30 வயது நபரை அடித்துக் கொன்ற மத போதகர்

Viduthalai
2 Min Read

சண்டிகர், ஆக.26 பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சிங்புரா கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் மாசிஹ் என்ற நபர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். சில நேரங்களில் அவர் திடீரென சத்தமிட்டு அலறித் துடித்துள்ளார்.
இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர், அதே பகுதியைச் சேர்ந்த மத போதகர் ஜேக்கப் மாசிஹ் என்பவரை வீட்டிற்கு அழைத்து சாமுவேலுக்காக பிரார்த்தனை செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன்படி தனது உதவியாளர்கள் 8 பேருடன் சாமுவேலின் வீட்டிற்குச் சென்ற மதபோதகர் ஜேக்கப், சாமுவேலின் உடலில் பேய் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பேயை விரட்டுவதாக கூறி ஜேக்கப்பும், அவரது உதவியாளர்களும் சாமுவேலை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலால் சாமுவேலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அவரது குடும்பத்தினரிடம் ஜேக்கப் உறுதியளித்துள்ளார். ஆனால், இந்த தாக்குதலில் சாமுவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதோடு சாமுவேலின் உடலை அவரது குடும்பத்தினரே யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் நடந்து இரண்டு நாட் களுக்குப் பிறகு சாமுவேலின் தாய் மற்றும் அவரது மனைவி ஆகியோர், சம்பந்தப்பட்ட மத போதகர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அடக்கம் செய்யப்பட்ட சாமுவேலின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மத போதகர் ஜேக்கப் மற்றும் அவரது உதவியாளர்கள் எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் செப்.1 முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது!
சென்னை, ஆக.26 தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்கிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக் கப்படுகிறது.
நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றியமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியது.
ஏப்ரல் மாதத்துக்கான சுங்கக்கட்டணம் ஜூனில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது அடுத்த(செப்டம்பர்) மாதம் சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது.
சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை, ஓமலூர் உட்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *