உலகின் முன்னணி நிறுவனத் தலைமை அதிகாரிகளைச் சந்திக்கிறார்!
சென்னை, ஆக. 27- தமிழ்நாட் டிற்கு பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.8.2024) அமெரிக்கா புறப்படுகிறார். இந்த பயணத்தின்போது உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலை மையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்தும், அதனை திறம்பட செயல்படுத்தியும் வருகிறது.
2030ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார மதிப்பு ஒரு டிரில்லியன் அமெரிக்க டால ராக உயர்த்தும் இலக்கை நிர்ண யித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டு வரு கிறார். அதன் ஒரு பகுதியாக ஏற்கெனவே துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்றுமுதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, உலக நாடுகளின் முன்னணி நிறுவனங் களை சந்தித்து பன்னாட்டு அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமெரிக்கா செல்கிறார்.
அமெரிக்க துணைத் தூதர் சந்திப்பு!
இதனை உறுதி செய்யும் வகையில் அண்மையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமெரிக்க துணை தூதர் கிறிஸ்டோபர் ஹாட்ஜஸ், முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், இன்று சென்னையில் இருந்து முதலமைச்சர் அமெரிக்காவிற்கு புறப்படுகிறார். ஏறத்தாழ 17 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
500 நிறுவனத் தலைமை நிர்வாகிகளைச் சந்திக்கிறார்!
அதன்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் தங்கி அங்குள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசுகிறார்.
ஆக.29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் ‘இன்வெஸ்டார் கான்கிளேவ்’ கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். ஆக.31ஆம் தேதி புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேசுகிறார். இந்த நிகழ்வுகளை முடித்த பின்னர், செப்.2ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிக்காகோ செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்று முதல் 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்கவும், முதலீடு களை செய்யவும் அழைப்பு விடுக்கிறார். குறிப்பாக, பன்னாட்டளவில் உள்ள ஃபார்ச்சூன் 500 நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை அவர் சந்திக்கிறார்.
உயர்தர வேலைவாய்ப்புகள் மற்றும் மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டை உயர்த்தும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இந்தச் சந்திப்பு வாய்ப்பாக அமையும். இந்த சந்திப்புகளுக்கு இடையே செப்.7ஆம் தேதி வெளிநாடு வாழ் தமிழர்களுடனான நிகழ்ச்சி யிலும் முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். ஒட்டுமொத்தமாக அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறைவு செய்து செப்டம்பர் 12ஆம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.
இதில் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தையொட்டி, முன்னதாகவே அமெரிக்கா சென்றுள்ள தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிகாகோ – அமெரிக்க தமிழர் களு டனான முதலமைச்சர் சந்திப்பு நிகழ்ச்சி குறித்து அமெரிக்க தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப் பிடத்தக்கது.