‘‘தந்தை பெரியார்தான் தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர்’’ என்று நூலை வெளியிட்டு திருப்பூர் கே.சுப்பராயன் எம்.பி., புகழாராம்!
விழா மேடையிலேயே 100 புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன!
கோபி, ஆக. 21- கோபிசெட்டிபாளையம் கழக மாவட்டத்தின் சார்பில் மண்டல் குழுவும் திராவிடர் கழகமும் நூல் அறிமுக விழா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள நேகாசிறீ அரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்று நூலை வெளியிட்ட திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், ‘‘தமிழ்நாட்டின் அடையாளமாகவும், தமிழ்நாட்டின் சிற்பியாகவும் தந்தை பெரியார்தான் திகழ்கிறார். பெரியாரைத் தவிர வேறு யாருக்கும் அந்த தகுதி கிடையாது. தனிப்பெரும் தலைவர் அவர்‘‘ என புகழாரம் சூட்டினார்.
கோபிசெட்டிபாளையம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், ‘‘மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்‘‘ நூல் அறிமுக விழா 18.8.2024 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. விழாவிற்குத் தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெ.குணசேகரன் வரவேற்றுப் பேசினார். மாவட்டக் கழகக் காப்பாளர்கள் இரா.சீனிவாசன், பெ.இராஜமாணிக்கம், ந.சிவ லிங்கம், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் அ.குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான கே.சுப்ப ராயன் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
அவரது உரையில், ‘‘திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமிழர்களின் உயர்வுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பயன் பெறுவதற்கு வலிமையான அடித்தளத்தை இட்டவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அதேநேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்பெறும் வண்ணம் உருவாக்கப்பட்ட மண்டல் குழுவின் அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டு வர ஆசிரியர் வீரமணி அவர்கள் எத்தகைய உழைப்பைச் செலுத்தி இருக்கிறார் என்பதனை இந்த நூலில் வரலாற்று ஆவணமாக உருவாக்கி உள்ளார். இதற்கு அடிப்படைக் காரணம் தந்தை பெரியார்தான்.
தந்தை பெரியார்தான் தமிழ்நாட்டின் தலைசிறந்த தகைசால் தமிழர். தனிப்பெருந் தலைவர். அவருடைய இடத்தில் வேறு யாரும் கிடையாது. தந்தை பெரியாரை விட இன்னொரு சிறந்த தலைவர் தமிழ்நாட்டில் இல்லை. அந்தத் தகுதியும் வேறு யாருக்கும் கிடையாது என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
முன்னதாக திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி ஏற்புரை ஆற்றும்போது நூலை உருவாக்கிய பின்ன ணியும் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்னும் அடைய வேண்டிய இலக்குகளைப் பற்றியும் குறிப்பிட்டார். கோபிசெட்டிபாளையம் நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.நாகராஜ், தமிழ்நாடு அரசின் வணிகர் நல வாரிய உறுப்பினரும், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணியின் அமைப்பாளருமான கே.கே.செல்வன், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பெ.பொன்னுச்சாமி, லோ.மனோஜ்குமார், மாவட்ட ப.க. செயலாளர் சீனு.தமிழ்ச்செல்வி, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் மங்கலம் வே. முத்துராமலிங்கம், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வெ.மணிமாறன், வழக்குரைஞர் மா.கந்தசாமி, தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் எம்,சிவபாலன், நம்பியூர் காமராஜ் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் என்.கே.ஜவகர் ஆகியோர் நூல்களைப் பெற்று வாழ்த்திப் பேசினர்.
நூலினை திறனாய்வு செய்து ஈரோடு மேற்கு மாவட்ட மதிமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் சு.விஜயகுமார் மிகச் சிறப்பாகக் குறிப்பிட்டார். அவரது உரையில், ‘‘ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உழைப்பை சிறந்த முறையில் செதுக்கி ஆவணப்படுத்தி உள்ளனர்.
திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி, மண்டல் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த உழைத்துள்ளது. திகார் சிறை வரை சென்று போராடி உள்ளனர். இந்தியா முழுவதும் திராவிடர் கழகத் தலைவர் சென்று போராடி உள்ளார். இந்திய பிற்படுத்தப்பட்ட மக்கள் திராவிடர் கழகத்திற்கு நன்றியோடு இருக்கக் கடமைப்பட்டவர்கள்’’ என்றும் குறிப்பிட்டார். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் இணைப்புரை வழங்கினார்.
இந்த விழாவில் கழகத் தோழர்கள் பொதுக்குழு உறுப்பினர் யோகானந்தம், மாவட்ட துணைத் தலைவர் பொன்.முகிலன், பொதுக்குழு உறுப்பினர் அ.பாட்டுச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் வெ.ப.அரங்கசாமி, க.மூர்த்தி, மாவட்ட ப.க. தலைவர் கே.எம்.கருப்பணசாமி, மாவட்ட ப.க. அமைப்பாளர் பொறியாளர் சிவக்குமார், கோபி ஒன்றிய தலைவர் சிவக்குமார், நம்பியூர் ஒன்றிய தலைவர் திருமூர்த்தி, செயலாளர் செ.பிரசாந்த்குமார், நம்பியூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் ஜெ.தட்சிணாமூர்த்தி, செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் அ.அஜித்குமார், அந்தியூர் ஒன்றிய தலைவர் கோவிந்தன், ஒன்றிய செயலாளர் லோகநாதன், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் ப.திலகவதி, மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் சி.அறிவுச்செல்வி, மதிவதனி, நம்பியூர் ஒன்றிய துணைச் செயலாளர் கார்த்தி, பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பிரபு, மாவட்ட துணைத் தலைவர் பழனிச்சாமி, பகுத்தறிவு ஆசிரியரணி மு.வெள்ளதுரை, த.விஜயசங்கர், நம்பியூர் பேரூர் திமுக செயலாளர் எஸ்.பி.ஆனந்தகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் செ.சண்முகசுந்தரம், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மூனாம்பள்ளி மணி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டி போட்டு நூலினை பெற்று மகிழ்ந்தனர். விழா மேடையிலேயே 100 நூல்கள் விற்றுத் தீர்ந்தன.
விழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட கழகக் கொடிகள் கோபிசெட்டிபாளையம் – திருப்பூர் முதன்மைச் சாலையில் பட்டொளி விசப் பறந்தன. விளம்பரப் பதாகைகள் விழா அரங்கத்தில் நுழைவுவாயிலில் கட்டப்பட்டிருந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளை கழகத் தோழர்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். திராவிடர் கழகமும், ஆசிரியர் வீரமணி அவர்களும் மண்டல் குழு அறிக்கையை அமல்படுத்த எவ்வளவு உழைப்பைச் செலுத்தி உள்ளனர் என்பதனை கோபிசெட்டிபாளையம் பகுதி ம்க்களுக்கு அறியச் செய்யும் வண்ணம் நிகழ்ச்சி அமைந்திருந்தது.