வாழ்விணையர் என்றால், இன்பம் – துன்பம் என்பதில் மட்டுமல்ல!
எல்லா பணிகளையும் பகிர்ந்துகொண்டு செய்யவேண்டும் –குறைந்தபட்சம் பெண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்!
பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு விழாவில் ஆண்களுக்கு மட்டும் சமையல் கற்றுக்கொடுக்கின்ற வகுப்புகள் நடத்தப்படும்!
கோவை, ஆக.23 வாழ்விணையர் என்றால், இன்பம் – துன்பம் என்பதில் மட்டுமல்ல – பணிகளில்கூட இது பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டது – இது ஆண்களுக்கென்று ஒதுக்கப்பட்டது என்று ஒதுக்கப்பட்ட நிலையேகூட அந்த வகையில் இருக்கக் கூடாது. அப்படி எல்லா பணிகளையும் பகிர்ந்துகொண்டு செய்யவேண்டும். குறைந்தபட்சம் பெண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு விழாவில் ஆண்களுக்கு மட்டும் சமையல் கற்றுக்கொடுக்கின்ற வகுப்புகள் நடத்தப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
93 ஆம் ஆண்டு பிறந்த நாள் –
67 ஆவது ஆண்டு இல்வாழ்க்கை தொடக்க விழா – நூல்கள் வெளியீட்டு விழா!
கடந்த 14.7.2024 அன்று கோவையில் நடைபெற்ற பேராசிரியர் மு.வி.சோமசுந்தரம் அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, மு.வி.சோமசுந்தரம் – சோ.வச்சலா இணையரின் 67 ஆவது ஆண்டு இல்வாழ்க்கை தொடக்க விழா மகிழ்வாக, “பெனிட்டோ முசோலினி வாழ்க்கை வரலாறு’’, ‘‘இரு அறிவுச் செம்மல்களின் அரிய கருத்துச் செறிவு’, ‘பத்து விஞ்ஞானிகள் ஒர் அறிமுகம் (ஆங்கில நூலின் மொழியாக்கம்) ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா விற்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நம்முடைய நாட்டில்,
பாராட்டு சொல்கின்ற பழக்கம் கிடையாது!
அது அவர்களுக்காக அல்ல; இந்தக் கொள்கைக்காக, இந்த உணர்விற்காக. நம்முடைய நாட்டில், பாராட்டு சொல்கின்ற பழக்கம் கிடையாது. எல்லாவற்றிலும் தாராளமாக இருப்பார்; செலவாளியாக இருப்பார்; ஆனால், பாராட்டுவதில் மட்டும் கஞ்சத்தனம் இருக்கும். ஓரவஞ்சணை இருக்கும்.
ஆண்களைப் பாராட்டி பழக்கப்பட்டு இருக்கின்றோமே தவிர, பெண்களைப் பாராட்டுகின்ற பழக்கமே கிடையாது.
இன்னுங்கேட்டால், உணவில் உப்பு இல்லையே, சப்பென்று இருக்கிறதே; காரம் இல்லாமல் இருக்கிறதே என்றெல்லாம் கேட்பார்கள்.
சுயமரியாதை நூற்றாண்டான இந்த ஆண்டில் ஒரு கருத்தை வைக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஆண்களுக்கு சமையல் பயிற்சிப் பட்டறைகள்!
இப்பொழுது பயிற்சிப் பட்டறைகள் எங்கே பார்த்தாலும் நடைபெறுகின்றன. கருத்துப் பயிற்சி, கொள்கைப் பயிற்சி போன்ற பயிற்சிப் பட்டறைகள். அதுபோல, ஆண்களுக்கு சமையல் பயிற்சியை சொல்லிக் கொடுப்பதற்காக பயிற்சிப் பட்டறைகளை நடத்தவேண்டும். இதை நான் நகைச்சுவைக்காக சொல்லவில்லை.
சாப்பிட்டு முடித்தவுடன், நம்முடைய தட்டை நாம் கழுவி வைப்பதில்லை.
வெளிநாட்டிற்கு நான் சென்றிருந்தேன் – நம்முடைய பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்காக ஒப்பந்தம் போடுவதற்காக கனடா நாட்டிற்குச் சென்றி ருந்தேன். ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவதற்காக பாலிடெக்னிக் கல்லூரியின் பிரின்சிபல், பேராசிரியர்கள் எல்லோரும் சென்றிருந்தோம். அங்கே ஒரு கல்லூரியில் தங்கியிருந்தோம்.
காலையில், எங்கள் எல்லோருக்கும் சமைத்து வைத்துவிட்டு, கல்லூரிக்குச் சென்றுவிடுவார்கள். நான், பிரின்சிபல் இன்னும் ஒரு சிலர் வீட்டில் அமர்ந்து, புத்தகம் படித்துக் கொண்டிருப்போம்.
அந்த வீட்டில் இருந்த ஓர் அம்மையார், ‘‘உங்களுடைய வீட்டுக்காரர்கள் என்று அறிமுகப்படுத்தினீர்கள்; கடந்த சில நாள்களாக நானும் பார்க்கிறேன். நீங்கள் சமைக்கும்பொழுது உங்களுக்கு உதவி செய்யமாட்டார்களா?” என்று கேட்டார்.
‘‘அவர்களுக்குப் பழக்கமே கிடையாது” என்று சொன்னார்கள்.
வெளிநாடுகளில் ஆண் – பெண் என்ற
பாகுபாடு கிடையாது!
அதேபோன்று நம்முடைய தோழர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்றால், அங்கே ஆண்கள்தான் சமைக்கிறார்கள். பெண்ணா, ஆணா? என்ற பாகுபாடு கிடையாது. பணியிலிருந்து யார் சீக்கிரம் வருகிறார்களோ, அவர்கள் சமைப்பார்கள்.
நம்முடைய தோழர்கள்கூட, ‘‘நான் நன்றாக தோசை சுடுவேன்” என்று சொல்வார்கள். அதைச் சொல்வதற்குக் கூச்சப்படக் கூடாது.
குறைந்தபட்சம் பெண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்!
ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், வாழ்விணை யர் என்றால், இன்பம் – துன்பம் என்பதில் மட்டுமல்ல – பணிகளில்கூட இது பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டது – இது ஆண்களுக்கென்று ஒதுக்கப்பட்டது என்று ஒதுக்கப்பட்ட நிலையேகூட அந்த வகையில் இருக்கக் கூடாது.
அப்படி எல்லா பணிகளையும் பகிர்ந்துகொண்டு செய்யவேண்டும். குறைந்தபட்சம் பெண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். அதற்காக வேஷம் போடவேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. அப்படி ஓர் உணர்வைப் பெறவேண்டும்.
ஒரு திருமணத்தில்கூட நான் பேசியிருக்கிறேன். பெண்கள்தான் சமைக்கவேண்டும் என்பதற்கு என்ன அவசியம்? என்று.
தந்தை பெரியார் அவர்கள்தான் சொன்னார், ‘‘பெண்களை மூன்று வகையில் இன்றைக்கு நாம் கீழ்மைப்படுத்தியிருக்கின்றோம். 1. அலங்காரப் பொம்மைகள் 2. பிள்ளை பெறும் இயந்திரங்கள் 3. சமையல் கருவியாகப் பயன்படுத்துகின்றோம்” என்றார்.
ஆகவே, எல்லா பணிகளையும் பொதுமை யாக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வரவேண்டும் என்று சொன்னேன்.
அதைப் படித்துவிட்டு, ‘இதயம் பேசுகிறது’ மணியன் அவர்கள், ‘‘ஆண்கள் எல்லாம் சமைக்கவேண்டுமா? ஆண்களால் சமைக்க முடியுமா? ஆண்களுக்கு சமைக்கக் கூடிய பயிற்சி கொடுக்கிறீர்களா?” என்று விமர்சனம் செய்திருந்தார்.
ஆண்களுக்கு சமையல் கற்றுக்கொடுக்கின்ற வகுப்புகள் நடத்தப்படும்!
நான் அதற்குப் பதில் சொன்னேன். ‘‘ஏன்யா, நீங்கள் பெரிய அளவிற்கு சமையல் சிறப்பாக இருக்கிறது என்று யாரைச் சொல்லுகிறீர்கள்? நளபாகம் என்றுதானே சொல்லுகிறீர்கள். நளன் என்றால் யார்? ஆண்தானே! திருமண வீட்டு நிகழ்விற்காக 1000, 2000 பேருக்கு சமைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் ஆண்கள்தானே? அந்த வேலைகளை ஆண்கள் செய்யும்பொழுது, வீடுகளில் ஏன் ஆண்கள் சமைக்கக் கூடாது?” என்று கூறினேன். இதை முதலில் கேட்பதற்கு வேண்டுமானால், கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம். அதை முதலில் செய்வதற்குக் கொஞ்சம் தயக்கமாக இருக்கலாம். ஆனால், அது நடைமுறைக்கு வரவேண்டும். அதற்குரிய நல்ல தொடக்கமாக பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு விழாவில் நிச்சயமாக ஆண்களுக்கு மட்டும் சமையல் கற்றுக்கொடுக்கின்ற வகுப்புகள் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமையல் கலையில் பேராசிரியர்களாக நம் தோழர்களே இருக்கிறார்கள்.
வெளிநாடுகளிலும் அவர்கள் பணியாற்றுகிறார்கள்.நம்முடைய பேராசிரியர் மு.வி.சோமசுந்தரம் அவர்களு டைய 93 ஆவது வயதில், சைனிஸ் பள்ளியில் – ராணுவப் பள்ளியில் அவருடைய மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அற்புதமான மாணவர்கள், அவர்கள் எல்லாம் ஆசிரியருக்குக் காட்டுகின்ற மரியாதையைப் பார்த்தீர்களேயானால், இதைவிட வேறு யாரும் எதுவும் சம்பாதிக்கவே முடியாது. சம்பாதனை என்பது இருக்கிறதே, அது ரூபாயைப் பொறுத்தது. அதிகமாக சம்பாதித்தால், வருமான வரித் துறையினருக்குப் பயப்படவேண்டும்; நிம்மதி இருக்காது, தூக்கம் வராது.
ஆனால், பேராசிரியர் சம்பாதித்திருக்கும் சம்பாத்தியம் என்பது – இன்றைக்கு அவருடைய மாணவர்கள் எல்லா துறைகளிலும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நன்றியோடு இருக்கிறார்கள்.
பேராசிரியரின் மாணவர்
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார்!
இன்றைக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக பேராசிரியர் மு.வி.சோமசுந்தரம் அவர்களுடைய மாணவர் இருக்கிறார். இதைப்பற்றி பேசும்பொழு தெல்லாம் பெருமையாகப் பேசுவார்.
தலைமை நீதிபதியாக வந்து, அதற்குப் பிறகு அவர் ஓய்வு பெறக்கூடிய நிலை வரும்.
இதுபோன்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். அதேபோல, அவருடைய அற்புதமான பிள்ளைகள் – அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தாலும், இராணிப்பேட்டையில் இருந்தாலும் – வேறு எங்கே இருந்தாலும், எல்லாப் பிள்ளைகளுக்கும் கட்டுப்பாடு. இவர் ராணுவப் பள்ளியில் இருந்ததினால், அந்தக் கட்டுப்பாட்டை தன்னுடைய குடும்பத்தினரிடையேயும் கொண்டு வந்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தொடங்கிய ஹெட்கேவருக்கு குரு!
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சிறப்பான நிகழ்ச்சி இது. புத்தகங்களைப் பொறுத்தவரையில் நண்பர்களே, ‘‘நிழல் இராணுவங்கள்” என்று சொல்லியிருக்கிறார். ஆஸ்.எஸ்.எசைப்பற்றி சொன்னார்கள். முசோலினியைப்பற்றிய கருத்தை இங்கே சொன்னார்கள். அந்த முசோலினியைச் சந்தித்துப் பேசியவர் ஹிந்துமகாசபையின் மூஞ்சே என்பவர், அவர்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு அடித்தளம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தொடங்கிய ஹெட்கேவருக்கு அவர்தான் குரு.
வெள்ளைக்காரர்களை வசப்படுத்தி, உங்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம் என்று அந்த மூஞ்சே சொல்லியிருக்கிறார்.
ஆகவே, “பெனிட்டோ முசோலினி வாழ்க்கை வரலாறு’’ என்ற புத்தகத்தை நீங்கள் பரப்பவேண்டும்.
டாக்டர் சந்திரசேகர்
அடுத்தபடியாக நண்பர்களே, டாக்டர் சந்திர சேகரைப்பற்றி சொன்னார்கள். சந்திரசேகர் அவர்கள், எனக்குப் பேராசிரியராக வரவேண்டியவர். ஆனால், எனக்கு நண்பராக வந்தார்.
அவர் உலக அளவில் பொருளாதார நிபுணர். அதுமட்டுமல்ல, இந்தியப் பகுத்தறிவாளர் கழகத்திற்குத் தலைவராக இருந்தார். அவரை, பெரியார் திடலுக்கு நாங்கள் அழைத்திருந்தோம். அப்படி அழைத்தபொழுது, வேலூரில் அவருடைய தந்தையார் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்தார். டார்ப்பிடோ
ஏ.பி.ஜெனார்த்தனம் அவர்களுக்கு ஆசிரியராக இருந்தவர் அவர்.
டாக்டர் சந்திரசேகர் அவர்களுடைய ஆங்கில உரை மிகச் சிறப்பாக இருக்கும். உலகத்தில் யாரோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு ஆங்கிலத்தில் வேகமாகப் பேசக்கூடியவர், சிறப்பாகப் பேசக்கூடியவர்.
அய்.நா. அவையில் மிகவும் வேகமாகவும், நீண்ட நேரமாகவும் பேசிய பெருமை பாகிஸ்தானைச் சேர்ந்த வருக்குத்தான். அன்றைய வெளிநாட்டு அமைச்சராக இருந்தவர். அவர் மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்தவர்.
இரண்டு பேர் முத்திரை பதித்தார்கள்!
அதற்கு அடுத்தபடியாக இரண்டு பேர் முத்திரை பதித்தார்கள் அய்.நா. அவையில்.
ஒன்று, டாக்டர் சர்.ஏ.இராமசாமி முதலியார் அவர்கள். மிகப்பெரிய அளவில் அவரது உரை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
இரண்டாவதாக, ‘‘இந்தியன் பாப்புலேசன்” என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றியவர் யார் என்று சொன்னால், டாக்டர் சந்திரசேகர் அவர்கள்தான்.
டாக்டர் சந்திரசேகர் அவர்களை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், ஒன்றிய இணையமைச்சர் பதவி கொடுத்தார்.
அய்.நா. உரையின் குறிப்புகளில் எழுதியிருக்கிறார்கள்!
குடும்ப கட்டுப்பாட்டினை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சொன்ன டாக்டர் சந்திரசேகர் அவர்கள், அதை நடைமுறையில் செய்பவர்கள் யார் என்று சொன்னால், வேறு எங்கும் இல்லாத பெருமை, தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. இதை அய்.நா. உரையின்போது குறிப்புகளில் எழுதி யிருக்கிறார்கள்.
இந்தியாவில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு இருக்கிறது என்றால், அதில் வெற்றி பெற்றிருப்பது தமிழ்நாடு – அப்படி வெற்றி பெற்றதற்குக் காரணம் ஒரு சமுதாயப் புரட்சி இயக்கம் – எல்லா இடங்களிலும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது என்ற பிரச்சாரம்தான்.
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம்!
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ள ஓர் அம்மையார் நம்மிடம் மிகவும் நட்பாக இருப்பவர். நம்முடைய நாட்டின்மேல் மிகவும் அக்கறை கொண்ட வர். நான் அங்கே சென்றிருந்தபொழுது எனக்கு அறிமுகமானார்.
என்னிடம் அவர்,
‘‘உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கவேண்டும்?” என்றார்.
‘‘கேளுங்கள்!” என்றேன்.
‘‘உங்கள் நாட்டில் மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருக்கிறது. சமூக இயக்கத்தை நீங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். மக்கள் தொகைக் கட்டுப்பாடு பிரச்சாரத்திற்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்கவேண்டும். பெரியார் செய்ததைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே, நீங்கள் ஏன் அதற்கு முன்னுரிமை கொடுக்கக்கூடாது?” என்று கேட்டார்.
பெரியார் அவர்களின் இயக்கம் செய்த பிரச்சாரத்தினால்தான்….
நான் அதற்குப் பதில் சொன்னேன், ‘‘பெரியார் அவர்களின் இயக்கம் செய்த பிரச்சாரத்தினால்தான் தமிழ்நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஆனால், குறுக்கே ஒரு கருத்தைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஏனய்யா இத்தனை பிள்ளைகள் பெற்றிருக்கிறாயே? என்று ஒருவரிடம் கேட்டால், ‘‘பகவான் கொடுக்கிறான்” என்று பதில் சொல்கிறார்” என்று சொன்னேன்.
இதைக் கேட்டவுடன், அந்த அம்மையார், ‘‘இதற்கும், கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டார்.
‘‘எங்கள் ஊரில் அப்படித்தான் சொல்லுவார்கள்” என்றேன்.
பகவான் பிள்ளையை மட்டும் கொடுத்தால், அவனைவிட மோசமானவன் வேறு யார்?
பெரியார்தான் கேட்டார், ‘‘பகவான் கொடுத்திருந்தால், பத்து பசு மாட்டையும் சேர்த்துக் கொடுத்திருப்பானே? வீட்டையும் கொடுத்திருப்பானே? அதையெல்லாம் கொடுக்காத பகவான் பிள்ளையை மட்டும் கொடுத்தால், அவனைவிட மோசமானவன் வேறு யார்? என்று.
பகவான் கொடுக்கிறான், பகவான் கொடுக்கிறான் என்று சொல்லுகிறீர்களே, பகவான் முட்டாளா? பகவான் பொறுப்பில்லாதவனா? குழந்தைகளை மட்டும் கொடுத்துவிட்டு, கஷ்டப்படு என்று விட்டுவிடுவானா?
‘‘கருணையே வடிவானவன் கடவுள்” என்று சொல்கிறீர்களே, அவன் எல்லாவற்றையும் சமமாகக் கொடுக்கவேண்டாமா?என்று வேடிக்கையாக பெரியார் கேட்பார் என்று அந்த அம்மையாரிடம் சொன்னேன்.
உங்கள் நாட்டுக் கடவுளுக்கும், எங்கள் நாட்டுக் கடவுளுக்கும் வேறுபாடு உள்ளது!
உடனே அந்த அம்மையார், ‘‘உங்கள் நாட்டுக் கடவுளுக்கும், எங்கள் நாட்டுக் கடவுளுக்கும் வேறு பாடு உள்ளது. உங்கள் நாட்டுக் கடவுள் மிகவும் வித்தி யாசமானவர். உங்கள் நாட்டுக் கடவுள் மிக வேகமாக வேலை செய்கிறார்” என்றார்.
டாக்டர் சந்திரசேகர் அவர்கள், தந்தை பெரியார் அவர்களிடம் சில கேள்வி கேட்டார்.
மூக்கும், நாக்கும் எதைத் தவிர்க்கிறதோ,
அதைத் தவிர அத்தனையையும் சாப்பிடுவேன்!
அய்யா, ‘‘நீங்கள் 94 வயதில் இவ்வளவு வேலை செய்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கை நீளுவதற்கு என்ன ரகசியம்?” என்று கேட்டார்.
உடனே அய்யா அவர்கள், ‘‘என்னைப் பொறுத்த வரையில், மூக்கும், நாக்கும் எதைத் தவிர்க்கிறதோ, அதைத் தவிர அத்தனையையும் சாப்பிடுவேன்” என்றார்.
‘‘எனக்குக் கட்டுப்பாடெல்லாம் கிடையாது. கூட இருக்கும் மணியம்மையார் வேண்டுமானால், என்னைக் கட்டுப்படுத்துவார்களே தவிர வேறொன்றும் கிடையாது” என்றார்.
அடுத்த கேள்வியை கேட்டார், ‘‘நம்முடைய நாட்டில் இருக்கும் பெண்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி?”
50 சதவிகித இட ஒதுக்கீட்டை பெண்களுக்குக் கொடுக்கவேண்டும்
‘‘நம்முடைய நாட்டில் இருக்கும் பெண்கள் பிரச்சினையை தீர்க்கவேண்டுமானால், 50 சதவிகித இட ஒதுக்கீட்டை பெண்களுக்குக் கொடுக்கவேண்டும்” என்றார் தந்தை பெரியார்.
இந்த கேள்வி – பதில்கள் எல்லாம் அகில இந்திய வானொலியில் பதிவாகிக் கொண்டிருக்கின்றது.
அய்யா அவர்கள் இப்படி பதில் சொன்னவுடன், சந்திரசேகர் அவர்கள் குறுக்கீட்டு, ‘‘அய்யா, உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும். பெண்களுக்கு 50 சதவிகிதம் என்றால், ஆண்களாகிய நாங்கள் எப்படி அரசாங்கம் நடத்துவது?” என்று கேட்டார்.
பட்டென்று அய்யா அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னார், ‘‘ஏனய்யா, எதற்காக பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்று நினைக்கிறீர்கள். ஒவ்வொருவருடைய வீட்டிலும், அவருடைய மகளுக்குக் கிடைக்கப் போகிறது; தங்கைக்குக் கிடைக்கப் போகிறது; மனைவிக்குக் கிடைக்கப் போகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அவரவர் வீட்டுக் குடும்பப் பெண்களுக்குத்தானே கிடைக்கப் போகிறது” என்று சொன்னார்.
எங்களுக்கெல்லாம் புரியாத விஷயத்தை…
சந்திரசேகர் அவர்கள், ‘‘நாங்கள் எல்லாம் பெரிய பெரிய தத்துவங்களையெல்லாம் படித்திருக்கிறேன் – ஆனால், எங்களுக்கெல்லாம் புரியாத விஷயத்தை தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய ஆழ்ந்த சிந்தனையின்மூலமாக, எவ்வளவு அற்புதமாக கொஞ்ச நேரத்தில் எனக்கு சொன்னார்; எனக்கு ஒரு ஞானம் பிறந்தது” என்றார்.
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்!
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான பெரியாருடைய சிந்தனையினுடைய வாசகம்தான், அய்யா சோமசுந்தரம் அவர்கள், அவருடைய வழியைப் பின்பற்றிய குடும்பம்தான்; நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்.
எனவே, அவருடைய நூற்றாண்டு விழாவையும் நாம் கொண்டாடுவோம்; அதில் நாம் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிப்போம்.
எழுதுங்கள், பேசுங்கள், உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.