பொ.நா.கமலா
0.0. தோற்றுவாய்
நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் உழைப் புடனும், உற்பத்தி உறவுகளுடனும் தொடர்புடையன மொழிகள் – சமஸ்கிருத மொழியின் உருவாக்கம் உடல் உழைப்புடனும், உற்பத்தி உறவுடனும் தொடர்புடையது அன்று. உழைப்புடைய பிராமணர்களால் பல மொழிக் கலப்புடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட மொழி
(தி.முருகரத்தினம் “வருணாசிரம தருமமும் வாய்மொழியும் வள்ளுவமும்”: ப.12). ஆதிக்க இனமான ஆரியஇனம் தன் பாடையைத் ‘தேவபாடை’ என்றும், பிற பாடைகளை ‘நீச பாடை’ என்றும் கூறும் (மேலது). பிற மொழிகளைவிடத் தன் மொழி உயர்ந்தது என்ற நோக்கில் அவ் இனம் கூறியுள்ளது. சமஸ்கிருதமும் வைதிக சமயமும் பின்னிப் பிணைந்தவை, பிரிக்க, இயலாதவை.
0.1 தமிழில் சமஸ்கிருதக் கருத்தியல்கள் புகுத்தப் பெறுதல்:
சமஸ்கிருதச் சொற்களும், கருத்தியல்களும் தமிழ் மரபில் புகுத்தப்பெறுகின்றன. தமிழ் மக்களின் சமய, சமூக வாழ்விலும், பொருளாதார அரசியல் வாழ்விலும், பண்பாட்டு வாழ்விலும் அச்சொற்களும் கருத்தியல்களும் பெரும்பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன. ஒருமொழியாளர் மேல் பிற மொழியாளர் தம் சொற்களையும், கருத்தியல்களையும் புகுத்துவது மொழி வன்முறை (Language violence) எனப்படும். இத்தகைய மொழி வன்முறையின் நுண்அரசியலைத் (Micro-Politics) தமிழரில் பெரும்பான்மையோர் புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளனர். இன்றைய அரசியல் சூழலும், உலக மயமாதல் சூழலும் அதற்குச் சாதகமாக உள்ளது.
0.2 கட்டுரையின் நோக்கம்:
தமிழுணர்வு மிக்கோர் இச்சூழல்களைக் கண்டும் காணாதவர்களாக வாய் மூடி மவுனிகளாக இருப்பார்களே யானால் தமிழ்மொழி மட்டுமன்று தமிழர் சமயம், சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு அனைத்தும் சீரழிந்து விடும். எனவே, இக்கட்டுரையின் கண் தமிழர்மேல் புகுத்தப்படும் சமஸ்கிருதச் சொற்களும் அவற்றின் கருத்தியல் களும் விரிவாக விளக்கப்படுகின்றன. அக்கருத் தியல்களைக் கட்டுடைத்த சித்தர்கள் பற்றிச் சுருக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது. ழாக் தெரிதாவின் கருத்து அடிப்படையில் கட்டுடைக்கும் முறையிலும் ஒருசான்று மூலம் விளக்கப்பெறுகிறது.
சமய, சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் தளத்தில் புகுத்தப்பெறும் சொற்களும், கருத்தியல்களும் இனிப் பேசப்படும்.
1. சமயத்தளத்தில்
1.1. பிரம்மம்: பிரகதாரண்ய உபநிஷத்தில் ‘கடவுள் நிர் குணன்; நிமலன்; அனைத்தையும் படைத்து இயக்குகிறான்’ எனப் படைப்புக் கடவுள் பற்றிய கருத்து முதன் முதலில் காணப்படுகிறது. (கே.வரதராஜன், இந்திய தத்துவ தரிசனம், ப.42).
சங்கரரின் படைப்புக் கடவுள் ‘பிரம்மம்’. அது உலகப் பொருட்கள், பிரபஞ்சம் அனைத்தையும் உள் அடக்கியது அன்று, அனைத்துக்கும் வெளியே உள்ளது. முன் நிபந்தனையற்ற உயர்வு (Unconditional Superiority) உடையது; அது புனிதமானது என்பதாகும் (ந.முத்துமோகன், மார்க்சியக் கட்டுரைகள், ப.161). பிரம்மத்தைத் தெரிந்து கொண்டால் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டதாகும் என்பர். மேலும் பிரபஞ்ச ஒழுங்கமைவு, உலக ஒழுங் கமைவு, அனைத்து உயிர்களின் ஒழுங்கமைவு ஆகிய எல்லாவற்றையும் கண்காணிக்கும் கண்காணிப்பு அரசியல் பிரம்மம் (மேலது, ப. 163) என்பது சமஸ்கிருத மொழியினரின் கருத்து. ‘அதுவல்ல’, ‘அதுவல்ல’ (‘நேதி’, ‘நேதி’) என்று கூறி உலகைக் கடந்த நிலையில், உலகிற்கு அப்பாலை (Transcendental) நிலையில், உலகப் பண்புகள் எல்லாம் இல்லாத தளத்தில் பிரம்மத்தைத் தேடுவது ‘நேதி மார்க்கம்’ ஆகும் (ந.முத்துமோகன், இந்தியக்கதை : ஏகம் அநேகம் சாதியம், ப.11).
1.2 ஆன்மா : பிரம்மத்துக்கு இணையாக மனிதருள் ‘ஆன்மா’ என்ற ஒன்று. சமஸ்கிருதம் பேசும் வைதிகரால் உருவாக்கப்பட்டது. கீதையில் கண்ணன் அர்ஜுனனைப் பார்த்துக் கூறுவதாவது : “நைந்துபோன ஆடைகளைத் தள்ளிவிட்டுப் புது உடைகளை அணிவது போல ‘ஆன்மா’ ஓர்உடலைக் களைந்து விட்டுப் புது உடல் பெறுகிறது என்பதாம்.” (கே.வரதராஜன், ப.41).
ஆன்மா காலம் அற்றது; வெளி அற்றது; மனித உயிரை இயக்குவது. ஆன்மாவுக்கு உலகைக் கடந்த இருப்பு உண்டு. ஆன்மா மட்டுமே ஒரேதன்மை (self), பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றே என்பது சங்கரரின் அத்வைதம். பரமாத்மா காரணம், ஜீவாத்மா காரியம், இரண்டுக்கும் இடையில் தொடர்பு உண்டு என்பது இராமானுஜரின் விசிட்டாத்வைதம் (பேதாபேதம்) (தத்துவ தரிசனங்கள், ப. 223.)
1.3 மாயை : உலகமும் உலகத்துப் பொருட்களும் ‘மாயை’ என்பது சங்கரரது கருத்து. அனைத்துமே அழியக் கூடியவை என்பது அவர் தரும் விளக்கம்.
புத்தர் உலகப் பொருட்கள் அனைத்தும் மாறக்கூடியவை என்று சொன்ன கருத்தை அவருக்குப் பின் வந்த அவரது சீடர்கள், அனைத்தும் அழியக் கூடியவை, நிலைபேறு அற்றவை, அதனால் ‘மாயை’ எனக் கூறி விட்டனர். சங்கரரும் உலகை மாயை என்றார். (மேலது, ப.210).
1.4 முக்தி : ஆன்மா முக்தி அடையப் பிரம்மத்தைத் தேடிச் செல்ல வேண்டும். ஜீவாத்மா அழிவற்ற பேரின்ப நிலையை அடைவது முக்தி (தத்துவ தரிசனங்கள், ப.214).
பிரம்மம், ஆன்மா, மாயை, முக்தி ஆகியன யாவும் சமஸ்கிருதம் போற்றும் மக்கள் கண்ட அகமுகத்தன்மை (subjective) வாய்ந்த கூற்றுகள்; என்றென்றைக்கும் மாறாத (state and static) கூற்றுகளாக அவர்கள் ஆக்கியுள்ளனர். அவற்றை “வேதாந்திகள் தமிழர் மேல் புகுத்தியுள்ளனர். தமிழரின் தெய்வங்கள் அன்னார் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை. தொல்காப்பியர் பிரபஞ்சம் பற்றிப் பேசுகிறார்.
“நிலம் தீ நீர் வளி விசும்பொடு அய்ந்தும்
கலந்த மயக்கம் உலகம்’ (1589)
என்பது அவர் கருத்து, அய்ம்பூதங்களின் கலப்பு (Fission) மற்றும் பிரிதல் (Fssion) ஆகிய மயக்கங்களாலானது பிரபஞ்சம்.
‘மெய், வாய், மூக்கு, கண், செவி’ என்ற அய்ம்புலன்களின் செயல்பாட்டோடு கூடிய ஆறாவதான ஓர்அறிவே ‘மனம்’ எனத் தொல்காப்பியம் கூறும் (1526). மனத்தின் செயல் உள்ளல் அல்லது சிந்தனை (823); ‘நோக்கல் நோக்கம்’ (577) என்பது மனத்தால் நோக்கும் சிந்தனையைக் குறிப்பது. உயிரின் இயக்கம் மனம்; உயிரின் தொடர்ச்சி, உடலின் இயக்கம் என்பன தொல்காப்பியர் கருத்துக்கள்; பிரம்மம் பற்றியோ, ஆன்மா அழிவு பற்றியோ, மாயை பற்றியோ, முக்தி பற்றியோ அவர் பேசவில்லை.
அறவழியில் பொருள் தேடி, இன்பந் துய்த்து வாழும் தமிழர் வாழ்வில் ஒருகூறு தெய்வம். அத்தெய்வத்தையும் அவர் கருப்பொருளில் அடக்குவார். அய்வகை நிலத்தினர் வெவ்வேறு தெய்வங்களை வணங்கினர். ‘காமஞ்சான்ற கடைக்கோட்காலை தம் மக்களோடு கூடி அறம் செய்து சிறந்த செயல்களைச் செய்து இன்பமாக வாழ வேண்டும்’ என்பது தொல்காப்பியர் கொள்கை (1138). இவ்வாறான தமிழர் மரபில், சமஸ்கிருதம் பேசும் வைதிக நெறியினர் அப்பாலைக்கப்பாலான, புலன்களுக்கு அப்பாற்பட்ட பிரம்மம், ஆன்மா எனும் தம் சமயக் கருத்தியல்களைப் புகுத்துவது சமய வன்முறை (Religious Violence).
2.0 வைதிகரால் உருவாக்கப்பட்டவை
சமூகத்தளத்தில் கருமக் கோட்பாடு, வருணாசிரமம், ஸநாதன தர்மம், பிறவிச் சுழற்சி, நிஷ்காமிய கர்மம் போன்ற கருத்தியல்கள் சமஸ்கிருதத்தில் வைதிகரால் உருவாக்கப்பட்டுத் தமிழரும் அவற்றைப் பின்பற்றுமாறு செய்யப்பட்டதால் வர்க்க அடிப்படையில் அன்னார் மேன்மையுற்றாலும் ஜாதீய அடிப்படையில் தாழ்த்தப்பட்ட வர்களாகவே கருதப்பெறுகின்றனர்.
2.1 கருமக்கோட்பாடு சமணமும், பவுத்தமும் வினையின் பயன் செய்தவனைச் சென்று சேரும் எனக் கூறுவன. இது பகுத்தறிவுக்கு ஒத்த கூற்று. சமஸ்கிருத வைதிகமோ கருமக் கோட்பாட்டைப் பிறப்போடு இணைப்பது. கருப்பையோடு தொடர்புற்ற கோட்பாட்டைத் (Gene) ‘தலைவிதி’யோடு இணைக்கும் வைதிகரின் கருமக் கோட்பாடு பொருத்தமற்றதாகும்.
2.2 வருணாசிரமம்: மனுதர்ம சாஸ்திரம் வருணாசிரமத்தை வகுத்தளித்தது; ‘புருஷன்’ (பிரஜாபதி / பிரம்மன்) முகத்தி லிருந்து பிராமணரும், தோளிலிருந்து சத்திரியரும், தொடை யிலிருந்து வைசியரும், பாதத்திலிருந்து சூத்திரனும் பிறந்ததாகக் கூறும்; இந்தச் சமூக அமைப்பு மாறாத தன்மையில் நீடிக்கவும், கட்டிக் காக்கவும் அகமண முறையைப் (Endogamy) புகுத்தியது. அதனால் ஜாதியத்தால் இன்றளவும் மாறாத சமூக அமைப்பு நிலவுகிறது.
அவரவர் ஜாதிக்கேற்ற கடமைகளைச் செய்ய வேண்டும் என்பது ‘ஸநாதனதர்மம்’ எனப்படும். பிராமணர் கடமை ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன; சத்தியர் கடமை நாட்டை ஆளுதல்; வைசியர் கடமை வாணிகம் செய்தல்; சூத்திரர் கடமை மேற்கூறிய மூவர்க்கும் அடித்தொண்டு செய்தல். ஆட்சி செய்வோரின் ஆதரவோடு அவரவர் குலத்தொழில் முறை பின்பற்றப்பட்டது. ஆட்சி செய்வோர் ஆதரிக்கக் காரணம் அரசன் மகன் அரசனாவான் என்ற வாரிசுரிமைக் கோட்பாடாகும்.
2.3 பிறவிச் சுழற்சி : பிறவிச் சுழற்சி என்னும் கொள்கை மக்களிடம் சமஸ்கிருத வாணரால் கூறப்பட்டது. தன் கடமைகளைச் செவ்வனே செய்யும் சூத்திரன் மறுபிறவியில் வைசியனாகப் பிறப்பான்; அது போன்று கடமையைச் செய்யும் வைசியன் மறுபிறவியில் சத்திரியனாகப் பிறப்பான்; கடமையைச் செய்யும் சத்திரியன் பிராமணனாகப் பிறப்பான் என்பது சமஸ்கிருதம் பேசும் வைதிக நெறியினரின் பிறவிச் சுழற்சிக் கோட்பாடு ஆகும். அதன் மூலம் ‘மறுமை’ என்ற கோட்பாட்டையும் புகுத்தி அத்துடன் மோட்சம், நரகம் எனும் கருத்தியல்களையும் அவர்கள் திணித்தனர்; புண்ணியம் செய்தால் மோட்சம்; பாவம் செய்தால் நரகத்தில் ஜாதிக்கேற்ற தண்டனை என அச்சுறுத்தினர் என அறிக.
பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்தல் ‘நிஷ்காமிய கருமம்’ எனப்பட்டது. இக்கூற்று கண்ணனால் அர்ச்சுனனுக்குச் சொல்லப்பட்டதாகக் கீதையில் கூறப் பட்டுள்ளது. இது சத்திரியர்களுக்குக் கால்கட்டு, கைக்கட்டு போடுவதாகத் தோன்றினாலும், சமூகத்தினர் அனைவரும் தத்தம் குலத் தொழிலிருந்து மாறக்கூடாது என்னும் நியதியை வலியுறுத்தியது.
முகத்திலிருந்து தோன்றிய பிராமணர்கள் தேவர்வழி வந்தவர், புனிதமானவர் என்று கருதப்பட்டதால் பிறர் தீட்டுக்குரியவர் என்றாகிறது. மக்களை, இரு பிறப்பாளர் x ஒரு பிறப்பாளர், பூணூல் அணியும் உரிமை x பூணூல் அணியும் உரிமை இன்மை, கல்வி உரிமை x கல்வி உரிமை இன்மை என இருமை எதிர்வுகளாகப் பிரித்து ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியது சமஸ்கிருதம் பேசும் வைதிக நெறி.
மேற்கூறிய கருத்தியல்களைப் பொட்டலம் (Conceptual Package) ஆக்கி சமஸ்கிருதமொழி வழி இயங்குமாறு வைதிக நெறி அளித்துள்ளது. இறுகக் கட்டப்பட்ட இந்தப் பொட்டலத்தைத் தமிழர் அவிழ்க்க இயலாததால் இன்றளவும் ஜாதீயம் தன் கோலை ஓச்சி வருகிறது.
காலத்தின் ஊடாக, வெளியின் ஊடாகப் பயணித்து, பிரக்ஞையோடு தொடர்பு கொண்டுள்ள அனைவருடனும் அனைத்து இயற்கைப் பொருட்களுடனும் உறவு பூண்டு இயங்கி வரும் தமிழரை வருணாசிரமத்தால் ஒடுக்குவதும், முடக்குவதும் சமூக வன்முறை (Social Violence) ஆகும். உடலால் துன்புறுத்துவது மட்டுமே வன்முறை அன்று; உள்ளத்தால் துன்புறுத்துவதும் வன்முறையே.
3.0 பொருளியல் தளத்தில்
சமஸ்கிருத மொழிவழி வகுத்தளித்த ‘வருணாசிரமம்’ சமூகத்தின் மாறாத கட்டமைப்புக்கு மட்டும் வழி வகுக்க வில்லை; பொருளாதாரக் கட்டமைப்புக்கும் வழி வகுத்தது.
3.1 சமூகத் தகவாக ஆக்கி உழைப்புச் சுரண்டல்: கடமையைச் செய்தால் அதற்கேற்ற கூலி கிடைக்க வேண்டும் என்பது பொருளாதார இயங்கியல் (Dialectics) விதி. வருணாசிரமத்தின்படி ஜாதிக்கேற்ற தொழிலைப் பயன் கருதாமல் செய்ய வேண்டும் எனத் தாழ்த்தப்பட்டவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதோடு அது சமூகத் தகவாகவும் (Adaptation) ஆக்கப்பட்டுள்ளது. அதனால் பொருளாதார இயங்கியல் விதி தேக்க (Static) நிலைக்குக் கொண்டு வரப்படுகிறது என்பது ந.முத்துமோகன் கருத்து (மார்க்சியக் கட்டுரைகள், ப.205). அடித்தள மக்களின் உழைப் பானது அதற்குரிய பயன் மதிப்பைப் (Exchange value) பெற வொட்டாமல் சுரண்டலுக்கு ஆளாகிறது.
3.2 புரோகிதமும், பூசைத்தொழிலும், ஜோசியமும்: புரோகிதமும், பூசைத்தொழிலும், ஜோசியமும் உடல் உழைப்பு அற்ற தொழில்களாம். தம் பிழைப்புக்கு வழி தேடும் பிராமணர் மேற்கூறிய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புரோகிதம் : பிறப்பு முதல் இறப்பு வரை செய்யப்படும் அனைத்துச் சடங்குகளுக்கும் மக்கள் சமஸ்கிருதப் பிராமணர்களை நாடுகின்றனர். அவர் தம் மொழியிலுள்ள மந்திரங்களைக் கூறிச் சடங்குகளை நிகழ்த்தி விண்ணுல கத்துக் கடவுளரின் அருளைப் பெற்றுத் தரும் இடைத் தரகர்களாக அவர்கள் செயல்படுகின்றனர்.
பூசைத்தொழில்: செல்வாக்குப் பெற்றுவரும் கோயில் களைக் கையகப்படுத்திக் கொள்ளும் பிராமணர், வட மொழி மந்திரங்களைக் கூறிக் கடவுளருக்கு அர்ச்சனை செய்கின்றனர். அங்கு யாகங்களும் நடைபெறுகின்றன. சூத்திரருக்குக் கருவறையில் நுழையும் உரிமையும் கிடையாது. பூசை செய்யும் உரிமையும் கிடையாது. அதனால் பூசைத்தொழில் பிராமணருக்கே உரிய தொழிலாகி அன்னார்க்கு வருமானம் ஈட்டித் தருகிறது. வழிபாட்டுக்கு உரிய மொழி சமஸ்கிருதமே – இறவனை அடைய வல்லவை அம்மொழி மந்திரங்களே – என்ற கருத்து மக்களுக்குப் புகட்டப்படுகிறது. ‘வருணாசிரமத்தின் கர்ப்பக் கிரகம் கோயில்’ எனும் தி.முருகரத்தனம் அவர்களின் கருத்து மிகப் பொருத்தமுடைய கருத்தாகும். (வர்ணாசிரம தர்மமும் வாய்மொழியும் வள்ளுவமும், ப.14). சமூகத்தில் ஏற்றத்தாழ்வு மட்டுமின்றிப் பொருளாதாரத் தரத்திலும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் நிறுவனமாகக் கோயில் செயல்படுகிறது.
ஜோசியம்: வாழ்க்கையில் சிறு சிறு இடையூறுகள் ஏற்படுங்கால் அவை ஏதோ கண்ணுக்குப் புலனாகாத சக்தி களால் (Mystic Powers) என்று கருதி மக்கள் புரோகிதரையும் ஜோதிடரையும் நாட, அவர்கள் இன்ன தோஷம், அதற்குரிய பரிகாரம் இன்னது என்று கூறி அதற்குரிய பணமும் பெற்றுக் கொள்ளுகின்றனர்.
காசியில், தோஷத்துக்குப் பரிகாரம் ‘கோதானம்’ என்று கூறும் பிராமணர்கள் பசுக்களை உரியவர்களிடம் குறைந்த தொகைக்கு வாடகைக்குப் பெற்று வந்து மிகுந்த தொகையை, மக்களிடம் வசூலிக்கின்றனர். இஃது சான்று மட்டுமே. மக்களது அறியாமையையும், மூடநம்பிக்கையையும் பயன் படுத்திச் சமஸ்கிருத மந்திரங்களை ஓதுவோர் இவ்வாறு ஏய்த்துப் பிழைக்கின்றனர்.
சமூகத்தில் சுரண்டும் வர்க்கமும், சுரண்டப்படும் வர்க்கமும் உருவாகச் சமஸ்கிருத மொழியில் அமைந்த மந்திரங்கள் காரணமாகிவிடுகின்றன.
4.0 அரசியல் தளத்தில்
4.1 வாஸ்து சாஸ்திரமும், பூமி பூசையும் : மூவேந்தரும் பிராமணர் வழி இயங்கி வந்தனர் என்பது சங்க இலக்கியப் பதிவுகள் தரும் செய்தி. இன்றைய நிலையில் அரசியலும், மதமும் பின்னிப் பிணைந்த நிலையில் உள்ளன. இந்தியா சமயச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டாலும், அரசு கட்டடங்கள், அணைக்கட்டுகள் போன்ற கட்டுமானப் பணிகளுக்கு வாஸ்து சாஸ்திரம் பார்க்கவும், பூமி பூசை செய்யவும் பிராமணப் புரோகிதரையே நாடுகின்றனர். அவர்கள் சமஸ்கிருத மந்திரங்கள், சடங்குகளைக் கூறி நடத்தி வைக்கின்றனர்.
4.2 வேதப் பிராமணர்கள் குடியேற்றம் : பாண்டிய மன்னன் அய்ந்நூறு வேதப் பிராமணர்களைத் திருப்பரங்குன்றத்தில் குடியேற்றியமையைத் திருப்பரங்கிரிப்புராணம் கூறும். கூரையின்றி இருந்த சாமிகளையெல்லாம் கோயிலுக்குள் கொண்டு வந்து நிறுத்திய பெருமை பல்லவர்களையும், சோழர்களையும் சாரும். வடநாட்டிலிருந்து சமஸ்கிருதம் பேசும் பிராமணர்களை அழைத்து வந்து குடியேற்றி அர்ச்சனை செய்யும் பொறுப்பை ஒப்படைத்துத் தாழ்த்தப் பட்டவர்களைக் கோயிலுக்கு வெளியே நிறுத்திய பெருமை சோழர்களைச் சாரும். நந்தன் கதை நாடறியும்.
4.3 மடங்கள் வழி அரசியல் :
அரசு அதிகாரங்கள் மடங்கள்
வழி, ஆச்சாரியர்கள் வழி செயல்படுகின்றன என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஒரு சான்று கூற இயலும். திருவானைக்காவிலிலுள்ள அகிலாண்டேசுவரி கோயிலில் பிராமணர் அல்லாதவர் பூசை செய்து வந்தார். அக்கோயிலில் சிறீசக்கரத்தைக் கொண்டு வந்து நிறுவி, பூசனை செய்யும் உரிமையைச் சமஸ்கிருதம் பேசும் பிராமணர்க்குப் பெற்றுத் தந்தவர் ஆச்சார்யரான காஞ்சி மடத்துப் பெரியவர் என்பது வரலாறு. சிறீசக்கரம் தாந்திரீகப் பண்பாட்டுக்கு (Tantric culture) உரியது. அதனை வைதிகம் உள்வாங்கிக் கொண்டது; தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டது. கோயிலும் சமஸ்கிருத மயமாக்கப்பட்டு விட்டது.
4.4 பண்பாட்டு நிகழ்வுகளை அரசியலாக்குதல் : பிள்ளையார் வழிபாடு, விளக்கு வழிபாடு, முளைப்பாரி எடுத்தல், மழை வேண்டுதல் போன்றவை மக்கள் வழிபாட்டு மரபுகள்; பிள்ளையார் சதுர்த்தியைச் சுதந்திரப் போராட்ட காலத்தில் திலகர் வெள்ளையரை விரட்டக் கையில் எடுத்தார். இன்று சதுர்த்திக்குப் பிள்ளையார் சிலையை நிறுவும் இடங்கள், ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வழிகள், கரைக்கும் இடங்கள் ஆகிய அனைத்தையும் முடிவு செய்யும் உரிமை அரசுக்கு உரித்தாகிவிட்டது.’பிடிச்சா பிள்ளையார் வழிச்சா சாணி’ என்பது வணிகச் சாத்துடன் செல்லும் வைசியரின் வழக்கு. இன்று சமஸ்கிருதம் பேசும் வேதப் பிராமணரின் மரபாகிவிட்டது.
விளக்குப் பூஜையில் சமஸ்கிருத மந்திரங்கள், முளைப்பாரி எடுக்கும் அம்மன் கோயில்களில் அய்யர் பூசை, மழை வேண்டி வருண ஜெபத்தை அரசே முன்னின்று நடத்துதல் ஆகியவை இன்று கண்கூடு. அரசியல் தளத்தில் சமஸ்கிருதமயமாக்குதல் இங்ஙனம் பண்பாட்டு வழி மறைமுகமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
5.0 பண்பாட்டுத் தளத்தில்
மொழியியல் அறிஞர்கள் விளையாட்டுக் கோட்பாடு (Game Theory) என்ற ஒன்றைக் கூறுவார்கள். சதுரங்க விளையாட்டில் (Chess) எந்தக் காயை எப்படி நகர்த்தினால் வெற்றி பெறலாம் என்பது விளையாட்டு விதிகளுக்குள் அடங்காதது. அது போன்று சமஸ்கிருத மொழியானது புதிய புதிய பண்பாட்டுக் கலைச் சொற்களை உருவாக்குவதன் மூலமும், அம்மன் கோயில்களை, கிராம தெய்வங்களின் கோயில்களைச் சமஸ்கிருத மயமாக்குதல் மூலமும், மணவிழா போன்றவற்றில் சடங்குகளைப் புகுத்துவதன் மூலமும் பண்பாட்டுத்தளத்தில் மாற்றங்களைச் செய்து வருகிறது.
5.1 சமஸ்கிருதக் கலைச்சொற்கள் : பிரதோஷம். சங்கடஹரசதுர்த்தி, போதாயன அமாவாசை, மைதுலாஷ்டமி, பிரளயகல்பாதி (நாட்காட்டியில் கண்டவை) எனப் புதிய சமஸ்கிருதப் பண்பாட்டுக் கலைச்சொற்களைப் பயன்படுத்தி அதற்கேற்ற சடங்குகள், பூசனைகள் கோயில்களில் நிகழ்த்தப் பெறுகின்றன.
5.2 வேள்விப் பண்பாடு : வேள்வியில் மந்திரங்கள் கூறிப் பெய்யப்படும் ஆகுதியை அக்கினிதேவன் விண்ணுல கிலிருக்கும் இந்திரனுக்கும் பிற தேவர்களுக்கும் வழங்கி மகிழ்விக்கிறான் என்பது சமஸ்கிருத மொழிப் பண்பாட்டை மேற்கொண்டவரின் நம்பிக்கை இன்று நாட்டார் கோயில்கள் புதுப்பிக்கப்பெற்று, கோபுரங்களோடு அமைக்கப் பெற்றுத் தெய்வத்துக்குக் கும்பாபிஷேகம், பாலாபிஷேகம், சோடச உபசாரம் என வேள்விப் பண்பாடாகிய சமஸ்கிருதப் பண்பாடும் அவற்றில் திணிக்கப் பெற்றுள்ளது.
நாட்டார் தெய்வங்களும்
சமஸ்கிருத மயப்படுத்தப்பட்டுவிட்டன.
முருகன் – ஸ்கந்தன், சுப்பிரமணியன்
சொக்கன் – சுந்தரேசன்
சுடலைமாடன் – சிவன்
தடாதகை அம்மன் – மீனாட்சி
கூடமுடையார் – கூடலிங்கேசுவரர்
கள்ளர் – கள்ளழகர்
சாத்தன் அய்யனார் – அய்யப்பன்
தாராதேவி – திரவுபதி
கண்ணகி – பகவதி
கொற்றவை – பார்வதி, துர்க்கை
கொற்றவைக்கு உரிய அயிரைமலை இன்று அய்வர் மலையாகிப் பஞ்சபாண்டவர்க்கு உரித்தாகிவிட்டது.
5.3 அருந்ததி பார்த்தலும், அம்மி மிதித்தலும் : சேர மன்னர்கள் காலத்தில் புதுமணமக்களுக்கு அருந்ததி காட்டும் நிகழ்ச்சி பற்றிய குறிப்பு முதன் முதலில் பதிற்றுப் பத்தில் (86) காணப்படுகிறது.
அருந்ததி சமஸ்கிருத மரபில் கற்புக்குக் குறியீடாக விண்மீனாக விளங்குகிறாள். கோதமரின் மனைவி அகலிகை, இந்திரனின் செயலால் கல்லான கதை அறிந்த கதை. கற்பில் தவறிய பெண்ணுக்கு அகலிகை குறியீடு, திருமண விழாவில் அருந்ததி காட்டுதலும், அம்மி மிதித்தலும் நிகழக் காரணம் அருந்ததி போல் கற்புக்கரசியாக இரு. அகலிகை போல் ஆகி விடாதே எனப் பெண்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை. ஜாதி வேறுபாடின்றி எல்லாத் திருமணங்களிலும் சமஸ்கிருதப் பண்பாட்டு மரபுகள் திணிக்கப் பெற்றுள்ளன.
இத்தகைய சமஸ்கிருதப் பண்பாட்டு மரபுகளிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பது எவ்வாறு என்பது இன்றைக் குள்ள பண்பாட்டுச் சிக்கலாகும். ஈ.வே.இராமசாமிப் பெரியாரின் சுயமரியாதைத் திருமணங்கள் மூலம் இச்சடங்குகள் ஒருகாலத்தில் தவிர்க்கப்பட்டன. அவருக்குப் பின்னர் மீண்டும் இம்மரபுகள் புகுத்தப்பட்டு வருகின்றன.
6.0 சமஸ்கிருத வைதிகக் கருத்தியல்கள் மறுப்பு
சங்க இலக்கியங்களிலும், வள்ளுவர் குறட்பாக்களிலும் வருணாசிரமம் மறுப்பும், வேள்வி மறுப்பும், ஆரவாரச் சடங்குகள் மறுப்பும் காணப்படுகின்றன. அவற்றை விரிக்கின் பெருகும். எனவே சித்தர்கள் கூறிய மறுப்பு மட்டும் இக்கட்டுரையின் கண் சுருக்கமாக எடுத்துரைக்கப் பெறுகின்றன.
கட்டுடைத்தல் என்பது மறுப்பே : பிறன் கூற்றை மறுத்துத் தன் கூற்றை நிறுவுதலே கட்டுடைத்தல். கெட்டி தட்டிப் போன நிறுவனங்களையும், சமய, சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுக் கருத்தியல்களையும் இடையீடு செய்து (Interrupt) தகர்த்தலை (Rupture) ழாக் தெரிதா (Jaques Derrida) எனும் பின் அமைப்பியல்வாதி (Post-Structuralist) ‘கட்டுடைத்தல்’ (Deconstruction) என்று கூறினார்.
அகலிகை கதையைக் கட்டுடைத்துச் ‘சாப விமோசனம்” என்ற தன் கதையைப் படைத்தார் புதுமைப்பித்தன். நந்தன் கதையைக் கட்டுடைத்துப் புதிய நந்தனாரைப் படைத்துக் காட்டியவர் கோபாலகிருஷ்ண பாரதியார். கட்டுடைத்தல் சங்க காலம் தொட்டு நிகழ்ந்து வரும் திறனாய்வு மரபே. அதனைக் கோட்பாடாக்கியவர் தெரிதா.
6.1 சமஸ்கிருத வடபுல வைதிகக் கருத்தியல்களைக் கட்டுடைத்த சித்தர்கள்
வேதம் மறுப்பு : சிவவாக்கியர் என்ற சித்தர் கூற்றாவது :
‘சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ? (13:1,2)
என வினவும் அவர், நால் வேதங்களை மறுத்துள்ளார்.
ஆன்மா மறுப்பு :
‘ஆத்மா அனாதியோ? அனாத்மா அனாதியோ?
பூத்திருந்த அய்ம்பொறி புலன்களும் அனாதியோ?’
என்பது சிவவாக்கியர் கருத்து. ஆன்மா என்றும், அனாத்மா என்றும் பிரித்துக் கூறுகிறீர்களே! ஆன்மா எங்குள்ளது? அய்ம்பொறிகளும், அவற்றால் உணரப்படும் அய்ம்புலன்களுமன்றோ எதார்த்தம். உயிரின் இயக்கத்தை ஆன்மாவுக்கு உரித்தாக்குதல் எப்படிப் பொருத்தமாகும் என்பது அவர் கூற்றின் பொருளாகும்.
வேள்வி மறுப்பு : வேள்வியை மறுக்கும் சிவவாக்கியார், இட்ட குண்டம் ஏதடா?
இருக்கு வேதம் ஏதடா?’ (312 : 1)
என வினவியுள்ளார்.
பிரம்மம், நேதி மார்க்கம் மறுப்பு
‘மூலநாடி தன்னிலே முளைத்தெடுத்த சோதியை
நாலுநாழி அகத்திலே இருத்தினால் நாமே பரப்பிரம்மம்’ (69)
ஆகலாம். ‘பிரம்மத்’தைத் தேடி ஏன் அலைகிறீர்கள் என்பது சிவவாக்கியர் எழுப்பும் வினா. அது சோதியாக உமக்குள்ளே இருக்கிறதே என்பது அவர் கருத்து.
இல்லை இல்லை என்று நீர் இயம்புகின்ற ஏழைகாள்!
இல்லை என்று, நின்றதொன்றை இல்லை எனலாகுமோ?’ (116)
எனக் கேட்பதன் மூலம் ‘நின்றது ஒன்று’ இருப்ப, ‘நேதி நேதி’ என்று கூறும் நேதி மார்க்கமாகிய வேத மரபைக் கடிந்துரைத்துள்ளார் சிவவாக்கியர்.
‘சிவனும் சிவலிங்கமும் ஒன்று’ என்று கூறும் திருமூலர் நெறியும், சித்தர் நெறியும் ‘இதி இதி’ மார்க்கமாம். இவை ‘பிரம்மம்’ அதுவன்று என்று கூறாமல் ‘இதுவே தெய்வம்’ எனக் காட்டுகின்றன.
மாயை மறுப்பு : உலகம் அனைத்தும் ‘மாயை’ எனக் கூறும் சமஸ்கிருத மரபை மறுத்த சிவவாக்கியர்,
‘நான்ற வாசலைத் திறந்து நாடிநோக்க வல்லீரேல்
தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே’ (67: 3, 4)
எனக் கூறி உள்ளத்தில் விளங்கும் சோதி மயமான இறைவனைக் காண இயலும், நீவிர் கூறும் பிரம்மம், மாயை ஆகிய அனைத்தும் கற்பிதங்கள் என விளக்குகிறார்.
வருணாசிரமம் மறுப்பு : பத்திரகிரியார் நால்வருணம் எனச் சொன்ன மனு முதலியவர்களைச் சாடி, ஜாதி இல்லை என நாட்டிச் ‘சாங்கியம் நிறுவிய கபில முனிவரைப் போற்றுகிறார்.
‘ஆதிக்கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
ஜாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்? (125)
எனப் புலம்பி வருந்துகிறார்.
பிறவிச் சுழற்சி மறுப்பு: சிவவாக்கியர், ‘கறந்த பால் முலைப் புகா’ என்று தொடங்கும் பாடலில் ‘இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே’ (47) என்று கூறி மறுபிறவி, பிறவிச் சுழற்சி ஆகியவற்றை மறுத்துள்ளார்.
மந்திரங்கள் மறுப்பு : மந்திரங்கள் சாவைத் தடுக்கா என்பது சிவவாக்கியர் கூற்று.
‘மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே!
மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்வீரோ!’ (376:1,2)
என்பது அவர் கூற்று.
தீர்த்தமாடல் மறுப்பு : தீர்த்தமாடினால் செய்த பாவங்கள் தீர்வன என்பது வேதநெறியினரின் நம்பிக்கை. கடுவெளிச் சித்தர்,
‘காசிக்கோ டில்வினை போமோ – அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ?’ (15:1)
என வினவி அந்த நம்பிக்கையைத் தகர்த்துள்ளார்.
சமஸ்கிருதம் புகட்டும் கருத்தியல்கள் ஒருசேர மறுப்பு : பாம்பாட்டிச் சித்தர் கூற்றாவது
“சதுர்வேதம் ஆறுவகைச் சாத்தி ரம்பல
தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களே” (98)
என்பதாகும். வேதம் வீண்,சாத்திரங்கள் வீண், தந்திரங்கள் வீண், புராணங்கள் வீண், ஆகமங்கள் வீண் எனக் கூறிச் சமஸ்கிருதக் கருத்தியல்களைக் கூறும் வேத நெறியினரின் நூல்கள் அனைத்தையும் அவர் ஒருசேர மறுத்துள்ளார்.
7.கருத்தியல்களைக் கட்டுடைத்தல் ஒன்றே வழி
சித்தர்கள், மக்களை நோக்கிப் ‘பித்தர்காள்! மதிஇலாத மாந்தர்காள்!’ என விளித்துச் சீவனுக்குள் சோதி இருக்கையில் சமஸ்கிருதக் கருத்தியல்களும், வேதாந்த நெறிகளும் எதற்கு என்று கேட்டு மக்களைத் திருத்தித் தமிழ் மரபை நோக்கித் திருப்ப முயன்றனர். பண்டைச் சித்தர்களைப் போல மக்களை நோக்கி எவரும் பேச இயலாத சமூகச் சூழலில், அரசியல் சூழலில் அக்கருத்தியல்களைக் கட்டுடைப்பது ஒன்றே வழி. ஒற்றைக் கடவுளுக்குள், ஒற்றைச் சாத்திரங்கள், ஒற்றை அரசியல் குடைக்குள், ஒற்றைப் பண்பாட்டுச் சூழலுக்குள் வேதநெறியினர் தமிழரை அடைத்து வைக்க முயலும் இவ்வேளையில் அக்கருத்தியல்கள் ஒவ்வொன்றையும் கட்டுடைத்து அதன் பின்னால் ஒளிந்திருக்கும் நுண்அரசியலை வெளிக்கொணர்ந்து பன்மீயத்தை நிலை நாட்டுவது தமிழுணர்வு கொண்டோர் அனைவரின் கடமையாகும்.
‘பிரம்மம்’ என்ற ஒருகருத்துரு ‘அத்வைதம்’ என்ற கூட்டுக்குள் மூடுண்டு உள்ளது. அதை வட்டத்திற்குள்ளிருந்து வெளியே கொண்டு வந்து மொழியாகிய வெளிக்குள் (Linguistic) நிறுத்தும் போது அது பன்மீயப் பொருண்மையை அளிக்கிறது. பின்கண்ட பட விளக்கத்தின் மூலம் அதன் பன்மீயம் (Pluralism) நிலை நாட்டப்பெறுகிறது.
8. முடிவுரை
பலவகையான நெருக்கடிகள் சூழ்ந்த எதார்த்த வாழ்வில் தமிழ் மாந்தர்க்குக் கற்பனை உலகு ஒன்று தேவைப்படுகிறது. தத்தம் தெய்வத்தைத் தேடுவது ஒன்றே வடிகால் ஆகிறது. சமஸ்கிருத மொழியினரின் வேதாந்தச் சொல்லாடல்களைக் கட்டுடைத்து ஊடுருவிச் செல்லச் சித்தர்கள் சித்தாந்தச் சொல்லாடல்களைக் கையாண்டனர்.
தமிழரும் வைதிக நெறியினரின் சமஸ்கிருதச் சொல்லாடல்களைக் கட்டுடைக்கவேண்டும். “என்னுடைய ‘சுயமே’ என்னுடைய ஆன்மா; என்னுடைய ‘தெய்வமே’ என்னுடைய பிரம்மம் : ‘சமூகமே’ என்னுடைய பரமாத்மா” என மாற்றுச் சொல்லாடல்களைக் கட்டமைக்க வேண்டும். ‘சமூகமே’ பரமாத்மா என்று கூறியவர் டாக்டர் ஹெச்.எஸ்.சின்ஹா (cf.V.Prakasam, ‘Perceiving the Discourse’, P.62).
பராசக்தியிடம் தன் குறைகளைக் கூறி நீக்குமாறு வேண்டிய பாரதியைப் போன்று தமிழர் தத்தம் தெய்வத்திடம் இடைத் தரகர்கள் எவருமின்றி நேரடியாகத் தத்தம் வேண்டுதல்களை முன்வைக்கவேண்டும்; தம் முன்னோர் வழிபாட்டையும், வழிபாட்டு முறைகளையும் மீட்டெடுக்கவேண்டும்; பகுத்தறிவு அடிப்படையிலான புதிய சொல்லாடல்களை உருவாக்க வேண்டும்; சமஸ்கிருத மொழிக்கு அவற்றில் இடமே இல்லாதவாறு தவிர்க்க வேண்டும்.
மேலும், தமிழர் தம் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும். குழந்தை பிறந்தவுடன் பெயர் வைப்பது தொடங்கி, எல்லாச் சடங்குகளுக்கும் பிராமணரை நாடுவதைத் தவிர்க்க வேண்டும். சமூகத்தில் பிராமணர் தீட்டைக் கழிப்பவர்கள், தோஷத்தை நீக்குபவர்கள், வேள்வி மூலம் துறக்கத்துக்கு அனுப்புபவர்கள் என்னும் மூடநம்பிக்கை தமிழ் மக்களிடையே நிலவுவதாலேயே அன்னாரை நாடுகின்றனர். இத்தகைய மூடநம்பிக்கைகள் ஒழிய வேண்டும்.
தமிழரிடையே இதற்கெனத் தீவிரமான தமிழ் இயக்கங்கள் தேவை. தமிழ்ப்பற்று கொண்டோர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்திட்டம் வகுத்துத் தமிழரிடையே தமிழ்ச் சொல்லாடல்களை எடுத்துச்சொல்லல்வேண்டும்.
பயன்பட்ட நூல்கள் (தமிழ்)
1. இ.எஸ்.டி., ஞானவன், செ.. கவிஞர் (தொ.ஆ), தத்துவ தரிசனங்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1909.
2. கமலா, பொ.நா., முனைவர், தெரிதாவின் மானிட அறிவியல்களின் சொல்லாடலில் அமைப்பும், குறியும், விளையாட்டும், காவ்யா, சென்னை, 2015.
3. சுப்பிரமணியன், ச.வே., முனைவர். தொல்காப்பியர் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1988.
4. முத்துமோகன், ந., இந்தியக் கதை : ஏகம் அநேகம் சாதியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2003.
5. முத்துமோகன், ந., மார்க்சியக் கட்டுரைகள், காவ்யா, சென்னை, 2007.
6. முத்துமோகன், ந.. வேதாந்தத்தின் கலாச்சார அரசியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012.
7. முருகரத்தனம், தி., வருணாசிரம தருமமும் வாய்மொழியும் வள்ளுவமும். தமிழ்ச்சோலை, மதுரை, 2004.
8. மெய்யப்பன், ச., டாக்டர், சித்தர் பாடல்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1998.
9. வரதராஜன், கே… இந்திய தத்துவ தரிசனம், பாரதி புத்தகாலயம், சென்னை, 2003.
ஆங்கிலம்
1. Dr.HS.Sinha, Cf.V.Prakasam, Perceiving the Discource, International Conference on Dravidian Linguistics, Souvenir, June 2016, University of Hyderabad, Hyderabad.