முதலமைச்சரின் தனிச் செயலாளராக பணியாற்றி வந்த முருகானந்தம் அய்.ஏ.எஸ். அவர்கள் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை தமிழ் நாடு அரசு தலைமைச் செயலாளர்களாகப் பதவி வகித்த 50 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் இரண்டாவது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி முருகானந்தம் அவர்களாகும்.
இதற்கு முன் 1999ஆம் ஆண்டு தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அப்போதைய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி ஏ.பி. முத்துசாமி அவர்களை தலைமைச் செயலாளராக நியமித்தார். அவர்தான் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்.
இன்றைய சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அய்.பி.எஸ். அவர்களும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அதிகாரி தான்.
முன்பு மிக முக்கியத் துறையான உள்துறை செயலாளராக பதவியில் இருந்து தற்போது முதலமைச்சரின் சிறப்புத் திட்ட அதிகாரியாக உள்ள அமுதா அய்.ஏ.எஸ். அவர்களும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல முக்கியமான துறைகளை கவனிக்கும் பல அய்.ஏ.எஸ். அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள்தான்.
அரசு நிர்வாகத்தின் மிக உயர்ந்த பொறுப்புகளில் எல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளை நியமித்து அழகு பார்த்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கான அரசாக தி.மு.க. அரசை நடத்துகிறார்.
இப்படி எப்போதும் ஒடுக்கப்பட்டோரை அதிகாரத்தின் உயரத்தில் அமரச் செய்வதே தி.மு.க.வின் சமூகநீதி அரசியல்!
பெரிய பதவிகளில் உள்ள இவர்களின் ஜாதி அடையாளங்களைக் காட்ட வேண்டும் என்பது நமது நோக்கமல்ல.
ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட – பிறப்பின் அடிப்படையில் கீழ்மைப்படுத்தப்பட்ட மக்களிடத்திலிருந்து – இந்த அளவுக்கு உயர்ந்த நிலையை அடைய முடிகிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது – இந்த நிலைமையை இவர்கள் எட்ட வேண்டும் என்பதற்காக 95 வயதிலும் அயராது பாடுபட்டவர் தந்தை பெரியார் – பாடுபட்ட – பாடுபட்டுக் கொண்டு வருகிற இயக்கம் திராவிடர் கழகம்.
கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களுக்குக் கல்விக் கண்களைத் திறக்க வேண்டும் – சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்; அப்படி வாய்ப்பு அளிக்கப்பட்டால் தங்கள் திறமையுடன் ஒளியைப் பாய்ச்சுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் இந்தப் பட்டியல்.
காலம் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட வர்களுக்கு இடஒதுக்கீடு ஏதோ இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது என்று எண்ண வேண்டாம்.
இங்கிலாந்தில் Equality Act என்றும், கனடாவில் Employment Equity என்றும், சீனாவில் Affirmative Minority Nationality Act என்றும் அமெரிக்காவில் Affirmative Act என்றும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால், ஒன்றிய பிஜேபி ஆட்சி ஏற்கெனவே கல்வி ரீதியிலும் சமூக ரீதியிலும் ஆதிக்கம் செலுத்துவோருக்கு 10 விழுக்காடு (EWS) இடஒதுக்கீடு அளிப்பது பச்சைப் பார்ப்பனீயம் அல்லவா!