பாபநாசம் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
பாபநாசம், ஆக.28 கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 24.8.2024 அன்று மாலை 6 மணிக்கு கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி பழைய வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கழக துணைத் தலைவர் வ.அழகுவேல் தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் சு.துரைராஜ் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய கழக செயலாளர் சு.கலிய மூர்த்தி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து தலைமை ஏற்ற மாவட்ட கழக துணைத் தலைவர் வ.அழகுவேல் கலந்துரையாடல் கூட்டத்தின் பொருள் பற்றி விளக்கிக் கூறினார்.
கும்பகோணத்தில் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது. தந்தை பெரியார் பிறந்த நாள் விழா. ‘விடுதலை’, ‘உண்மை’, சந்தா சேர்த்தல். கழக அமைப்பு பணிகள் ஆகியவற்றைப் பற்றி பேசினர்.
தொடர்ந்து மாவட்ட செயலாளர் சு.துரைராசு கூட்டத்தின் ஒவ்வொரு நோக்கத்தையும் விளக்கிப் பேசி, இது தொடர்பான கருத்துகளை வருகை புரிந்தவர்கள் பதிவு செய்ய வேண்டும் என கேட்டைக்கொண்டார்.
அடுத்த உரையாற்றிய ப.க. மாநில பொதுச்செயலாளர் வி.மோகன், இப்போது நடைபெறுவது முதல் கலந்துரையாடல் கூட்டம். கழகப் பொதுக்குழுவை மிக சிறப்பாக நடத்திய அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொண்டார்.
வருகிறது 28ஆம் தேதி தலைமைக் கழக அறிவிப்பின்படி மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை 51A[H] விளக்கப் பொதுக்கூட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆவூரில் நடைபெறுகிறது என்பதையும் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .
அடுத்து ‘விடுதலை’, ‘உண்மை’, ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’, ‘பெரியார் பிஞ்சு’ சந்தாக்கள் முடிப்பவர்கள் உடனடியாக தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும், புதிதாக சந்தாக்கள் சேர்க்க வேண்டியதன் அவசியம் பற்றியும் தெரிவித்தார்.
பெரியார் உலகம் பற்றி விளக்கி பெரியார் உலகத்திற்கான நன்கொடை திரட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என்பதையும் எடுத்து கூறினார் .
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாள் விழா அன்று வழக்கம் போல பாபநாசம் அண்ணா சிலையிலிருந்து பெரியார் சிலை வரை பேரணியாக செல்ல வேண்டும் என்றும்,
இந்தப் பேரணி ஒன்று தான் பாப நாசத்தில் நடைபெறும் ஒரே பேரணி என்பதையும் குறிப்பிட்டு, இதை அனை வரும் சிறப்புடன் நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அடுத்து பாபநாசத்தில் மீண்டும் சிந்தனைக்களம் மாதாந்திர கூட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டிசம்பர் 28,29 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெறும் நாத்திகர் மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து மாவட்ட தொழி லாளரணி பொறுப்பாளர் உமை யாள்புரம் பெரியார் கண்ணன், பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், காமராசர் கல்வி அறக்கட்டளை நிறுவனருமான மு. சேகர், பாபநாசம் ஒன்றிய கழகப் பொறுப்பாளரும், சமுதாய நல கல்வி அறக்கட்டளைப் பொறுப்பாளருமான கைலாசம், பாபநாசம் ஒன்றிய துணைச் செயலாளர் ஜனார்த்தனன், பாபநாசம் நகர தலைவர் இளங்கோவன், கபிஸ்தலம் இளவரசன், ஒன்றிய இளைஞரணி தலைவர் முத்துராஜா, பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழக பொறுப்பாளரும், திராவிட சமுதாய நல கல்வி அறக்கட்டளை பொறுப்பாளருமான சா. வரதராஜன், ஒன்றிய மகளிரணி தலைவரும், திராவிட சமுதாய நல கல்வி அறக்கட்டளை பொறுப்பாளருமான வி.பொம்மி ஆகியோர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தார்கள்.நிறைவாக தீர்மானங்களை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளரும், திராவிட சமுதாய நல கல்வி அறக்கட்டளை பொறுப்பாளருமான க.திருஞானசம்பந்தம் படித்தார்.
கலந்துரையாடலில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
குடந்தையில் நடைபெற்ற பொதுக்குழு வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒரு மனதோடு ஏற்றுக்கொண்டு, தீர்மானங்களை செயல்படுத்துவது என கூட்டம் தீர்மானிக்கிறது.
தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் வழக்கமான சிறப்போடு 17.9.2024 அன்று கொண்டாடுவது என தீர்மானிக்கிறது .
கழக ஏடுகளான ‘விடுதலை’, ‘உண்மை’, ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’, ‘பெரியார் பிஞ்சு’ சந்தாக்களை அதிகப்படுத்துவது என இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.
நிறைவாக ஒன்றிய துணைச் செய லாளர் ஜனார்த்தனன் நன்றி கூறிட, கூட்டம் முடிவுற்றது.