சென்னை, ஆக. 27- சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காத நிலையில் மாநில அரசின் நிதியிலேயே செயல் படுத்தி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
பரிசு வழங்கும் விழா
சென்னை கலைவாணர் அரங் கத்தில் 25.8.2024 அன்று தி.மு.க. பொறியாளர் அணி சார்பில், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடை பெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பொறியாளர் அணிக்கான செயலியை தொடங்கி வைத்தார்.
பின்னர், ‘கலைஞர் கட்டிய தமிழ்நாடு’ என்ற புத்தகத்தை வெளி யிட்டார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முனைவர் க.பொன்முடி, ராஜ கண்ணப்பன், சட்டமன்ற துணை தலைவர் கு.பிச்சாண்டி, மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, பொறியாளர் அணி மாநில தலைவர் துரை கி.சரவணன், செயலாளர் கருணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
ரஜினிகாந்த் பாராட்டு
எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் 45 நிமிடம் கலைஞர் பற்றி பாராட்டி பேசினார். எவ்வளவோ தலைவர்கள் பிறந்து சாதித்துள்ளார்கள்.
ஆனால், உலகத்திலேயே எந்த தலைவருக்கும் இப்படி ஒரு நூற்றாண்டு நிகழ்ச்சி எந்த இயக்கமும் நடத்தியது கிடையாது. நடத்துவதற்கு வாய்ப்பும் கிடையாது. அந்த அளவிற்கு தி.மு.க. கலைஞர் நூற்றாண்டை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளது.
அதற்கு தன்னுடைய வாழ்த்து களையும் தெரிவித்திருந்தார். இது போன்ற பேச்சு போட்டிகளின் மூலம் இளைஞர்கள் நமது பக்கம் வர தயாராக இருக்கிறார்கள்.
நாம் தான் அவர்களுக்கு வழிவிட்டு, வழிநடத்தி, கைபிடித்து அவர்களை அரவணைத்து செல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
மாநில அரசின் நிதி
இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பேச்சுபோட்டியை நடத்த வேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வார்த்தை பொறியாளர்கள். எந்த இயக்கத்திலும் இல்லாத வகையில் தி.மு.க.வில் தான் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பேச்சாளர்கள் அதிகமாக உள்ளார்கள்.
தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர் அண்ணா. அந்த பெயரை மாற்றுவதற்கு ஒரு கும்பல் முயற்சி செய்து வருகிறது. தி.மு.க. இருக்கும் வரை அதை நடக்கவிட மாட்டோம். நடக்கவும் நடக்காது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக ரூ.60 ஆயிரம் கோடி செலவாகிறது. மாநில அரசு 50 சதவீதமும், ஒன்றிய அரசு 50 சதவீதமும் ஒதுக்க வேண்டும்.
ஆனால், ஒன்றிய அரசு இது வரையிலும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.
இந்த திட்டம் நின்றுவிடக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் மாநில அரசின் நிதியில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
– இவ்வாறு அவர் கூறினார்.