தமிழ் கூறும் நல்லுலகம், மதவாதிகளின் பிடியில் சிக்கி சிறுமைப் படுத்தப்பட்டுக்கொண்டு இருந்த காலத்தில் உலகின் பழைமையான மொழி மட்டுமல்ல. திராவிடமொழிகளின் தாய் என்று ஆய்வுகள் மூலம் உறுதி செய்து திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த ஒப்பற்ற மேதை. ராபர்ட் கால்டுவெல் நினைவு நாள் இன்று
திராவிட மொழிகளின் ஒப் பிலக்கணம் இங்கிலாந்தில் வெளி யிடப்பட்ட பிறகுதான், தமிழ் என்பது திராவிடம் என்ற ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்பதையும் அது சமஸ்கிருதத்தின் வேரில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதையும், சமஸ்கிருதத்தின் உதவியின்றி அது தனித்து இயங்கும் வல்லமை கொண்டது என்பதையும் அய்ரோப்பிய அறிவுலகம் அறிந்து மகிழ்ந்து ஏற்றது.
1814 மே மாதம் ஏழாம் தேதி அயர்லாந்தில் பிறந்தவர். 24 வயதில் கப்பலேறி இந்தியாவிற்கு வந்தவர். சென்னையில் இருந்து சிதம்பரம், மயிலாடுதுறை, தரங் கம்பாடி, கும்பகோணம், சிறீரங்கம், நீலகிரி, கோவை, மதுரை, பாளையங் கோட்டை, நாசரேத் இப்படி எல்லா ஊர்களையும் நடந்தே கடந்து இடையன்குடியில் தங்கியவர்.
1838 ஜனவரி எட்டாம் தேதி சென்னைக்கு வந்த கப்பலில் பயணித்த போது ஏற்பட்ட சூறைக் காற்றால் இன்னொரு கப்பலுடன் மோதி மூழ்கியதில், கப்பலில் இருந்த 6 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் ஒருவர்தான் ராபர்ட் கால்டுவெல்.
1841 இல் திருநெல்வேலி சென்று அங்கேயே இடையன்குடி என்ற ஊரில் தங்கி 50 ஆண்டுகள், தமிழ்ப் பணி யாற்றினார் திராவிட மொழிக் குடும்பத்தைத் திருந்திய மொழிகளென்றும் திருந்தா மொழிகளென்றும் இரண்டாகப் பிரிக்கிறார் ஆய்வாளர் கால்டுவெல்.
தமிழ் – மலையாளம் – தெலுங்கு – கன்னடம் – துளு – குடகு ஆகிய ஆறும் திருந்திய மொழிகளென்றும், துதம் – கோதம் – கோண்ட் – கூ – ஓரியன் – ராஜ்மகால் ஆகிய ஆறும் திருந்தா மொழிகளென்றும் ஆய்ந்து அறிவிக்கிறார். சம்ஸ்கிருதத்திலிருந்தே திராவிட மொழிகள் பிறந்தன எனும் கூற்று உண்மைக்குப் புறம்பானதென்பதைத் திருந்தா மொழிகளைக் கொண்டே தீர்ப்பளிக்கிறார்.
“திராவிட மொழிகளைச் சம்ஸ் கிருதத்திலிருந்து பிறந்தனவாகவே கொள்ளுதல் வேண்டும் என்று கூறும் கீழைநாட்டு மொழிநூலறிஞர்கள், சம்ஸ்கிருதச் சொற்கள் அறவே இடம்பெறாதனவாய் திராவிட மொழிகள் இருப்பதை அறிந்தவ ரல்லர்.
சம்ஸ்கிருதச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகளும் அச்சொற்களை ஆடம்பரப் பொருளாகவும், அழகுதரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழிவளர்ச்சிக்கு இன்றியமையாதனவென்று மதிப்பதில்லை.” திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண முதல் பாகத்தில் கால்டுவெல் கூறும் கட்டியம் இது. இந்தக் கருத்தை வெறுப்பாருண்டு; மறுப்பாரில்லை.
சமயப் பணி ஆற்ற வந்த கால்டுவெல் தமிழ்ப் பணியும் ஆற்றி, தமிழின் சிறப்பை திராவிட மொழிகளின் தனித்துவத்தை உகறியச் செய்தவர்.
அவருடைய நினைவு நாள் இன்று.