குனியமுத்தூர் வேளாளர் சங்கத் தலைவர்களுக்கு வேண்டுகோள்

Viduthalai
1 Min Read

நாகரிகம் பரவிவரும் இந்நாட்டில் வதியும் ஒவ்வொரு சமூகமும் தாங்கள் இதுகாறும் அனுஷ்டித்து வந்த மூடப் பழக்க வழக்கங்களையும்,குருட்டு நம்பிக்கைகளையும் அறவே விட்டு தேச முன்னேற்றத்தில் ஈடுபட்டிருக்கின்றன. ஏனைய சமூகத் தோழர் முன்னேற்ற விஷயத்தில் பாடுபட்டுக்கொண்டிருக்கும்போது, குனியமுத்தூர் தேவேந்திர வேளாளர் சமூகம் மட்டும் ஆதிகாலத்து அனாசாரப் பழக்கங்களை அவைகளில் நம்பிக்கை விடாது கொண்டு சாதிக்கட்டு, சமயக்கட்டு என்னும் விஷயங்களில் தலையிட்டுக் கொள்வதானது வருந்தத்தக்கதே.
சென்ற 1.9.1935ந் தேதி சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு சீர்திருத்த மணம் நடைபெற்றது.

இதைக் குறித்து அச்சங்கத்தின் தலைவர்கள் மேற்படி மணமக்கள் பேரில் குற்றங்கள் சாட்டி அவர்கள் தங்கள் இனத்தவரோடு சம்பந்தப்படக் கூடாது என்னும் கட்டுப்பாட்டையும் செய்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடியான இக்காலத்தில், பணச்செலவு அதிகமின்றியும், மூடப்பழக்க வழக்கங்களை அறவே நீக்கியும், நாகரிகத்திற்குத் தகுந்தாற்போலும் மணஞ் செய்வதில் என்ன குற்றமிருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை. சமூகம் முன்னேற வழிதேடாமல் இச்சிறு காரியங்களில் தலையிட்டு இவர்கள் குதர்க்கத்தையும், மனவேறுபாட்டையும், ஒற்றுமையைக் குலைத்தும் வருவதானது வருந்தத்தக்கதே. இனியாவது நமது தேவேந்திர வேளாளர் சங்கத் தலைவர்கள் எவ்வித இடையூறுஞ் செய்யாமல் குல நலத்தைக் கருதி உழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
– என்.பி. தீவிரம், இருகூர் திராவிட முன்னேற்ற சங்கம்.
26.12.1936

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *