மும்பை, ஆக.22- நாட்டையே அதிரவைத்த மகாராட்டிரா சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கில் 3 கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்ட தற்கு எதிராக அவரது மகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மும்பை உயர்நீதிமன்றத்தில் தபோல்கர் மகள் முக்தா தாக்கல் செய்த மனுவில், விடுதலை செய்யப்பட்ட கொலையாளிகள் 3 பேரும் இந்துத்துவா அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பதை விசாரணை நீதிமன்றம் கவனத்தில் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மகாராட்டிரா மாநிலத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்த சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர். 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி புனே நகரில் அதிகாலையில் நடைபயிற்சிக்குச் சென்ற போது அடையாளம் தெரியாத நபர்களால் தபோல்கர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
நரேந்திர தபோல்கரின் படுகொலை நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை செசன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் ஸநாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சச்சின் அன்டுரே, சரத் கலாஸ்கர் ஆகியோர் மட்டுமே குற்றவாளிகள் என்றும் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் வீரேந்திர சிங் தாவ்டே, சஞ்சீவ் புனலேகர், விக்ரம் பாவே ஆகியோர் கொலையாளிகள் அல்ல எனவும் செசன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த நிலையில் செசன்ஸ் நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் தபோல்கர் மகள் முக்தா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தந்தை தபோல்கர் கொலையாளிகளான வீரேந்திர சிங் தாவ்டே, சஞ்சீவ் புனலேகர், விக்ரம் பாவே ஆகியோர் இந்துத்துவ தீவிரவாத அமைப்பான ஸநாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்தவர்கள் என்பதை செசன்ஸ் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. தபோல்கர் படுகொலை ஒரு திட்டமிட்ட பெரிய சதி. இந்த சதிக்குப் பின்னால் நிறைய பேர் உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அனைவரும் கொலையாளிகள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்தும் 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆகையால் செசன்ஸ் நீதிமன்றம் 3 பேரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் தபோல்கர் மகள் முக்தா.
இந்த மனுவை நீதிபதிகள் ரேவதி மோகிதே மற்ரும் பிரிதிவிராஜ் சவாண் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் சி.பி.அய். மற்றும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் பதிலளிக்க தாக்கீது அனுப்ப மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.