மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசிய அன்வார் இப்ராஹிம் பின்னர் கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.
அன்வார் இப்ராஹிம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி டில்லியில் ‘உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சில்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா எதிர்கொண்டுள்ள சிறுபான்மையினர் மற்றும் மதம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அன்வார் இப்ராஹிம் பேசினார். இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பான கேள்விக்கும் பதிலளித்த இப்ராஹிம், ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரையும் நினைவு கூர்ந்தார்.
சிறுபான்மையினர் மற்றும் மத உணர்வுகளை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியா போராட வேண்டியுள்ளது என்பதை நான் மறுக்க மாட்டேன் என்று கூறிய அன்வார் இப்ராஹிம், இந்தியா தொடர்ந்து தனது சரியான பங்கை ஆற்றும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்டார்.
“நேரு, சீனாவின் சூ என்லாய், இந்தோனேசியாவின் சுகார்னோ, தான்ஸானியாவின் ஜூலியஸ் நைரேரே போன்ற தலைவர்கள் காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நின்று, உலகின் தென்பகுதி நாடுகளுக்கு ஆதரவாக இருந்தனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக மனிதநேயம், சுதந்திரம், ஆண்கள் மற்றும் பெண்களின் கண்ணியம் போன்றவற்றை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்பதை நான் பிரதமர் மோடியிடம் குறிப்பிட்டேன்,” என்று மலேசிய பிரதமர் தெரிவித்தார்.
நேரு, இந்திரா காந்தி பற்றி
அன்வார் இப்ராஹிம் ஏன் குறிப்பிட்டார்?
அன்வார் இந்தியா வந்தபோது டில்லியில் உள்ள அய்தராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி அவரை வரவேற்றார். இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது பல முக்கிய ஒப்பந்தங்கள் குறித்தும் அறிவிக்கப் பட்டன.
இந்த சந்திப்பின்போது அல்லாது மற்றொரு நிகழ்ச்சியில் இந்தியாவைப் பாராட்டிய அன்வார் இப்ராஹிம், “இந்தியா எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. மாணவர் தலைவராக பலமுறை நான் இந்தியா வந்துள்ளேன். இளம் மாணவர் தலைவராக இருந்த எனக்கு ஒருமுறை பிரதமர் இந்திரா காந்தியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆசியாவின் ஒன்பது இளம் தலைவர்கள் அவரிடம் பல விடயங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இனவெறி, ஊழல், மதவெறி போன்ற பிரச்சினைகள் பற்றி இளம் தலைவர்கள் கேட்ட கடினமான கேள்விகளுக்கு இந்திரா காந்தியின் தெளிவான மற்றும் தாயுணர்வுடன் கூடிய நிலைப்பாடு பாராட்டத்தக்கது,” என்றார்.
அன்வார் 2022 இல் மலேசியாவின் பிரதமராக ஆனார். பிரதமராக பதவியேற்ற பிறகு அன்வார் இந்தியா வருவது இதுவே முதல் முறை. “சுதந்திரம் மற்றும் மனிதகுலத்தின் நீதிக்காக வித்தியாசமான முறையில் போராடிய சிறீ அரவிந்தர் போன்ற சிந்தனையாளர்கள், காந்தி போன்ற தலைவர்களை தந்த நாடு இந்தியா,” என்று அன்வார் இப்ராஹிம் சுட்டிக்காட்டினார். ”ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா போன்ற சிறந்த அறிவுஜீவிகள் அவரவர் நாடுகளில் தலைவர்களாக திகழ்ந்தனர். இந்தியாவில் பெரிய மகான்களும் தலைவர்களும் இருந்தனர். நம்மில் பலருக்கு இந்தியா, இந்தப்பிராந்தியத்தில் ஜனநாயகம் மற்றும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உள்ளது,” என்றார் அவர்.
ஜாகிர் நாயக் குறித்து
அன்வார் இப்ராஹிம் கூறியது என்ன?
மலேசியா கடந்த சில ஆண்டுகளாக இன்னொரு காரணத்திற்காகவும் விவாதப்பொருளாக இருந்துவருகிறது. இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் மலேசியாவில் வசித்து வருகிறார். ஜாகிர் நாயக் இந்தியாவில் பணமோசடி மற்றும் வெறுப்பைத் தூண்டும் பேச்சு போன்ற விவகாரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்.
இந்தியா மற்றும் வங்கதேசத்தில் வெறுப்புணர்வை பரப்பியதாகவும், கடும்போக்கு வாதத்தை ஊக்குவித்ததாகவும் ஜாகிர் நாயக் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாகிர் நாயக்கின் உரையை ஒளிபரப்பும் பீஸ் டிவி நெட்வொர்க் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தடை செய்யப்பட்டது. டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜாகிர் நாயக் குறித்து அன்வார் இப்ராஹிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இந்த பயணத்தின் போது ஜாகிரை நாடு கடத்துவது தொடர்பான விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதா என்று அவரிடம் வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த அன்வார் ,“இந்த விவகாரம் எழுப்பப்படவில்லை. பிரதமர் மோடி பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்சினையை எழுப்பினார். நான் குறிப்பிட்ட ஒருவர் பற்றிப் பேசவில்லை மாறாக தீவிரவாத உணர்வுகளை பற்றி பேசுகிறேன். எந்தவொரு உறுதியான சந்தர்ப்பத்திலும், சில நபர்கள் அல்லது அமைப்பு சில அட்டூழியங்கள் அல்லது தவறுகளைச் செய்திருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்,” என்று கூறினார்.
”தீவிரவாதத்தை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம். தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து கடுமையாக செயல்பட்டு வருகிறோம். ஆனால் இந்த ஒரு விடயம் நமது வருங்கால ஒத்துழைப்பையும் இருதரப்பு உறவுகளையும் பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சித்த மலேசிய பிரதமர், ”பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களா, கிறிஸ்தவர்களா, இந்துக்களா அல்லது பவுத்தர்களா என்பது முக்கியமில்லை. அவர்கள் அனைவரும் மனிதர்கள். ’மன்னிக்கவும், எங்களால் எதுவும் செய்ய முடியாது’ என்று சொல்வது மிகவும் மோசமானது,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் மலேசியா இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்
• தொழிலாளர் ஆட்சேர்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு குறித்த ஒப்பந்தம்
• ஆயுர்வேதம் மற்றும் பிற பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒத்துழைப்பு
• டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு
• கலாச்சாரம், கலைகள் மற்றும் பாரம்பரியத் துறையில் ஒத்துழைப்பு திட்டம்
• சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பு
• மலேசியாவுக்கு இரண்டு லட்சம் மெட்ரிக் டன் வெள்ளை அரிசி சிறப்பு ஒதுக்கீடு.
• மலேசிய குடிமக்களுக்கு 100 கூடுதல் ITEC இடங்கள் அதாவது தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத் துறை திட்டங்களுக்கு ஒதுக்கீடு
• இரு நாடுகளுக்கும் இடையே ஸ்டார்ட்அப் துறையில் ஒத்துழைப்பு குறித்து ஒப்பந்தம்
இந்திய – மலேசிய உறவுகள்
இந்தியா 1957 ஆம் ஆண்டு மலேசியாவுடன் (மலேயா) தூதரக உறவுகளை ஏற்படுத்தியது. மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 27 லட்சம். இது அங்குள்ள மக்கள் தொகையில் சுமார் ஒன்பது சதவிகிதம் ஆகும்.
மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவளி மக்களில் 90 சதவிகிதம் பேர் தமிழ் பேசுபவர்கள். மீதமுள்ளவர்கள் தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி மற்றும் பிற மொழிகளைப் பேசுகிறார்கள்.
மலேசியாவில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் இந்திய புலம்பெயர்ந்தோர் பணிபுரிகின்றனர். மலேசியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது.
2023 ஏப்ரலில் இந்தியாவும் மலேசியாவும் டாலருக்கு பதிலாக தங்கள் நாணயங்களில் வர்த்தகம் செய்ய முடிவு செய்தன. இந்திய குடிமக்கள் விசா இல்லாமல் மலேசியாவிற்கு வந்து 30 நாட்கள் வரை தங்கலாம் என்று 2023 நவம்பரில் அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
அலுமினியம், இறைச்சி, இரும்பு மற்றும் எஃகு, தாமிரம், ரசாயனங்கள், அணு உலைகள், கொதிகலன்கள் மற்றும் இயந்திர உபகரணங்களை இந்தியா மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. அதேசமயம் இந்தியா மலேசியாவில் இருந்து உணவு எண்ணெய், மின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், விலங்கு கொழுப்பு, வனஸ்பதி கொழுப்பு, மரம் போன்றவற்றை இறக்குமதி செய்கிறது.
மலேசியவிலிருந்த பாமாயிலை அதிகம் வாங்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகம் சுமார் 19.5 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கிறது.
காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாடு
2019ஆம் ஆண்டு காஷ்மீரில் இருந்து 370ஆவது சட்டப் பிரிவை ஒன்றிய அரசு நீக்கியபோது, அதை எதிர்த்த நாடுகளில் மலேசியாவும் ஒன்று.
மலேசியாவின் அப்போதைய பிரதமர் மஹாதிர் முகமது 2019 செப்டம்பரில் அய்க்கிய நாடுகள் சபையில் “இந்தியா காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது” என்று கூறியிருந்தார்.
மலேசியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த அறிக்கைக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் போன்ற சூழல் ஏற்பட்டது. மலேசிய எண்ணெயை புறக்கணிப்பது குறித்து இந்திய தொழிலதிபர்கள் பேசியிருந்தனர்.
இருந்த போதிலும் மஹாதிர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.
“நான் மனதில் இருந்து பேசுகிறேன். பேசிய பிறகு பின்வாங்க மாட்டேன்” என்று மஹாதிர் முகமது கூறியிருந்தார்.
“அய்க்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின்படி இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று மட்டுமே கூறினேன். இல்லையெனில், அய்க்கிய நாடுகள் சபை இருந்து என்ன பயன்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
என்ஆர்சி மற்றும் சிஏஏ தொடர்பாகவும் மஹாதிர் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
“சமயச் சார்பற்ற நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியா சில முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிப்பதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன். இந்த சட்டத்தால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், எனவே இதை செய்வதற்கு என்ன அவசியம்? ஏறக்குறைய 70 ஆண்டுகளாக இவர்கள் அனைவரும் குடிமக்களாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
மலேசியா முஸ்லிம் பெரும்பான்மை நாடு. மலேசிய மக்கள் தொகையில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம்கள். உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.