மரிக்கவில்லை மனிதநேயம் கல்பனா சாவ்லா விருது பெற்ற சபீனா!

Viduthalai
6 Min Read

 

ஞாயிறு மலர்

தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது பெற்ற இந்த செவிலியர் சபீனா என்ன சாதித்தார்?
ரெயின்கோட் மட்டுமே அணிந்திருக்கிறார். கையில் முதலுதவி உபகரணங்கள் அடங்கிய ஒரு பையை இறுகப் பற்றியுள்ளார். கீழே ஆற்றில் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஆற்றை ஜிப்லைன் வாயிலாகக் கடந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டபோது சூரல்மலையில் இருந்து இப்படி ஜிப்லைன் மூலமாக ஒரு செவிலியர் முண்டக்கைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றியுள்ளார். அவர் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா.
ஜிப்லைன் வாயிலாகச் செல்வது அவருக்கு இதுவே முதன்முறை. மழை பெய்துகொண்டிருக்கிறது, மீண்டும் நிலச்சரிவுக்கான எச்சரிக்கை. ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தவில்லை என்பது அவரிடம் பேசியதில் புரிந்தது. “ஜிப்லைனில் சென்று சிகிச்சை அளிப்பதற்குப் பயமில்லையா?” எனக் கேட்டபோது, “பாதிக்கப்பட்டவர் களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. பயம் இல்லை” என பதிலளித்தார்.

அவருடைய பணியைப் பாராட்டி தமிழ்நாடு அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கி சுதந்திர நாள் விழாவில் கவுரவித்தது. செவிலியர் சபீனா, ஷிஹாப் தங்கல் மனிதநேய மய்யம் எனும் தொண்டு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கிக் கிடப்பவர்களின் வசிப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கும் பணியை அவர் செய்து வருகிறார்.
ஜூலை 29 அன்று கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சூரல்மலை, முண்டக்கை எனும் இரண்டு பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இரு கிராமங்களையும் இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது மீட்புப் பணிகளில் குறிப்பிடத்தக்க தடங்கல்களை ஏற்படுத்தியது.

குறிப்பாக, சூரல்மலையில் இருந்து முண்டகைக்கு அந்தப் பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே, முண்டகைக்குச் சென்று காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தாமதமானது. எனவே, ராணுவம், தேசியப் பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட மீட்புக் குழுவினர் சூரல்மலையில் இருந்து ஜிப்லைன் அமைத்து அதன் வாயிலாக முண்டக்கைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டியிருந்தது.
இப்படி ஜிப்லைன் வாயிலாக முண்டக்கைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்திருக்கிறார் செவிலியர் சபீனா. “ஜூலை 29ஆம் தேதி நள்ளிரவு நிலச்சரிவு ஏற்படுகிறது. 30ஆம் தேதி முதலுதவி உபகரணங்களை எடுத்துக்கொண்டு உடனடியாக வருமாறு எங்கள் குழுவி லிருந்து எனக்கு அழைப்பு வந்தது.”

“எங்கள் குழுவிலிருந்து ஏற்கெனவே பிந்து, சிந்தியா என்ற இரு செவிலியர்கள் அங்கு சென்றிருந்தனர். காலை 10-10.30 மணிக்கு நாங்கள் சூரல்மலைக்குச் சென்றபோது, ‘யாரும் இங்கு நிற்க வேண்டாம், ஆபத்து. மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம்’ என எச்சரித்தனர்” என்கிறார்
சபீனாவுக்கு அங்கிருந்து திரும்பிச் செல்ல மனம் வரவில்லை. “நாம் வந்தது உதவுவதற்காகத்தானே, ஏன் திரும்பிச் செல்ல வேண்டும், காத்திருக்கலாம் என எனக்குத் தோன்றியது” என்கிறார் அவர்.
அப்போது மீட்புக் குழுவினர், சூரல் மலையிலிருந்து முண்டக்கைக்கு ஜிப்லைன் வாயிலாகச் சென்று சிகிச்சை அளிக்க ஆண் செவிலியர்கள் யாரும் இருக்கின்றனரா எனக் கேட்டுள்ளனர். ஆனால், சபீனாவின் குழுவில் ஆண் செவிலியர்கள் இல்லை. பெண் செவிலியர்கள் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டாம் என மீட்புக்குழுவினர் கூறியதாக சபீனா தெரிவிக்கிறார்.
“ஆனால், நான் ஜிப்லைன் வாயிலாகச் சென்று முதலுதவி அளிக்க முன்வந்தேன். ஜிப்லைன் மூலமாக ஆற்றைக் கடந்து, முண்டக்கைக்குச் சென்று சுமார் 30-35 பேருக்கு முதலுதவி அளித்தேன்” என்கிறார் சபீனா.
“ஜிப்லைனில் செல்லும் போது நானே பெல்ட் அணிந்தேன். பெல்ட் இறுக்க மாக இல்லை என மீட்புக்குழுவினர் பயந்தனர். இருந்தாலும் சென்றேன். முதலுதவி உபகரணங்கள் உள்ள பை கீழே விழுந்துவிடப் போகிறது என ஆரம்பத்தில் பயந்தேன்” எனக் கூறுகிறார் அவர்.

நள்ளிரவிலும் முதலுதவி
சூரல்மலை – முண்டக்கை இடையே மீட்புப் பணி களுக்காக கடந்த ஆகஸ்ட் 1 அன்று இந்திய ராணுவத்தின், ‘மெட்ராஸ் சாப்பர்ஸ்’ எனும் மெட்ராஸ் இன்ஜினியர் குழு குறுகிய நேரத்தில் ‘பெய்லி பாலம்’ எனப்படும் தற்காலிக இரும்புப் பாலத்தைக் கட்டினர். அப்பிரிவின் மேஜர் சீதா ஷெல்கே எனும் அதிகாரியின் கண்காணிப்பில்தான் அப்பாலம் 31 மணிநேரத்தில் கட்டி முடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
ஆனால், அப்பாலம் கட்டப்படுவதற்கு முன்பு வரை மீட்கப்படும் உடல்கள், காயமடைந்தவர்கள் என எல்லோரையும் ஜிப்லைன் வாயிலாகத்தான் கட்டி மீட்புக் குழுவினர் அனுப்பினர். பாலம் அமைக்கப்படும் வரை ஒவ்வொரு நாளும் கூடலூரில் வீட்டிலிருந்து சூரல்மலைக்கு முதலுதவி உபகரணங்களுடன் வந்து, முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மீண்டும் கூடலூர் திரும்ப வேண்டும் என்று அப்போதைய சூழலை விவரித்தார் சபீனா.
“முதல் நாள் மட்டும்தான் முண்டக்கைக்கு ஜிப்லைனில் சென்று அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தோம். அப்போது இரவு 12 மணிவரை அங்கே இருந்தோம். அடுத்தடுத்த நாட்கள் சூரல்மலையில், மீட்புப் பணியின் போது காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்தோம்.”

‘பயம் இல்லை’
இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒருவரைத் தங்கள் குழுவைச் சேர்ந்த செவிலியர் சி.பி.ஆர். எனப்படும் உயிர்காக்கும் சிகிச்சையளித்து காப்பாற்றியதாக அவர் கூறுகிறார். “எனக்கு எந்தப் பயமும் அந்தச் சூழலில் இல்லை. விரைந்து சென்று காப்பாற்ற வேண்டும் என்றுதான் தோன்றியது. ஏற்கெனவே மீட்புக் குழுவினர் அங்கு சென்று திரும்பினர். அதனால் எனக்கும் பயம் ஏற்படவில்லை” என்கிறார் அவர்.
உடல்களும் காயமடைந்தவர்களும் ஒரே இடத்தில் கிடந்ததாகவும் சில நேரத்தில் உடல்களைத் தாண்டியும், (அறியாமல் மிதித்தும் செல்ல வேண்டியிருந்ததாக) கூறும் சபீனா, அந்தச் சூழல் தன்னை மிகவும் பாதித்ததாகக் கூறுகிறார். தான் முன்பு பணியாற்றிய தனியார் நிறுவனம் ஒன்றில் தாம் மிகவும் மதித்த ஒரு நபர் புற்றுநோயால் இறக்கவே, அதன் காரணமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்குப் பணி செய்ய முடிவெடுத்துள்ளார் சபீனா.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனது கண் முன்னே இறப்பதைப் பார்த்த சபீனா, வயநாடு நிலச்சரிவு துயரத்தையும் கனத்த மனதுடன் தாங்கிக்கொண்டு பணியை மேற்கொள்ள முடிந்ததாகக் கூறுகிறார். சபீனா, தனது ஒரே மகளையும் செவிலியர் படிப்பைப் படிக்க வைத்திருக்கிறார்.
“எங்கள் குழுவில் ஆண் செவிலியர்கள் இல்லாத நிலையில் சபீனா முன்வந்தார். ஆற்றில் கால் படவே கூடாது என மீட்புக்குழுவினர் அறிவுறுத்தினர். ஏனெனில் அந்தளவுக்கு ஆற்றில் ஆழம் இருந்தது. அந்த சமயத்தில் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது” என்கிறார், ஜிப்லைனில் முண்டக்கை சென்று முதலுதவி பணிகளை ஒருங்கிணைத்த அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் நவுபல் பதாரி.
சூரல்மலையில் வயதானவர்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோரை தங்கள் குழுவினர் காப்பாற்றியதாக அவர் தெரிவித்தார். 80 வயதுக்கு மேற்பட்ட கண் பார்வை இல்லாத இணையரைக் காப்பாற்றியது மறக்கவியலாத தருணம் என அவர் குறிப்பிடுகிறார். தங்கள் குழுவில் உள்ள செவிலியர்களுக்கு இத்தகைய அதிர்ச்சிகரமான நிகழ்வுகளில் பலதரப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுடன் எப்படி பழகுவது என்ற பயிற்சி வழங்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

“இது என் கடமை என நினைக்கின்றேன்”
அதே குழுவை சேர்ந்த ஆண் செவிலியரான, கேரளாவை சேர்ந்த சிபி மேத்யூ என்பவரும் ஜிப்லைனில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார். அவர் பிபிசி தமிழிடம் பேசும்போது, “இது என் கடமை என நினைக்கின்றேன். சரியானதை செய்ய வேண்டும் என நினைத்தேன்” என்கிறார். அந்த இடமே பாறைகள் நிறைந்த கடினமான பாதை என்றாலும் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே தங்கள் நோக்கமாக இருந்ததாக தெரிவித்தார்.
“ஜிப்லைனில் செல்வது பயமாக இருந்தாலும் அந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதுதான் எங்களின் முதல் எண்ணமாக இருந்தது” என்றார். இதேபோன்று, அக்குழுவிலுள்ள தமிழ் நாட்டின் பந்தலூரை சேர்ந்த செவிலியர்கள் பிந்து, சிந்தியா இருவரும் தாங்கள் எப்படி சி.பி.ஆர் சிகிச்சை மூலம் இறக்கும் தருவாயில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண்ணை காப்பாற்றினோம் என்பதை விவரித்தனர்.
“சூரல்மலையில் எங்கள் கண் முன் தான் அப்பெண்ணை சகதிக்குள் இருந்து மீட்டனர். அவர் வீடு நிலச்சரிவில் புதைந்துபோனது. லேசாக நாடித்துடிப்பு இருந்தது. உடனேயே நாங்கள் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ரத்த அழுத்த உபகரணம் ஆகியவற்றை பொருத்தி சி.பி.ஆர் கொடுக்க ஆரம்பித்தோம். இதனால் அவர் உயிர் பிழைத்தார். நாங்கள் நினைத்துப் பார்க்கவே இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்கிறார் செவிலியர் சிந்தியா.
“எங்கள் அமைப்பின் ஆம்புலன்ஸில் அவசர சிகிச்சை அளிக்க முடியாது, அதற்கான உபகரணங்கள் இல்லை. வேறொரு ஆம்புலன்ஸில் அந்த பெண்மணி இருந்தார். அங்கிருந்த மீட்புக்குழுவினர் எங்களிடம் வந்து சிகிச்சை அளிக்குமாறு கூறினர். ‘உயிர் இருக்காது’ என கூறினர். ஆனால், அவருக்கு நாடித்துடிப்பு இருந்தது, சி.பி.ஆர் சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினோம்” என அச்சம்பவத்தை உணர்வுப்பூர்வமாக நினைவுகூர்ந்தார் செவிலியர் பிந்து.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *