்கள் இருப்பது வெளிப்படையாக தெரிந்த போதும் காவல்துறையினர் தற்கொலை என்று கூறி உண்மையை மறைக்கின்றனர்’’ என்று இறந்துபோன சிறுமிகளில் ஒருவரின் தந்தை கூறினார்.

இதே போல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தாழ்த்தப்பட்ட சமூக சிறுமிகள் 2 பேர் வயலில் இறந்து கிடந்தனர். அதையும் தற்கொலை என்றுகூறி வழக்கை முடித்துவைத்துவிட்டனர். ‘‘சிறுமிகள் தற்கொலைக்கு எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில், எப்படி உடனடியாக தற்கொலை என்ற முடிவிற்கு காவல்துறையினர் வருகிறார்கள்’’ என அப்போதைய உத்தரப்பிரதேச சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதே போல் 2022 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

அவர்களது துப்பட்டா தூக்கிலிட பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அந்த நிகழ்வையும் ஆரம்பக் கட்டத்தில் தற்கொலை என்று காவல்துறை மூடி மறைக்கப் பார்த்தது, ஆனால் அகிலேஷ், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, மாயாவதி போன்றோர் – இந்தக் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – என்று அறிக்கை விட்ட பிறகு விசாரணையில் சிறுமிகளை சில உயர்ஜாதியினர் பாலியல்வன்கொடுமை செய்து கொன்று மரத்தில் தொங்க விட்டனர் என்று தெரிய வந்தது. இது தொடர்பாக 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாருக்காபாத் விவகாரத்திலும் எடுத்த எடுப்பிலேயே தற்கொலை என்று காவல்துறை கூறியுள்ளதன் மூலம் உயர்ஜாதியினரைக் காப்பாற்ற காவல்துறை எப்போதும் தயாராக இருக்கிறது என்பது உறுதியாகிறது.
அசாம், மகாராட்டிரா, உத்தராகண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்தில் தொடர்ந்து சிறுமி களுக்கு எதிராக பல பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் நடந்துள்ளன. தற்போது உத்தரப் பிரதேசத் திலும் கொடூரம் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
பாசிச ஆட்சிதான் பா.ஜ.க. ஆட்சி என்பதற்கு நாளும் பாலியல் வன்கொடுமைகளே சாட்சிகளாக மக்கள் முன் வந்து நிற்கின்றன.
அரசியல் சட்டத்தில் Sovereign, Democratic, Republic, Socialist என்பவை வெறும் வார்த்தைகளாக மட்டுமே உள்ளன. அவற்றின் சாறை உறிஞ்சித் தூக்கில் தொங்க விடுவதை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் பொறுப்பது?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *