கறுப்பு என்றால் ஆளுநருக்கும் அச்சம் –பிரதமருக்கும் அச்சம்!
பிரதமரின் நேரடி தலையீட்டின் கீழ் இனி கல்வி நிறுவனங்களில் முக்கிய நிகழ்வுகளில் கறுப்பு ஆடைக்குத் – தடையாம்!
ஒன்றிய, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் பட்டமளிப்பு விழாக்களில் இனி கறுப்பு நிற ஆடை அணியக் கூடாது, அதற்குப் பதில் மாநில பாரம்பரிய ஆடைகளை அணியலாம் என ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது.
இந்த நடவடிக்கை பிரதமர் நரேந்திர மோடியால் கோடிட்டுக் காட்டப்பட்ட “பஞ்ச் பிரான்” தீர்மானங்களுடன் ஒத்துப்போகிறது, இது காலனித்துவ மரபுகளை அகற்றி இந்திய பாரம்பரியங்களை தழுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“பட்டமளிப்பு விழாவில் கறுப்பு வண்ண ஆடைகளுக்கு பதிலாக இனி இந்திய பாரம்பரிய உடையை அணிந்து கொள்ளலாம்” என்று ஒன்றிய அரசு மருத்துவமனைகள் மற்றும் ஒன்றிய அரசின் மருத்துவக் கல்வி நிலையங்களுக்கு சுகாதார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. “பட்டமளிப்பு விழாவின்போது அணியப்படும் கறுப்பு நிற ஆடை, ஆங்கிலேய ஆட்சியர்களால் தங்கள் காலனி ஆதிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது” என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதனால், இந்த காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்றும் பட்டமளிப்பு விழாவில் கறுப்பு வண்ண ஆடைகளுக்குப் பதிலாக இனி இந்திய பாரம்பரிய உடையை அணிந்து கொள்ளலாம் எனவும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய அரசால் வெளி யிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் பல்வேறு நிறுவனங்களால் நடத்தப்படும் பட்டமளிப்பு விழாக்களில், தற்போது நடைமுறையில் கறுப்பு அங்கி மற்றும் தொப்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆடை அய்ரோப்பாவில் இடைக் காலத்தில் உருவானது. மேலும், ஆங்கிலேயர்களால் அவர்களின் அனைத்துக் காலனிகளிலும் இந்த பழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பாரம்பரிய காலனித்துவ மரபு மாற்றப்பட வேண்டும்.
அதன்படி, மருத்துவக் கல்வியை வழங்குவதில் ஈடுபட்டுள்ள எய்ம்ஸ் உட்ளிட்ட அமைச்சகத்தின் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் பட்டமளிப்பு விழாவிற்குப் பொருத்தமான இந்திய ஆடைக் குறியீட்டை, நிறுவனம் அமைந்துள்ள மாநிலத்தின் உள்ளூர் மரபுகளின் அடிப்படையில் வடிவமைக்கலாம் என்று அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான முன்மொழிவு, செயலாளரின் (சுகாதாரம்) பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக அமைச்சகத்தின் அந்தந்த பிரிவுகள் மூலம் அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் – இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி அரசு எத்தகைய பிற்போக்குத்தனமானது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!
பேண்ட், கோட் சூட் அணிந்து உள்ளூரிலும் – வெளிநாடுகளிலும் செல்லுகிறாரே மோடி – இது காலனியாதிக்கக் கலாச்சாரமா – இல்லை இவர்கள் வலியுறுத்திவரும் பாரதீய கலாச்சாரமா?
இந்தியாவின் ஆட்சி நிர்வாக நடைமுறைகள் காலனி ஆட்சிக்கால முறையில் இருக்கிறது என்பதற்காக அவற்றை எல்லாம் தூக்கி எறிய திட்டம் ஏதேனும் உள்ளதா?
மாநிலத்திற்கு ஆளுநர் என்பது இவர்களின் பாரதீய கலாச்சாரமா – காலனியாரின் கலாச்சாரமா?
போகிற போக்கைப் பார்த்தால் வழக்குரைஞர் களும் நீதிபதிகளும்கூட இனி கறுப்புடை அணியக் கூடாது என்று சட்டம் போட்டாலும் போடுவார்கள்.
கண்களும் முடியும் கறுப்பாக உள்ளன என்பதால் அவற்றை பிடுங்கி எறிந்து விடு வார்களோ!
எதையாவது உளறிக் கொட்டி, நல்லதானாலும், கெட்டதானாலும் தங்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். (“Speak ill of me or well of me”) என்ற குறுகிய மனப்பான்மை இருக்கிறது என்ற விளம்பர மனப்பான்மையும் இதில் இருக்கிறது என்பதை அலட்சியப்படுத்த முடியாது – முடியவே முடியாது!