கிண்டி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக.22 சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்ஜகடே நேற்று (21.8.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யங்களிலும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யங்களும் இணைந்து ஆக.23-ஆம் தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.

கிண்டி – ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெறும்.
இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, அய்டிஅய், டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித் தகுதிஉடையவர்கள் பங்கேற்கலாம்.
இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று பணிக்காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. இம்முகாமில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவை இல்லை. இம்முகாமில் கலந்துகொள்ளும்வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை, தமிழ்நாடு தனியார் துறைவேலைவாய்ப்பு இணையதளத்தில் www.tnprivatejobs.tn.gov.in பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *