திராவிடர் இயக்க வரலாற்றில் தந்தை பெரியாருடன் முப்பது ஆண்டுகள் உடன் பயணித்து இன்றைக்கு பெரியார் நிறுவிய திராவிடர் கழகத்தை வழிநடத்திடும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது பல்வேறு பணிகளுக்கிடையே பயிற்சியாளர்களைச் சந்தித்து உரையாற்றினார். தமது உரையில் குறிப்பிட்டதாவது:
திராவிடர் இயக்க கருத்தியலை புரிந்து கொள்ள முனைவதில் இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஒரு புதிய ஆர்வம் உருவாகி வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது; வரவேற்க வேண்டியது. திராவிடர் இயக்க ஆவணங்களை முழுமைப்படுத்திடுவதில் ‘பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்’ பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. நூற்றாண்டைத் தாண்டிச் செல்லும் தற்போதைய சூழலில், காகிதத்தில் உள்ள ஆவணங்களை பாதுகாப்பதும் என்பது தலையாயப் பணியாக உள்ளது. புதிய தேடுதலோடு, இருக்கும் தரவுகளைப் பாதுகாப்பது அவசியமாகிறது. அந்த வகையில், இதுவரை சேகரிக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட தரவுகளை ‘டிஜிட்டல்’ முறையில் நகலெடுக்கும் பணி துவங்கியுள்ளது.
ஆய்வாளருக்குப் பயன்படும் வகையில், புதிய தொழில்நுட்பத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இதுவரை உள்ள தரவுகளின் எண்ணிக்கையினைப் பார்க்கும் பொழுது, நடத்தப்பெற்ற ஆய்வுகள் மிகவும் குறைவே. பயிற்சியாளர்களாகிய ஆய்வு மாணவர்களுக்கு பெரியார் திடல் நூலகமும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் பேராசிரியப் பெருமக்களும் உறுதுணையாக இருப்பார்கள். கடந்த கால இயக்க நிகழ்வுகளுக்கு நேரடி சாட்சியாக நாங்களும் இருக்கிறோம்’’ என ஆசிரியர் அவர்கள் தமது வழி காட்டுதலுரையில் குறிப்பிட்டார்.